Tuesday, April 1, 2014

சாரல் கவிதைகள்



அனுமதிக்கு காத்திராமல் 
அவிழும் சொல்லின் 
மகரந்த விகசியை எழுத 
பின்னிப் பிரிந்த 
ஞாபகத்தை
மல்லிமொட்டூறும் வாசச்செய்தியை
காற்று முடங்கும் பொழுத்துக்குள்
லாவகமாய்
கிடுகுகள் முடையும்
கற்பனைக்குள்
சந்தமேற்றி
இவளானதன் இசைச்சீர்


****                        ****

பகடையின்
ஏறுமுகங்களை
இறங்குவிகிதத்தில்
எத்தனையாவது
முறையாகவோ எண்ணிக்கொண்டிருந்தவனின்
கைக்கிளை
பிறிதொரு நாளில்
பூக்காடானது


****                             ****

தொட்ட விரல்களிலெல்லாம்
 பட்டாம்பூச்சியை
 ஒட்டிக்கொண்டவளின் 
சிரிப்பணைய
விரிகிறது நிறங்கள்...


-புவனம்  

Friday, March 21, 2014

கதையின் கதை



மரப்பாச்சிகளின் நிழலுக்கும் 
உளி அறைந்து கொண்டிருந்தவனின் 
ஊர் அது 

உடைந்தவர்களின் வார்த்தைகளுக்கு
பசை விற்பவனாகவே
அறிமுகமாகினான் மற்றொருவன்

ஊரானுக்கும் ஒட்டவந்தவனுக்குமிடையே
இளக்கமற்ற
புன்னகையை முறித்துப் போட்டான்
மூன்றாமவன்

அது
வில்லாகி
பாம்பாகி
பின்
கயிறாகத் திரிந்ததே கதை

-புவனம்

Thursday, March 6, 2014

A SEPARATION - பெர்ஷியன் மொழித் திரைப்படம்



அழிப்பான் கொண்டு தன் பக்கமிருக்கும் நியாயமின்மையை இல்லாமல் செய்ய முயலும் எதுகளிப்பையும்,
 தன்பொருட்டு குற்றத்தையும் பிறர் மேல் ஏற்றிச்சொல்லும் எக்காளத்தையும்,
தன் நிலைபாடே தனக்கு சரி என்பதாய்
சுய நலமிகளாய் உலாவும் மனித உயிரிகளின்  
அன்றாடத்தின் அடைபொருள் சொல்லும்  திரைக்கதை  

பொருளீட்டுவதில் கணவனுக்குச்  சமமாய் இயங்கும் ஈரானின் இக்காலத்து பெண்மணி சிமின்.
அடுத்த படிநிலை உய்ய நாட்டை விட்டு இடம்பெயர்வது அவள்விருப்பம்.. கணவன் நடேர்   தன் வயதான, சுயநினைவு தவறிய தன் தந்தையை தனியே விட்டு வர மறுப்பதிலும், விவாக பந்தத்தை அத்தோடு முடித்துகொள்ளத் துணிந்ததிலும் தொடங்குகிறது கதை.

தாய், தந்தை பிரிவில் எவர் பக்கம் நியாயமென தெளியாது குழம்பும் மகள் அப்போதைக்கு தந்தையுடனே தங்கி விடுகிறாள்.
தன்னையே அடையாளம் காணவியலாத, எந்நேரமும் கண்காணிப்பு தேவைப்படும் வயதான தந்தையை கவனித்துக்கொள்ள ஆள் அம்ர்த்துகிறான் நடேர்  என்பது மற்றுமொரு இடியாப்ப சிக்கலின் ஆரம்பம்.

வேலைக்கு வரும் பெண்மணியோ கர்பிணி, கணவன் அறியாது.. பணமுடைச்சிக்கலை கலையவே அந்த வேலையை தேர்ந்தெடுத்தவள்.வேலைப்பளு, உடல்நிலை ஒத்துழையாமை காரணமாய் மருத்துவம் பார்க்க செல்ல வேண்டிய நிலை அவளுக்கு.
யாருமில்லாத நேரத்தில் பெரியவர் எழுந்து வெளியே போய்விடாது இருக்க உறங்கும் அவரை எழமுடியாது கட்டிவைத்து போகிறாள் ..

மீறி எழமுயன்ற அவர் விழுந்து உயிருக்கு போராடிய நிலையில் பார்த்ததும் கொதித்து, கர்பிணி என்பதையும் மறந்து வீட்டைவிட்டு ஆவேசமாய் வெளியே தள்ளுகிறான் நடேர். 


கர்ப்பம் கலைந்த நிலையில், கடுங்கோபக்கார கணவனின் நிந்தனைக்கு பயந்து முதலாளியைக் குற்றம் சொல்லி நீதி கேட்கிறாள் அவள்..
தந்தையின் உயிர் இவளால் போகவிருந்தது...இவளே குற்றவாளி என்கிறான் அவன். 

நீதியின் முன் இருவருமே சமநிலைக் குற்றவாளிகள் என்றானதன் பின் வெளியேறப்  பிறக்கிறது பொய்க்கு மேல் பொய்.இதில் தந்தைபக்கமிருக்கும் நியாயமின்மை உறுத்துகிறது மகளுக்கு.

மொத்தத்தில் 
அத்தனை பாத்திரங்களும் குழப்பம், நெருக்கடி,நிலையின்மை, பிரச்சனை, பொய்மை இத்யாதிகளில் அடைபட இத்தனைக்கும் தானே காரணம் என இம்மியும் உணராது எவ்வித அடைபடலும் இல்லாது நிறைந்த நிம்மதியோடு உலவுவது  பெரியவர் பாத்திரமே.. 
நிலைதப்புவதை விட நினைவு தப்புவது மேல் எனப்படுவதாய்.. 

பெரும்பாலும் நம் பக்கத்துக்கு படங்களில் இருக்கும் ஜிகினாத்தனங்கள் கொஞ்சமும் இல்லாமல் கதாபாத்திரங்களின் உரையாடல்களைக் கொண்ட காட்சிகளில் நகர்த்தியே  படத்தை நிமிர்த்தமுடியும் இரானியத் திரைப்படங்கள் எப்போதும் வியப்பை தருகிறது.
2011-ன் சிறந்த வெளிநாட்டுப் படமாக ஆஸ்கார் உட்பட பல விருதுகள் வாங்கிய திரைப்படம் 

Tuesday, March 4, 2014

உடலைத் தாண்டியும் இவளென

பொய்த்த மழைக்கு 
பிறழ்ந்து 
வனந்தோறும் சுற்றித்திரியும் வெயில்
முதுகில் படர்த்திய வெம்மையை நீவும் 
கொம்புகிளைத்த மான் 

நிரம்பிய நீருக்கு
தாகிக்கும் காக்கைகளுக்கே
காத்திருக்கும்
கழுத்துவரை
கற்களிட்ட
குவளை

தனிமை தின்றது போக
எஞ்சியதன்
முத்தம் பகிர
ஆகாயத்துக்கு எவ்வியதாயொரு
ஊருணித்தவளை

வரைவில் ஏற்றிய
இத்தனைக்கும் பிறகு
தீண்டாத நிறங்களின்
தீட்டலில்
இவளும்

-புவனம் 

Monday, March 3, 2014

என்னைப்பிடித்த நிலவு

ஊர்சுற்றி வரும்போது புர்ஜ் கலிபா,ஐபின் பதுதா, எமரைட்ஸ் மால் பக்கங்களில் அடிக்கடி கண்ணில் இப்படி முதிந்த ஜோடிகள் தென்படுவார்கள்.. 

தலைப்பட்ட எல்லா கடமைகளும் முடித்தபின் இன்னமும் ருசிகுறையாத தேனிர் காலத்தை சேர்ந்து பருகும் நோக்கோடு எந்தெந்த நாட்டிலிருந்தோ வந்த ஜோடிகள் கைகோர்த்து திரியும் போது லேஸா பொறாமை கூட எட்டும்.

மிகுந்த ஈடுபாட்டோடும், ரசனையோடும் சுற்றி வரும் இவர்களை பார்க்கும் போது தோன்றும் .. ஏன் நம்ம ஊர் மக்கள் இப்படி முதிர்ச்சியை கொண்டாடுவதில்லை, ஐம்பதை தாண்டும் போதே ஏன் இப்படி அதீதமான ஓய்ச்சலோடு அப்பாடா எல்லாம் முடிந்ததென வெறும் கடமைக்காவே வாழ்வது போல்..

ஒட்டுமொத்தமாய் எல்லா கவலைகளையும் உள்ளே இழுத்துப்போட்டுக்கொள்வதும், விரைவில் நோய் தேடிக்கொள்வதும், நம்ம கையில் என்ன இருக்கு என்ற விட்டேத்தியான போக்கும் .. வயசாயிடுச்சில்ல என்ற பதத்தை அதிகம் புலங்குவதும் நம்ம ஆட்கள் தான்.

விரும்பிய வகையில் பிடித்ததை செய்து, ரசனையோடு யாரேனும் தென்பட்டால் எதிர்மறை விமர்சனத்திற்கும் குறைவில்லை " பாரேன் நிறைய சதங்கை வைத்து கொலுசு, கையில் மருதாணி, இந்த வயதில் மேலாமினுக்கிதனம் தேவையா " , சில பெண்களே அடுத்த பெண்களை பார்த்து, வயதை முன்வைத்து ஊர் பக்கம் விமர்ச்சிப்பதை பார்க்க கடுப்படிக்கும் ...

வயதில் என்ன இருக்கு
வாழும் வரை கையில் அள்ளிய
ஈரமணலில் பதம் செய்யலாம்
புன்னகைக்கும் பதுமைகளை

புதுமைப்பித்தனில் செல்லம்மாவில் மூன்று விஷயம் பிடித்தது

* கதை முடியும் இடத்தில் இருந்து தொடங்கிய போதும் ,
முடிவே தெரிந்த பின்னும் சுவரசியத்தின் சொட்டு மாறாமல் கதை நகர்ந்த விதம்.

* நோய் படுக்கையில் கிடக்கும் பழுத்த இல்லாளுடன் அவளின் இறுதி சுவாசிப்பு வரை முதிர்ந்த காதலோடு கணவர்.

* கடைசி நிமிடம் வரை தாய்மடிக்கும், புதுபுடவைக்குமான ஆசைகளோடு உயிர்த்திருக்கும், தலை நிமிர்த்தி நிலைக்கும் வரை தன் உடல் சுத்தம் முதற்கொண்டு தனக்கானதை தானே செய்துகொள்ள விழையும் செல்லம்மாவின் வீம்பு சுயம்.


எழுதி எத்தனை வருடங்கள் ஆன பின்பும் புதுமைப்பித்தன் ஈர்க்கும் எழுத்தில்

//மனசில் வருத்தமில்லாமல், பிலாக்கணம்
தொடுக்கும் ஒரு பெண்ணின் அழுகையில் வெளிப்பட்ட வேஷத்தை மறைப்பதற்கு வெளியில் இரட்டைச்
சங்கு பிலாக்கணம் தொடுத்தது.//

இந்த கடைசி வரியில் எஞ்சியிருக்கிறது நிதர்சனத்தின் உயிர்

Why did you come to my house - கொரியன் திரைபடம்






தொடர்ந்து பின் துரத்தும் தோல்விகளில் விரக்தியடைந்த ஒருவன் வாழ்வில் கிஞ்சித்தும் படிப்பற்று தற்கொலைக்கு முயல்கிறான். ஆறுமுறை அதிலும் தோற்றவனை எழாவது முறை ஏமாற்றாமல் உயிரை அறுக்க கயிறு கழுத்தில் இறுகிகொண்டிருக்கும் வேலையில், அவன் மரணத்தை துளைக்கும் கதவுகளைத் திறந்து வீட்டிற்க்குள் வருகிறாள் ஒருத்தி..

அவளால், அதே கயிற்றில் கை, கால்கள் பிணைக்கப்பட்டு சொந்த வீட்டிலேயே சிறை வைக்கபடுகிறான் அவன்

எதிர்வீட்டில் வசிப்பவனை வேவுபார்க்க இந்த வீட்டை தேர்ந்தெடுத்தவள் அவள்.பள்ளி நாட்களில் நேர்ந்த இனகவர்ச்சிப் பிடிப்பை காதல் என்றும், அதில் தான் தோல்வியடைந்தவள் என்றும் ஏய்த்தவன் எதிர்வீட்டில் இருப்பவன். அவனை கொன்றுவிடுவதே தன் வாழ்வின் லட்சியம் என்கிறாள்.

அந்த பெண்ணின் துறுதுறுக்கும் குழந்தை முகம்.எந்நேரமும் கண்காணித்து கொண்டிருந்த எதிர்வீட்டு வாசி நெருப்பில் மாட்டிகொண்டதும் பதறி ஓடி காப்பது, நிறைவேறாத ஆசைகளை கண்களில் தேக்கியவளாகவே இறந்தகாலத்தில் வாழ்பவள் அவள்.

இவ்விருவரின் உலகத்தில் நடந்தவைகளுக்கும் நடக்கபோவதுகளுக்கும் ஊடே இழையோடும் புரிந்துணர்வு ..
எந்த அடைப்புக்குறிக்குள்ளும் புகுத்த முடியாத அன்பை சொல்லும் கதை..

சின்ன சின்னதாய்

*ஒற்றை நூல் பிடியில் 
காற்றாடிச் சிலும்பலாய் 
திமிர்ந்தலையும் ஞாபகங்கள்
வண்ணம் தீட்டிக்கொள்ளலாம் பிடித்த பச்சையில்

*பாதம் கொப்பளிக்கும் சூட்டோடும்
நிழலோடிய புத்தியோடும் 
கோவில் பிராகாரத்தை சுற்றி வரும்பொழுதோ 
அல்லது
நடைபாதையில் 
நடுவழியில் ஒற்றைச் செருப்பு 
அறுந்தபொழுதோ
தலையில் இருந்து காலுக்கு
இறங்கிய கனத்தை இங்கே
கழற்றி விடவும்


*அட ! லேசா...
லேசா தூறல் இந்நாட்களின் மேல் 
போதுமாயிருக்கிறது அதுவாக தேங்கிவிட

*நம்மை நாமே
தீட்டும் ஓவியம்
இந்நாள்வரை 
பார்த்தேயிராதவர்களின்
உருவிலிக்கு பொருத்திப்பார்க்கும்
முகமூடி

*அள்ளிச் சுருளப் போர்த்திய குளிரில்
மோதிக் குலவும் மற்றுமொரு 
மழைத்த நாள் 
நீளும் தண் மத்தம்

*தூண்டிலின் தினவுக்கு 
திக்கித்த மீன்களுக்கிடையில் 
கூடையின் விளிம்பைத் தாண்ட 
திமிரும் மீனாகிறது 
தினத்தையொட்டி கொண்டாடப்படும் 
காதல்

*நம் அந்த நேரத்து மனநிலையை கண்ணாடியாய் காட்டும் எழுத்தோ, ஓவியாமோ எது ஒன்றோ எளிதில் நம்மை, மனதைத் தொடும் .. 
தளர்ந்த மனநிலையில் வாரி அணைக்கும் இசையோ சொல்லோ எது ஒன்றோ
நுரைக் குமிழியின் மதர்வில் 
மற்றும் 
பசி நேரத்து பால் குரலில் 

நார்த் 24 காதம்


சந்தர்ப்ப சூழ்நிலையால் தொடர்பே இல்லாத மூன்று பேர் சந்திக்க நேரும் பயணத்தில் விரிகிறது நார்த் 24 காதம் 

இவன் இப்படித்தான் என வரையறுத்து காட்ட நகர்த்திய முதல் சில காட்சிகள் .. இயல்பில் இருந்து வழுவிய ஒருவன் தனக்கே உரியதான இருள் உலகத்தில் வெளிச்சம் புகுவதை விரும்பாதவனாக, சுற்றிலும் சீரான உய்வோடு சுழலும் நடைமுறைக்குள் தன்னை புகுத்திக்கொள்ளாதவனாக இருப்பதை காட்டுகிறது.. எனினும் இந்தவகையான மன அழுத்தத்தை உடைத்து வெளியேறவே விரும்புகிறான் என்பதால் மருத்தவரை தொடர்ந்து சந்திக்கிறான்..

எது எப்படி இருந்தாலும் பெர்பெக்ஸன் பேர்வழிகள் வேலையில் உப்பிட்டு பிழிந்தெடுத்த புளியாய் இருப்பார்கள் என்பதால் அவன் நல்ல ஒரு பதவியில் இருப்பதும் வியப்பான விஷயம் இல்லை.

கம்பனி தன்னை வெளியூருக்கு அனுப்புவதை விரும்பாமல் வேலையை விட நினைப்பதும், தான் வேலையை விடவிருப்பது மற்றவர்க்கு அதீத மகிழ்ச்சியை தருகிறது என்பதால் முரண்டி வெளியூர் பயணிப்பது இப்படியாக நுணுக்கமாய் செதுக்கப்பட்ட பாத்திரத்தில் ஹீரோயிஸ ஆர்பாட்டம் இல்லாமல் மிக இயல்பு நாயகன் ..

எப்பேர்பட்ட மனிதனிடத்திலும் மறைந்திருக்கும் தாய்மை அல்லது கருணை உணர்வே பெரியவர் தவற விட்ட கைபேசியை கொடுக்க ரயிலை விட்டு இறங்கவும், பின்பு மரணச்செய்தியை மறைக்கவும் அவனை உந்தியது எனலாம்.

அடுத்து கவர்ந்த காட்சி .. பைக்கில் லிப்ட் கேட்ட பயணத்தில் நாயகி காணாமல் போவதும் பெரியவரும், நாயகனும் தேடிக்கண்டு பதறி என்னாவாச்சு என்கிற போது நாயகி கூலா செருப்பு பிஞ்சிடுச்சு என்பதும் .. கடத்தியவனை செருப்பால் அடித்து துரத்தினேன் எனும் அளவு கூலான பாத்திரம் அவள்..

அசராமல் பிரச்சனைகளை அனுபவ அறிவால் நிதானமாக அனுகுபவர் பெரியவர் மற்றும் மனைவி மேல் வைத்திருக்கும் அன்பு , உண்ட கையின் விரல்களில் ஒட்டியிருக்கும் கடைசி துணுக்கு வரை ருசித்து வாழும் நாயகி இவர்களால் இறுக்கத்தில் இருந்து இயல்புக்கு மாறியவனின் கதை.

முதல் முறையாக வட்டத்தில் இருந்து வெளியே வந்தவன் திறந்தவெளி காட்சிகளில் காண்பதும், கனிவதையும் எவ்வளவு அழகாக சொல்ல முடிந்திருக்கிறது திரைக்கதையில்.

Tuesday, January 21, 2014

தொடர்கதையில் முற்றும் புள்ளி


ஆனந்தத்தை அளவிடக்கூடிய 
கூட்டத்தின்
கோப்பைக் குழறலில்                            
ஓடிக்களைத்த மண் குதிரை 

வாயிலிருந்து நெருப்பை 
உமிழும்
வித்தைபழகியவனின்
உணவில் மரத்த ருசியில்
மற்றுமொரு சொல்லாய்

இறுதியிலும் இறுதியானதொரு
சந்திப்பில்
கையசைத்த நட்பின்கண்
நிரம்பியிருக்கிறது
எம் வற்றிய நதியில்
கற்கள்

-புவனம்

Monday, December 30, 2013

எல்லைக்கு படர்த்திய வேலியின் முட்கள்



புதை நிலத்தை கீய்ச்சும்  
கழுகின் நகல்தோற்றத்தில்
சூழ ஒரு கூட்டம்

அவதானிப்புகளை ஏற்ற 
இலகுவாய் இருந்தது போலும்
பாதி வரைவில்
நின்று போனதொரு
ஓவியத்தின்
ஒளிவிளங்கா கண்களில்

எவரோ இருந்ததன் அடையாளமாய்
மூலையில் சாத்திய
நாற்காலியின் நிறைப்பு
கடந்து போவோரின்
பாவனைகளில்

உவர் நிலத்தில்
ஒன்றாத வேரின்
உயிர்க்களைப்பில் உறவிலி
இருந்தும்
காய்ச்சல் வற்ற விழுங்கிய
அரை மாத்திரைக்கும்
கூடுதலே
தனித்தவளின்
உலகத்தில் தங்கியிருப்போரின் எடை

-புவனம்

Monday, December 16, 2013

பஞ்சுப் பொதியில் சுடரும் தீ கண்



உன் பொருட்டு எனைத் தழுவியிருந்த 
பொய்யின் நீர்மையென ஆகாயம் 

இருந்தும் இல்லாமல் போவதன் 
அத்தியாயங்களைச் சொட்டியதன் 
குழி நிறம்பல்களில்
திமிங்கிலங்களை விழுங்கும்
கற்பனை மிதப்பின்
கப்பலை மூழ்க விட
காகிதம் போதுமாயிருந்தது

பெயர்ப் பலகையில்
மழைப்பாசிக்கு மருவிய
இறந்ததன் காலம்

அடைகாக்கும் பக்குவத்தில்
அடுத்த நொடியை
மருதாணியில் தீட்டிக்கொள்ள
மற்றுமொரு கை

-புவனம்

Monday, November 4, 2013

எஞ்சியதன் நாளை


மொத்தத்தின் உள்ளடக்கமாய்
பின் எப்பொழுதோ புரட்டிப் பார்க்கவென 
வரிகளின் இடுக்கில் 
பாடம் செய்த புன்னகை

கம்பிவேலியில் 
கால்பின்னிய 
ஆட்டுக்குட்டியின் சுதந்திரம்
அப்புன்னகையின் வீரியத்திலும் 

உண்டு உறைந்த 
உமிழ் நீரின்
நூலாம்படைச் சொற்களில்  

சிலந்தியின் நகர்வு 

வெனிஸ் நகர வீதிகளை 
கற்பனித்ததின் தார்சாலையில் 
பெய்த மழையாகிறது 
முட்கள் நகராக் கடிகையை
கவிதையாக்குவது 

-புவனம்

Thursday, October 24, 2013

கதவுக்கு அப்பால்





மனதின் உள்ளே மூச்சுமுட்டுகிற புழுக்கம் தான் வெளியே பரவியதோ!
 தலையில் தணலைக்  கொட்டியது போல வெந்து வழிந்தது.

"ச்சு, இந்த நேரத்தில் கரண்ட் வேறே, எப்போதான் வருமோ" சுவாசிப்பதே கடினமாய் புழுங்கியது அறை. எல்லா வீடுகளையும் போல ஜன்னல் இருக்கவே செய்தது.. திறந்து வைத்தால் தென்னைமரக் காற்று ஜிவ்வுன்னு வரவே செய்யும் 

"எதிர் வீட்டில் அவன் சிவப்புதோல்ன்னு பார்கிறியோ" பள்ளி இறுதி முடித்த சின்ன பையன் அவன் ..அவனைக்கூட விடாமல் சேர்த்து வைத்து பேசுவதில் அப்படி என்ன பேரின்பமஅசோகனுக்கு.சொல்லில் அறைந்த ஜன்னல் அதன் பிறகு திறப்பதே இல்லை.. இது மட்டும் சொந்த வீடாக இருந்திருந்தால் ஆணி வைத்து அறைந்து ஜன்னலை திறக்க முடியாமல் செய்தாலும் செய்திருப்பான்.


கணவனைப் பற்றியே நினைப்பே கசந்தது... கழண்டு விடுவது போல வலித்த இடுப்பும். " என்ன மாதிரி மனிதன், ஆறு மாத கருவை சுமப்பவள் என்ற அடிப்படை கழிவிரக்கம் கூட இல்லாமல் மிருகத்தனமாய் ... மிருகம் கூட தன் இணையிடம் இப்படி நடக்குமா தெரியாது "

புனிதா கருத்தரித்தது இது மூன்றாவது தடவை.. முதல் இரண்டு தடவைகள் போல் இல்லாமல் ஆறு மாதங்களை கடந்தது பெரிய விஷயம்.

"ஏன் தாயி, இப்படி பலகீனமா இருக்கியே, ஊரிலே இருந்து யார்னா  இட்டாந்து வச்சுக்கலாமில்ல, கண்ணெல்லாம் உள்ள போயி பார்க்கவே பாவமா கிடக்க" .. இரண்டு நிமிஷம் நின்று பேச வாய்க்கும் ஒரே ஜீவன் கீரைக்காரம்மா வாஞ்சையோடு சொல்வது.

மெல்லிதாய் சிரித்து.. இல்ல ஆச்சி, அம்மாவுக்கு முடியாது என்பதோடு பேச்சை நிறுத்திக் கொள்வாள். மனதுக்குள் ஆசையாய் இருக்கும், ஊருக்கு போகணும்  அம்மா கைச் சமையலை, காரச்சட்டினியை சுவைக்கணும், தங்கைகளோடு வாய் ஓயாமல் கதைப் பேசணும் இப்படி எல்லாம், எங்கே கொடுப்பினைவந்திருந்த தந்தை கேட்கவே செய்தார்..

"புள்ளைய கொஞ்ச நாள் கூட்டி போகலாம்ன்னு மாப்ள, மசக்கைக் கழிய கூட்டிட்டு வந்து விடறேன்"

வழக்கம் போல் கண்களை இடுக்கி பதில் சொன்னான் அசோகன் 

"கூட்டிட்டு போகலாம், திருப்பி அனுப்பிற எண்ணம் வேண்டாம்" பதில் பேசாமல் திரும்பி போனார் அப்பா..வேறு என்ன செய்வார்.. காலம் காலமாய் முதுகில் சுமக்கும் கட்டுச்சொல் இருக்கவே இருக்கு, வாழாவெட்டி, அடுத்து  பிறந்த தங்கைகள் வாழ்வு. 

பெருமூச்செறிந்தாள் ..இறுக்கிப் பிடித்த ஆடையை கொஞ்சம் தளர்த்தினாள் எரிச்சல் குறையலாம்.. அசோகன் எந்த நேரம் வந்து நிற்கும் அபாயம் உள்ளது..திடுமென வர நேர்ந்தால் தளர்ந்த ஆடைக்கு ஒரு பாட்டு வாங்க வேண்டி இருக்கும். கைக்கு கிடைக்கும் லஞ்ச பணத்தை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு சுத்துவது இல்லை.. அடிக்கடி வீட்டு பக்கம் வந்து பத்திரப்படுத்திவிட்டு போவான்.

 நிறைய நீர் அடித்து முகத்தை கழுவியதும் வியர்வை கொஞ்சம் மட்டுபட்டதாய் இருந்தது.துடைக்காமல் ஈரத்தோடு இருப்பதும் நன்றாகவேதளர்ந்து தரையில் சுவரோடு சாய்ந்து  கால்களை நீட்டி அமர்ந்தாள்.

 மூடியிருக்கும் கதவைத் தாண்டி சாலையின் வாகன இரைச்சல். இந்த குடியிருப்பில் ஹவுஸ் ஓனர் தவிர குடித்தனக்காரர்கள் மட்டும் எட்டு வீடுகள்.ஒருவரோடு ஒருவர் கலந்து  அத்தனை பேரும் தாயா பிள்ளையா பழகுவார்கள்.ஹவுஸ் ஓனர் வேறு, குடிந்தனக்காரர்கள் வேறு என்பதே இல்லை .. அசோகன் குணமறிந்து அவளிடம் மட்டும் சற்று ஒதுக்கம் கட்டுவார்கள்.. வாசல் தெளிக்க இறங்கினால் ஒருவரோடு ஒருவர் கேலியும் கும்மியுமாய் சிரித்து வம்புகிழுத்து. அவர்களோடு கலவ முடியாவிட்டாலும் காதில் கேட்டு ரசிக்க கிட்டும்..

இவளைக் கண்டால் சிநேகப்புன்னகை உதிர்பதோடு சரி.. அத்தனை பேருக்கும் அத்துப்படி அசோகன் வீட்டில் இருந்து நான்கு மூலையிலும் ஸ்பீக்கர் அதிர அதிர பாட்டு சத்தம் கேட்கிறது எனில்  புனிதாவை அவன் நைய்ய புடைகிறான் என்றே அர்த்தம்.. வலியில் துடித்து அவள் அலறுவது வெளியில் கேட்காமல் இருக்கவே சத்தமாய் ஸ்பீக்கர் அதிர்வது.

காலையில் வீங்கிய முகத்தோடு வாசலில் கோலமிடும் போது பாவமாய் பார்வை பரிமாறல்கள் இருக்கும் .மற்றபடி துணிந்து யாரும் கிட்டே போய் அவனை கேட்பதில்லை .. "உனக்கென்ன என் பொண்டாட்டி மேல் அப்படி ஒரு அக்கறை" கூசாமல் கேட்கக்கூடியவன் தவிர போலீஸ்காரன் என்பதால் அதிகம் பிரச்சனை என்று வைத்து கொள்வதில்லை..

நெருங்கிப் பேசுவது என்றால் ஹௌஸ் ஓனர் அம்மாதான்.. அதுவும் அன்றைக்கு அப்புறம் குறைந்து போனது. " தீ” மிதி பார்க்க கோவிலுக்கு போறோம் எல்லோரும், நீயும் வந்தா நல்லாத்தான் இருக்கும் ம்ம் சரி இந்த சாவிய   அப்பா வந்தா கொடுத்திடு , சுகர் மாத்திரைய நேரத்துக்கு போடச் சொல்லு "  தந்து விட்டு போயிருந்தாள் . குடித்தனக்காரர்கள் அத்தனை பேரும் அவரை அப்பா என்றே அழைப்பது.

சாவி வாங்க அவர் வருவதற்குள் அசோகன் வந்து விட்டு இருந்தான்.. மாட்டியிருந்த சாவியை எடுத்து கொடுத்தவன் அவன் தான் . எதார்த்தமாக கை நீட்டி வாங்கியவரிடம்  " இந்தச் சாவிய என் பொண்டாட்டி கொடுத்திருந்தாலும் இப்படித் தான் கை உரச வாங்கி இருப்பீங்களோ" அதை கேட்டு பெரியவர் அதிர்ந்தே போனார் .சரி போதையில் பேசறான் என்பதாக நகர்ந்து விட்டார்.

சுத்தி இத்தனை பேர் இருந்தும் வாய் வார்த்தைக்கு கூட யாரும் இல்லாமல் போனது..  என்ன கேடுக்கு இந்த வாழ்க்கை ..

அவன் வீடு வரும் போதும் அவள் எப்படி இருந்தாலும் குற்றம் " அடச்சே, வீட்டுக்கு வந்தா உன் எண்ணை வழியிற மூஞ்சியத்தான் பார்க்க வேண்டி இருக்கு. ஏண்டி இப்படி அடிபட்ட பஞ்ச பரதேசி மாதிரி நிக்கிற " என்பான் அதற்கு மாறாக இருந்தாலும் "எவனுக்கு இந்த அலங்காரம்" என்றே விஷம் கக்கும் .. பதிலுக்கு ஒரு வார்த்தை வாயைத் திறந்தால் வீட்டில் ஸ்பீக்கர் அதிரும்.

 இரண்டு வருட தாம்பத்தியத்தில் பல தடவைகள் தற்கொலை எண்ணம் தோன்றி வழக்கம் போல கைவிடுபவள் . "தற்கொலை செய்து கொள்வதற்கு கூட தைரியம் வேணும்.. நம்மைப் போல பிள்ளைப் பூச்சிக்கு  மரணம் கூட கிட்ட வாய்க்காது "..

மின்விசிறி சுழலத் தொடங்கியது. விட்டத்தில் சுழற்சியை வெறித்தபடியே தரையில் சாய்ந்தவள் எப்படியோ தூங்கி போயிருக்கிறாள். தலைக்கு மேல் யார் யாரோ திமுதிமுவென ஓடுவது போல ஒலித்தது.. கூடவே குவியலாய் சத்தம் ." தூக்குங்க, தூக்குங்க.. தண்ணிய கொடுங்க"

திறக்க முடியாமல் கண்களை திறந்து சுழற்றினாள்.. எங்கே என்ன நடக்குது, யாருக்கு என்ன. அவசரமாய் எழுந்து கொள்ள நினைத்த போதும் முடியாமல் அதுவரை வெறுந்தரையில் கிடந்தது கால் மரத்து முரண்டியது

---                                  ---                  ---                      ------

அதற்கு மேல் வண்டியை செலுத்த முடியாதோ என்றிருந்தது.  காலையில் இருந்து உணவெடுக்காத வெறும் வயிறு வேறு சுருட்டி இழுத்தது .விரதம் பழக்கம் தான்.. இன்று ஏனோ உடலை அசத்தியது...அல்லது இந்த பாக்கை இப்போது போட்டு இருக்கக் கூடாதோ? எப்படியோ இந்த பழக்கம் அவனிடம் தொற்றிக்கொண்டு விட்டது


தரிசனம் முடிந்ததும் கோவிலோடு திரும்பி இருக்கலாம்... நண்பனை பார்க்கவென கிளம்பியதே தப்போஓரங்கட்டி மரநிழலில் நிறுத்தினான்.
 நெஞ்சும்தொண்டையும் சேர்ந்து காந்தியது . என்ன மாதிரி உபாதை என
இனம் காண முடியாதபடி என்னவோ செய்தது.
நிற்கும் இடத்தில் இருந்து நேர் எதிரே தெரிந்த கட்டிடத்தில் ஒரு பெரியவர்
தென்பட்டார்.. கண்ணை சுத்தி வெள்ளை நிறத்தில் பூச்சி பறப்பது போன்று ஒரு பிரமை .. தட்டுத் தடுமாறி கேட்டைத் திறந்து பெரியவர் இருக்கும் இடம் வரை வந்து விட்டவனைக் கண்டு கிழவர் திகைத்தே போனார்..

யாரோகண்மண் தெரியாமல் குடித்தவன்உள்ளே வரை வந்து விட்டான் ..

அந்த நேரத்தில் குடியிருப்பில் ஒருவரும் வெளியே தென்படவில்லைஅவர் வீடுமே கூட மூடி இருந்ததுஉள்ளே மருமகள் உறங்குவாளா இருக்கும்..
கைக் கால் விழுந்த பிறகு இவருக்கு இந்த இடமும்சாய்வு நாற்காலியும் தான் சொந்தம்.. வருகிறவனை எதிர்கொள்ள தன் பிரம்பை இடது கையில் எடுத்து
 கெட்டியாக பிடித்தவண்ணம் புருவத்தைச் சுருக்கி கூர்ந்தார்.


வந்தவன்வார்த்தை வராதவனைப் போல சைகையில் தண்ணீர் என்பதைப்
 போல் சைகை காட்டினான்.. அவருக்கு பக்கத்தில் இருந்த குவளையில்
 தண்ணீர் தீர்ந்து விட்டு இருந்தது,, இருந்திருந்தாலுமே கொடுத்திருப்பாரா
 என்பது சந்தேகம்.


அவனை அங்கிருந்து விரட்டி விடக்குறியாய் இருந்தார் கிழவனார்..அவனோ அப்படியே சுருண்டு அமர்ந்தான் . இது ஏதடா வம்புஅவர் பயம் அவருக்குதானே இந்த வீட்டு வாசலுக்கு ஒரு உபரிமருமகள் பூதாங்கி பார்த்தால் சாமியாடிவிடுவாள்.

கையில் இருந்த பிரம்பால் நெம்பி விரட்டினார்.."போப்பா போவேறே
 எங்கவாவதும்கிளம்பு " உடைந்த குரலை எழுப்பி அவரால் இவ்வளவே
மிரட்ட முடிந்தது . கம்பால் நெட்டித் தள்ளியதில் எழுந்து விட்டான் தான்,
நடக்க முடியுமென தோணவில்லைஇரண்டே எட்டு எடுத்து வைத்தவன்
அடுத்த வீட்டு வாசலில் குப்புற விழுந்தான்.

 அவன் விழுந்ததும்,கிழவனார் பெரிதும் பயந்தே போனார்சாய்வு நாற்காலியின் இரும்புப் பிடியில் பிரம்பால் தட்டியப் படியே முடிந்த அளவு சத்தம்
எழுப்பினார் .. மாடியில் புகைத்துக் கொண்டு இருந்த ஹவுஸ் ஓனர் தான்
முதலில் ஓடிவந்தவர்.. அவர் குரலுக்கு மற்றவர்களும்

டேய் மாதவா தண்ணீர் கொண்டு வாபேரனுக்கு குரல் கொடுத்த படியே விழுந்து கிடந்தவனை புரட்டிப் போட்டார்.. அரைமயக்கத்தில் இருந்தவன் தண்ணீர் தொண்டையில் கொஞ்சம் இறங்கியதும் மெல்ல முனகினான்.." நான் தான்
மாதவன்.. சார் மாதவன் நான் " என்பதற்கு மேல் வாய் கோணி இழுத்தது ..

சொல்லுப்பாஎன்னாச்சு.. உன்பேரும் மாதவனா விசாரித்தபடியே நெஞ்சில் முதுகில் தடவி கொடுத்தார் ஹவுஸ் ஓனர்..வினாடிக்குள் என்ன நடக்கிறது என்றே எவரும் யூகிக்கும் முன்  அவன் உடம்பு தூக்கிப் போட்டது .. குருதியோடு சேர்ந்து வாயிலெடுத்தான்.. கண்கள் சொருகி இரண்டு நிமிடத்துக்குள்
அது நடந்தது.

புனிதா கதவை திறந்த போது அவள் கண்டக் காட்சி இதுவே.. மிக மிக அருகில் துடிக்க துடிக்க ஒரு மரணத்தை கண்டதும் அவள் பூஞ்சை மனம்
நிலைகொள்ளாமல் அதிர்ந்தது.. அப்படியே சரிந்து விழுந்தாள்.



அடுத்த இரண்டு மணி நேரத்தில் அந்த இடத்தில் ஒரு திடீர் மரணம் நிகழ்ந்ததன் சுவடே இல்லை. போலீஸ் ஸ்டேஷனுக்குப் பின்னே அமைந்த குடியிருப்புத் தவிர ஹவுஸ் ஓனருக்கு ஸ்டேஷனில் அத...்தனைப் பேரையும் தெரியும் என்பதால் சிக்கல் ஏதுமின்றி இறந்தவனின் அடையாள அட்டையைக் கொண்டு அவன் வீட்டுக்குத் தகவல் சொல்லி எல்லாம் முடிந்தது. அவ்விடம் சுத்தமாக நீரடித்து க் கழுவி விடபட்டிருந்தது.

முன் மாலையில் வீடு திரும்பினான் அசோகன்.. அதீத டிராஃபிக் ரோட்டில் பணி.

நாள் முழுக்க வெயிலில் நின்றதன் களைப்பைத் தவிர சாதாரணமான முகபாவத்துடன் அவன் இருப்பதை வரும்போதே பார்த்து விட்டார் ஹவுஸ் ஓனர் ..

அவன் வீட்டு வாசலில் நடந்த அசம்பாவிதம் முறையாகத் தெரிவித்து விடவேண்டும் என்பது அவர் நினைப்பு.
கைக் கால் முகம் கழுவி வருவதற்குள் உணவைச் சுடவைக்க அடுக்களையில் இருந்தாள் புனிதா.. அப்படி ஒரு உடல் வலி, தலைத் தூக்க முடியாத அளவு கனத்தது. காய்ச்சல் தானோ என்றிருந்தது. அடுக்களைச் சுவரில் சாய்ந்த வண்ணமே நின்றவளுக்கு கணவனிடம் ஹவுஸ் ஓனர் நடந்ததை விவரிப்பது கேட்டது .. திக்கென்றது ..
வந்ததும் ஏன் சொல்லலைன்னு எகிறப்போகிறான்.. நிறைய தண்ணீர் குடித்தப்பின் சற்று நிதானித்து உணவோடு முன்னறைக்கு வந்தவள் கண்டது கையில் சுருட்டிப் பிடித்த பெல்டோடு கண்கள் சிவக்க அவன்..

"என்னடி நாடகம் இதெல்லாம், யாரவன் உன்னைப் பார்க்க வந்தவன்" தலைமுடி கொத்தாகப் பிடிக்கப்பட்டது..
"அய்யோம்மா சத்தியமாய் எனக்கு எதுவும்" முடிக்கு முன் முதல் அறை விழுந்தது.. ருத்ரம் அவன் கண்களில் " இத்தனை வீட்டை விட்டு இங்க வந்தானாம், இவளுக்கு ஒண்ணுமே தெரியாதாம், யாரிடம் கதை? .. இதுதானா நீ பிள்ளைப் பெறப் போகும் சேதி .. வார்த்தைகளின் விஷம் செவிப்புலனை அடைத்தது. பிறகு சௌந்தரராஜன் தன் அழுத்தமான குரலில் அந்த அறையின் நான்கு மூலை ஸ்பீக்கரிலும் பாடினார்.

வெளியே சிலர் கரித்துக் கொட்டினர் .. " பாவி இவனெல்லாம் மனுஷனா, கையில் கெட்ட வியாதி வர. இப்படிப்பட்ட ஆட்களுக்கு எல்லாம் ஒன்னும் நடக்கமாட்டேங்குதே"

கொஞ்ச நேரத்தில் செருப்பை மாட்டிக்கொண்டு அவன் கிளம்பிவிட்டான்.. அடுத்த வினாடி சாத்திக்கொள்ளும் கதவு திறந்தே கிடந்தது. இன்னமும் சத்தமாய் பாடல் நிறுத்தப்படாமலும்.

திறந்திருந்த கதவு வழியே எட்டிப் பார்த்த ஆச்சி அலறினார்..

காலுக்கடியில் குருதிப்பெருக.. உயிர் அறுக்கும் வலியோடு திணறிக்கொண்டு இருந்தாள் புனிதா..





 ** இது புனைவில்லை என்பதால் வேறென்னச் சொல்ல
கண்களில் நேர் குத்துகிற காட்சிக் கோர்வைகளின் நிழற்படம் கதையாகிவிடுகிறது .. ஜென்மத்துக்குக் கல்யாணம்னு ஒண்ணு கூடவே கூடாது, கன்யாஸ்திரியாக போய்விட இருபது வயது வரை தீவிரமாய் நினைக்க வைத்தது புனிதாவினால் ஏற்பட்ட தாக்கம்.
இருபதுக்குப் பின் என்னவென்று கேட்டால் !

காலமும், சூழலும் மாற்றக்கூடும் நமக்கான காட்சிகளை !!!!

--புவனம்
 
 
 


STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...