Tuesday, March 26, 2019

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்துகிடக்கும் தரையும் அந்த தெருவிற்கு  அழகான  கூட்டல். அந்த மாதம் தான் இங்கே புது வீட்டில் குடியேறியது. எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து குடியிருந்ததெல்லாம் சுற்றி சுற்றி வடபழனி ஏரியாவில் தான். வாடகை வீடுகள் மட்டும் மாறிக்கொண்டே இருக்கும்.
கோடைவிடுமுறை முடிந்ததும் போகப்போவது வேறு பள்ளி.கொஞ்சம் நிறையவே தூரம். அசோக் நகரில் இருந்தது. அது வரை படித்தது வடபழனியிலேயேதான். இந்த பள்ளி மாற்றமும் புதுவீடும் அழகர் தெருவும் அதுவரை தெரிந்தே இருக்காத நிறைய விஷயங்களை கற்றுத்தந்தது. முக்கியமாக வீட்டு ஓனரின் மூத்த மகள் ரமாவிடம் இருந்து. என்னைவிட பெரியவள். படிப்பது ஒன்பது தான். கல்லூரிப் பெண்கள் தோற்பார்கள். அவ்வளவு விஷய ஞானம். குறிப்பாய் பசங்களை பற்றி அவ்வளவு ஆராய்ந்து தெரிந்து வைத்திருப்பாள். 
அவளும் அவளின் சின்ன தங்கையும் படிப்பது நான் புதிதாய் போகப்போகிற பள்ளியில். போக வர துணையாய் இருக்குமே.
ஸ்கூல் தொடங்கி முதல் பத்து நாட்கள் அப்பா தானே கொண்டு விட்டார். பழகும் வரை. அப்புறம்   நடராஜா சர்வீஸில் நானும் ரமா ஹேமாவோடு
சேர்ந்து போவதே திட்டம்.
முதல் நாளே மொட்டைமாடிக்கு அழைத்துபோய் படுரகசியம் பேசினாள் ரமா.

"அவன் பேரெல்லாம் எனக்கு தெரியாது. சரியா நான் முகத்தை கூட பார்த்ததில்ல. வீடு கட்டிகிட்டு மாத்திட்டு போய்ட்டாங்கன்னு தெரியும்.
இப்ப அவன் இந்த ஏரியா ஆளு கூட இல்லை. ஆனா தினம் நான் ஸ்கூல் போற நேரம் என்னை கிண்டல் செய்றதுக்காகவே வந்து நிற்பான். ஓவரா கிண்டல் பண்ணுவான் தெரியுமா. நான் கண்டுக்கவே மாட்டேன்" என்றாள்.

முன்ன படித்த  ஸ்கூல் கோயெட். பெண்ணிலிருந்து ஆண் பிள்ளை வேறுபட்டவனென்றெல்லாம் யோசித்தது கூட இல்லை .கூட படித்த
பையன்களோடு ஒன்னுமண்ணா விளையாடித்தான்  பழக்கம். 
பசங்க என்ன கிண்டல் செய்யறது. பதிலுக்கு நாமும் கிண்டல் செஞ்சிட்டு போகவேண்டியதுதானே ஏன் பயந்து பயந்து போகனும்ன்னு இருந்தது எனக்கு. 
இல்ல வீட்ல சொல்லலாமா?"

"வேணாம் வேணாம் பெரிசாயிடும். கண்டுக்காம போனாலே போதும் " என்றாள்.

நல்ல பயிற்சி கொடுத்திருப்பாள் போல. தெருமுனையை தொட்டதுமே "அக்கா அவன் இருக்கான்" கிசுகிசுப்பான குரலில் சொன்னது ஹேமு.

ரமா குனிந்த தலை நிமிராமல் நடந்தாள். யார்தான் அவன்! கிண்டல் செய்ய வந்து காத்திருக்கும் பேரழகனென பார்த்தால் கொஞ்சம் அப்படிதான் இருந்தான். செம ஸ்டைலாக நேர்த்தியாய் உடுத்திக்கொண்டு. ஆனால் நினைத்திருந்தபடி ஏதோ பள்ளி வயது பையன் இல்லை. கல்லூரி தாண்டிய வயதிருக்கும். ஒரு கடைவாசலில் நின்றிருந்தான். சினிமா ஹீரோக்கள் தோற்றார்கள். நிற்கிற விதத்தில் அப்படி ஒரு ஸ்டைல். ஒரு சன்னப்புன்னகையோடு லேசா தலைசாய்த்து நடந்து வரும் எங்கள் மூவர் கூட்டணி மேல் தான் கண் வைத்திருந்தான்.

அவன் நிற்கிற இடத்தை தாண்டிக் கடக்கிற வினாடியில் திருவாய்மொழிந்தான். சின்னதை பார்த்து " ஹேய் ஹேமிகுட்டி யாரிது புதுசா!. ரவா லட்டுக்கு புது பாடிகார்டா"
காத்தடிச்சா பறந்தே ஸ்கூலுக்கு போற ரேஞ்சில ஒரு பாடிகார்ட் வச்சிருக்காங்கப்பா" 
என்னவொரு நய்யாண்டி.

என்னைய பெத்த ஆத்தாவிடமே பத்ரகாளி பட்டம் வாங்கியவள். கண்களில் எவ்வளவு உக்கிரத்தை காட்ட முடியும்!. சும்மா முதல் பார்வையிலேயே அவன் மிரண்டுவிட வேண்டாமா. முகத்தை கடுமையாக வைத்து முறைத்து பார்க்க. அவனோ எதோ காமெடியை கண்டவன் போல சத்தமாய் சிரித்து  "யப்பா பாடிகார்ட் முறைக்கிறாங்கப்பா'" என்றான்.
சுறுசுறுன்னு கோவமாய் வந்தது. 
சரியான இளிச்ச வாயன் போல.

கொஞ்சம் தூரம் கடந்ததும் ரமா சொன்னாள். "பார்த்த இல்ல ரவா லட்டாம். இப்ப கிண்டல் நேரம் முடிஞ்சுது இல்ல போயிருப்பான்"
அந்த தெரு முடிந்து அடுத்த திருப்பத்தை தொடுவதற்குள் தலையை மட்டும் திருப்பி அவன் நின்ற இடத்தை பார்த்தால்  அதே இடத்தில் தான் நின்றிருந்தான் மீண்டும் ஒரு சிரிப்பு. கையை தலைக்கு மேல் உசறத் தூக்கி டாட்டா வேறு காண்பித்தான். மாலை வீடுதிரும்பலில் பிரச்சனை இருக்கவில்லை. அவனும் இல்லை.

அடுத்தடுத்த நாட்களில்

"ABCD படிக்கப்போறதுக்கு இவ்ளோ பெரிய மூட்டையா"

" மூளை ஓவரா வளர்ந்து தலையில் செடி முளைச்சிடுச்சு போல பூவெல்லாம் பூத்திருக்கு"
இப்படி
அந்த கடைவாசலும் புன்னகை மன்னனின் கேலிபேச்சும் தூரம் சென்றபின் திரும்பினால் காட்டப்படும் டாட்டாவும் அந்த முதல் நாளுக்கு பிறகு  பழகிப்போன தொடர்கதை. ரமா மாதிரி குனிந்தோ பயந்தோ நடப்பதில்லை. பதிலுக்கு முறைத்து தலையை  வெட்டி சிலுப்பிக்கொண்டு போவதும் அதற்கும் அவன் சிரித்து வைப்பதும் நடந்தது.

"அவன் எதாவது துணிக்கடையில் வேலை பார்பானோ, போட்ருக்க ட்ரஸெல்லாம் பாரேன்"
குனிந்த தலை நிமிராமல் நடக்கும் ரமாவுக்கு தான் பார்க்க வாய்பே இல்லையே. 
தினம் அவனின் ஷேர்ட் கலரை அவளுக்கு அப்டேட் செய்வதும் நிற்கிற ஸ்டைலையும் இளிப்பழகையும் இமிடேட் செய்து காட்டுவதுமாக 
ரமாவோடு நடக்கும் மொட்டை மாடி பேச்சிற்கு அவன் தான் தொட்டுக்கொள்ள ஊறுகாய். 
அந்நேரமெல்லாம் அவனுக்கு விக்கலே வந்திருக்கக்கூடும். அவ்வளவு தூரம் நினைத்து நினைத்து பேசுவோம். 
"ஷ்ஷ் வீட்டில் இருக்கும் போது பசங்களை பத்தி வெளிப்படையா பேசக்கூடாது. நம்ம பேசறது யாருக்கும் புரியகூடாது. மேத்ஸ் சப்ஜெக்கிட்டில் இருந்து கோட் வேர்ட் வச்சுப்போம். அதான் சேஃப்" ரவா லட்டு இனிக்க இனிக்க ஐடியா கொடுத்தது.

இப்படியாக சிலபல மாதங்கள் ஓட 
அந்த பெயர் தெரியாத இவன் எங்கள் அன்றாடத்தில் ஒரு பொருட்டாக ஆனபின்பு மெல்ல ஒரு விஷயம் விளங்கியது. 
கேலியும் கிண்டலுமாய் சீண்டினாலும் நின்ற இடத்தில் நிற்பதோடு சரி. பின்னோடு வழிந்துகொண்டே தொடர்வதோ அத்துமீறிய வார்த்தைகளை பேசுவதோ கெட்ட பார்வையோ ஏதும் இருக்கவில்லை. ஆக ரமாவை கிண்டல் செய்யும் பொருட்டு கிளம்பி வந்து வழிசல் செய்யும் ரோட் சைட் ரோமியோ இல்லை. பொதுவாக அந்தபக்கத்து சிறுமிகளிடம் அவனுடைய விளையாட்டுப் பேச்சு அப்படிதானிருக்குமென. 
அந்த விளையாட்டுப் பேச்சும் தொனிப்பும் சிரிப்பும் ஸ்டைலும் எங்களுக்கு  பிடித்தே இருக்கிறது.

ஃஅப்கோர்ஸ் பருவம் முகிழத்தொடங்கிய வயதில் ஒரு பெண்ணுக்கு எதிர்பாலினத்தவன் மேல்  இயற்கையாய் உருவாகிற ஈர்ப்பாக இருக்கலாம் தான்.ஆனால் நாளொன்றுக்கு  சில வினாடிகளே பார்த்திருக்கக்கூடியவன் 
வயதில் மிக மிகப் பெரியவன். 
எதனால் இவனை பிடிக்கிறது.
ஸ்மார்டா ஸ்டைலா இருப்பது தான் என்றால் அதை ஒத்துக்கொள்ளவே முடியாது. அந்த லட்சனங்களோடு கூடிய பசங்களை அதற்கு முந்தி பார்த்ததே இல்லையென்று இல்லைதானே. 
என் கூட படித்த பையன் சோபி பவுல் ராஜின் ( இப்ப அவன் சினிமாவில் டான்ஸ் மாஸ்டர்) அப்பா
முன்ன குடியிருந்த தேசிகர் தெருவில் டான்ஸ் கிளாஸ் வைத்திருப்பார். 
ப்ரெண்ட்ஸ் நாங்க எல்லாம் பெரும்பாலான நேரம் விளையாடும் இடமே அதுதான். அங்கே இதைவிட ஸ்டைலா பந்தாவான பசங்க எல்லாம் வருவார்கள். இரண்டாவது முறையா திரும்பிபார்க்கத் தோணும் ஈர்ப்பு யாரிடமும் வந்ததே இல்லையே. 
ஆனால் இந்த இவன்..!!
என்னவோ என்றாவது ஒரு நாள் அவன் அங்கு நில்லாது போனால் ,கையை உசறத்
தூக்கிக் காட்டப்படும் டாட்டா மிஸ் ஆனாலோ எதையோ பெரிதாய் இழந்தது போல ஒரு வாட்டம். அந்த நாளே நன்றாக இல்லாதது போன்றதொரு பிரமை. மறுநாள் காணும் போது முறைப்பாய் காட்டிக்கொண்டாலும் அவனுடைய சிரித்த முகத்தை பார்க்க தவறியதில்லை.

பரீட்சை நெருங்க நெருங்க மொட்டை மாடிப்பேச்செல்லாம் கட் செய்து விளையாட்டும் குறைந்து படிப்பிலேயே கழிந்தது.அதோடு காலை நேரத்தில் அவனையும் காணோம். 
கிட்டதட்ட ஒரு மாதமாய்.  என்ன ஏதென தெரியாமல் கொஞ்சம் குழப்பம் தவிப்பு.

ரொம்ப யோசித்தும் அந்த ஐடியா கிட்டியது. துவைத்து உலர்த்தி போட்டிருக்கும் அப்பாவின் சட்டைகள் சிலதை கையில் எடுத்துக் கொண்டு அவன் அத்தனை நாளாய் நின்று கொண்டிருந்த.. யெஸ் அது ஒரு இஸ்திரி கடை. எத்தனை தடவைகள் அந்த வழியே நடந்திருந்தாலும் கடைவாசல் ஏறுவது இதுவே முதல். அப்பா வழக்கமா தெரிந்த ஒரு தள்ளுவண்டியில் கொடுத்திடுவார். இங்கே நமக்கு தகவல் தெரியனுமே அதான் அப்பா சட்டை இங்க வந்திருக்கு.

என்னை கண்டதும் அந்த கடைகாரர் ஸ்கூலில் ஸ்டூடண்ட்ஸ் மிஸ்ஸை பார்த்ததும் நெற்றியில் கைவைத்து வணக்கம் வைப்பார்களே அப்படி ஒரு சல்யூட் செய்து ஷாக் கொடுத்தார். கூடவே நலமா இருக்கேனான்னு குசலம் விசாரிப்பு வேறு. கடை வாசலில் நிற்பவனைத்தாண்டி ஒரு நாளும் உள்ளே நிழலாடும் பிம்பத்தை சரியா பார்த்ததே இல்லையே. இவர் என்னை நிறைய பார்த்திருப்பார் போலும். கொஞ்சம் அசடு வழிந்து எப்ப வந்து வாங்கிக்கட்டும்ன்னு கேட்ட கையோடு அங்கே நிற்கிற ஆள் இப்ப காணாததை மென்று முழுங்கி கேட்டும் வைத்தாயிற்று.
அவரோ இயல்பாய் பதில் தந்தார்.
"சிவாங்களா
இல்லைங்க பாப்பா இப்ப கொஞ்சம் தூரத்தில வேலைக்கு  மாத்திக்கிட்டாப்ல அதான் காலையில் வாரதில்ல. சாயங்காலம் வருவாப்பலையே. "

வீட்டுக்கு வந்ததும் ஒரு பேப்பரை நான்காய் கிழித்து அந்த துண்டு சீட்டில்
" இங்க பாரு எனக்கு __ இந்த தேதியில் இருந்து _ இந்த தேதி வரை முழு ஆண்டு பரீட்சை எல்லா நாளும் நான் எக்ஸாம் போகும் போது வந்து நின்னு டாட்டா சொல்லனும் புரிஞ்சுதா" வயதில் அவ்வளவு பெரியவனை ஒருமையில் விழித்து எழுத தயக்கமே இருக்கவில்லை.
எழுதி அதை நான்காய் மடித்து காசோடு சேர்த்து "அண்ணா இதை.."

கொடுங்க கொடுத்திட்றேன்னு வாங்கி வைத்து மேலும் மேலும் ஷாக் கொடுத்தார்.

துண்டு சீட்டு எழுதி தந்த விஷயத்தை சொல்லாமல் பெயர் சிவாவென தெரிந்து கொண்டதை மட்டும் ரமாவுக்கு சொன்னேன். அவளைவிட தேர்ந்துவிட்டேனோ!!

அந்தநாளும் வந்தது. ஹேமுவோட ப்ரைமரி லெவலுக்கு முன்னமே லீவ் விட்டிருக்க, நானும் ரமாவும் தான்.

அட கட்டளைக்கு இணங்க அவன் அங்கே நின்றுகொண்டிருந்தான். கைகளை வேற கட்டிக்கொண்டு அதே கண்வரை நகையும்  சிரிப்போடு 
முதன் முதலாய் இதயம் அதிகம் துடிக்க,  ஒரு பரசவச உணர்வு உள்ளே எழும்பியது அப்போதுதான். 
நடை.. கடை நெருக்கத்திலானதும் வழக்கமான ட்ரேட்மார்க்  சிரிப்போடு எழுத்தாணி பிடித்து எழுதுவது போல கைகளால் காட்டி  
" லெட்டர்ல்லாம் எழுதற! 
மாட்டிக்காம ஒழுங்கா காப்பியடிச்சு எக்ஸாம்  நல்லா எழுதிட்டுவா. ரவா லட்டு உனக்கும் தான். ஆல் த பெஸ்ட்" முனைதிருப்பத்தில் டாட்டாவும் கிட்டி.

பெத்தபேச்சு பேசுவாளே ஒழிய ரமா பயந்த சுபாவி. இப்ப விஷயம் தெரிந்து வெலவெலத்து போனாள். திட்டித் தீர்த்தாள். "என்ன பண்ணி வச்சிருக்க யார்னே தெரியாது. நீ எழுதினத வீட்டில கொண்டு வந்து அவன் காட்டிட்டா தொலைந்தோம். ப்ளாக்மெயில் எதாவது செஞ்சா போச்சு போச்சுன்னு ஒரே புலம்பல்.

எனக்கு சுத்தமா பயமேயில்லை. ஏனோ அவன் சரியானவன் ஆபத்தில்லாதவன்னு தோணிட்டே இருந்தது.

பரிட்சை எல்லாம் முடிந்து கோடை விடுமுறை தொடங்க, வீட்டிலிருக்கும் நாட்களில் அந்த காலை காட்சி இனி இல்லை. மாலைக்கு மாத்திக்க மற்றுமொரு வழி கிட்டி. . கமலா தியேட்டர் வாசலில் ஒருத்தர் பழைய புத்தகங்களை வாசிக்க வாடகைக்கு தருவார். திருப்பி தந்தால் பணத்தில் பாதி திரும்ப கிட்டும். அதுவரை கிடைக்கிற பாக்கெட் மணி எல்லாம் க்ரைம் நாவல்களா  வாசித்தே தீர்த்து தான் பழக்கம். இப்ப புதிதாய் மிட்டாய் வாங்க தொடங்கியாயிற்று. அந்த பாபு அண்ணன் இஸ்திரி கடைக்கு பக்கத்தில் இருக்கும் பெட்டிக்கடையில்.பாபு அண்ணனின் சல்யூட்டும் ஸ்நேக புன்னகையும் இப்ப நல்ல பழக்கம்.  அந்த பெட்டிக்கடையில் ஒரு நல்ல மிட்டாய் இருக்கும். சாக்லேட்டை உருண்டையாய் உருட்டி வைத்த கணக்காய் ஜெம்ஸ் மிட்டாயை விட கொஞ்சம் பெரிதாய். பேப்பரை கோன் வாகில் மடித்து அதில் போட்டுக்கொடுப்பார் கடைக்காரர். வாயில் கரையும். அது தான் என்னோட ஃபேவரைட்

மாலை நேரத்தில் அந்த பகுதியே ஜே ஜேன்னு இருக்கும். கிரிக்கட் மட்டையும் கேரமும் கையுமாக ஏகத்துக்கு நிறைந்திருக்கும். மாலையில் அவன் தென்படுவான். பாபு அண்ணன் கடைமுன் என்றுதான் இல்லாம் அந்த பகுதியில் அங்கும் இங்குமாக ஆனால் கூட கூட்டாளிகள் புடைசூழ. 
மிட்டாய் வாங்குவது ஒரு சாக்கு. கண்களால் துழாவி எந்த இடத்திலென சுலபமாய் கண்டுகொள்வேன். ஒரு பார்வை வீச்சு அவ்வளவு தான். வந்த வேலை முடிந்தது. பொதுவா இப்படி வரும் போது  கூட வருவது என் பொடித் தங்கைதான். அவளுக்கு ரொம்ப சந்தோசம் அக்கா தினமும் மிட்டாய் வாங்கி தருகிறாளே.

மிட்டாய் கடைக்கு முன் நின்ற ஒரு பொழுது திடுமென பக்கத்தில் அவன் பேசினதும் அதிர்ந்தே போனது. இருந்தாலும் தில்லா காட்டிக்கிட்டோம்ல்ல
"என்ன நீ கடையையே வாங்கிடுவ போலிருக்கு. பாய் இந்த பொண்ணுக்கு கடையை விக்கிறீங்களா என்ன ! சரி  இவ்வளவு வாங்கிறியே ஒன்னு கொடுத்துட்டுப்போ " கையை நீட்டினான்
அதற்குள் கூட நின்ற தங்கை பொடிசு கலவரமானாள்.எங்கே தன் பங்கில் குறைந்துபோகுமோவென
"வேணா வேணா குடுக்காதே"

"கொடுக்கமாட்டேன் வா. வெவ்வவெவேன்னு காட்டிட்டு வா"
அதுவும் கைக்கு கிடைக்க போகிற மிட்டாய் மயக்கத்தில் கூடுதலாக கண்ணையெல்லாம் உருட்டி கெக்கலி காட்டியது சும்மாவே சிரிக்கிறவன் இதற்கும் சிரித்தான்.
"குடுக்காம சாப்ட்ற வயிறு வலிக்கபோகுது"

தலையை ஒரு வெட்டு வெட்டித் திரும்பி நடக்க
எண்ணெய் சீஹாக்காய் குளியலுக்கு பின் பைப் பின்னல் போட்ட விரித்த கூந்தலும் கூடவே சிலும்பியது. 
"பார்த்து பார்த்து கழுத்து சுளுக்கிக்கப்போகுது" என்றான்

"ஈந்னு இளிச்சு வைக்கிறியே உனக்கு பள்ளு சுளுக்கிக்கப் போகுது" பதிலுக்கு பதில் கொடுக்கத்தொடங்கியது அன்றுதான்.

கொடுக்கவே மாட்டேனென தெரிந்துமே அடுத்தடுத்த நாட்களிலும் கையை நீட்டுவான். ஒன்னே ஒன்னு ப்ளீஸ் ப்ளீஸோடு. நோ நோதான் பதில்

இந்த தங்கை பொடிசுக்கு ஐந்து வயதாகியும் மழலை மாறாமல் இருந்தது. அக்கான்னும் கூப்பிட்டு வைக்காது. பெயரிட்டு தான். அதை ஒழுங்கா உச்சரிக்கவும் வராது.கடையில் வந்து நின்று பூனா இதை வாங்கி கொடு பூனா அது எனக்கு வேணும்மென கூவியதில்  
"இன்னாது பூனாவா. பூனா கல்கத்தானெல்லாம பேர் வைப்பாங்க. பார்க்க மளையாள பொண்ணு மாதிரி இருக்க தெலுங்கு பொண்ணோட சுத்தற தமிழ் நல்லா எழுதற பூனான்னு பேர் வேற! உங்கப்பா பேர் என்ன இந்தியா மேப்பா"

நீ என்ன வேணா சொல்லிக்கோ உன் பக்கம் திரும்பறேனா பாரென விரைப்பாய் நினறாலும்

"சரி சரி சீக்கிரம் முறைச்சு பார் நான் வேற கிளம்பனும்"

அப்புறம் எங்கிருந்து முறைக்க. சிரிப்பை முழுங்குவதே பெரும்பாடு. 
பதில் கொடுக்கனுமே தொண்டையை செருமி சரிசெய்துகிட்டு 
" உனக்கு வேலையெல்லாம் இப்படி வெட்டியா நிக்கிறதுதானே
பாபு அண்ணா கடைக்கு முன்னால திருஷ்டி பொம்மையா நிக்கிறது தவிர 
மீதி நேரம் எதாவது துணிக்கடை ஷோகேசில்  நிற்பியா !!. தெரியும். அந்த ஈன்னு இளிச்சுக்காட்ற பொம்மை போட்டிருக்கும் சட்டைய கொடுங்கன்னு எல்லோரும் கேட்டு கேட்டு வாங்கிட்டுபோவாங்க தானே"

ஈஈஈ அவனைபோலவே 
இளித்துக்காட்டி சற்றும் எதிர்பாராத நேரத்தில் நீட்டியிருந்த கையில் ஒரு மிட்டாயை வைக்க.. 
நெஞ்சை பிடித்துக்கொண்டு தடுமாறி தரையில் சாயப்போவது போல பாவனைகாட்டி
" நீயா கொடுத்த! நிஜமாவா கொடுத்த! பாரு என்னால நம்பக்கூட முடியல அதிர்ச்சியில் நெஞ்சுவலியே வந்திடுச்சு பாபுண்ணா என் சொந்தகாரங்களுக்கெல்லாம் சொல்லிவிட்ருங்க" ஓவரா சீனப்போட்டுச்சு பயபுள்ள.

" போடா டேய்"  அவ்வளவு சின்னப்பெண் டேய் போட்டு பேசுதேன்னு கொஞ்சமாவது வேணாம். உப்பு உரைப்பே கிடையாது போல சாப்பாட்டில். வேகமாய் நடந்த போதும் சிரிப்பு சத்தம் தான்  காதில் விழுந்தது.

கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிக்குப் போகத் தொடங்கிய அந்த அடுத்த ஆண்டில். அதிகம் பேசுவதில்லை பார்ப்பதுமில்லை என்ற போதும் கூட அவனோடு ஒரு அடர்த்தியான ஸ்நேகிதம் உண்டாகியிருந்தது. 
அவன் அங்கே நிற்கும் நாட்களில் காட்டப்படும் டாட்டாவிற்கு அதே ஸ்டைலில்  பதிலுக்கு கையசைப்பதுவும் நில்லாத நாட்களில் வாங்கப்படும் மிட்டாய்களில் அவனுடைய பங்காக ஒதுக்கி ஒரு சின்ன காகிதத்தில் மடித்து பாபு அண்ணாவிடம் கொடுத்தால்..

பாபு அண்ணாவெல்லாம் ஒரு நடமாடும் தெய்வம். இஸ்திரி போடும் மெசெஞ்சர், கொரியர் சர்வீஸ்
அநியாயதிற்கு நல்லவராய் இருந்தார். 
சின்னபிள்ளைத்தனமா எதைக் கொடுத்தாலும் வாங்கி உரியபடி சேர்க்கும் மனிதர்.

இடையே ஒரு மாற்றம் வந்தது. இடமாற்றம். ரமாவும் அழகர் தெருவும் அவனும் அந்தகடைவாசலும் தூரமாக வடபழநியில் இருந்து கே.கே நகர் சோபா சுடுகாடு பக்கம் ஏபி ப்ளாட்டுக்கு குடிபெயர்ந்திருந்தோம்.

இங்கே கூட சோடிபோட்டு சுற்ற ராணி அண்ணா நகர் வாசிப் பள்ளித் தோழிகள் ஏராளம்.  அவ்வளவு குரூப் குரூப்பாக பையன்களை அதற்கும் முன்னும் பின்னும் எந்த ஏரியாவிலும் பார்த்ததில்லை. ஹவ்ஸிங் போர்ட் பசங்க எல்லாம் எட்டு வயது தொடங்கி இருபது இருப்பத்திரெண்டு வரை அவரவர் வயதிற்கேற்ப செட் சேர்ந்து விடுமுறை நாட்களில் வீதியெல்லாம் படர்ந்து கிடப்பார்கள். ஒவ்வொரு குரூப்பாக.
ராணி அண்ணா நகர் பசங்க எல்லோரும் மோசம்ன்னு சொல்ல முடியாது. இரண்டு ரெளடி க்ரூப் உண்டு.  அவங்க ஏரியா பொண்ணுங்கிட்ட வச்சுக்க மாட்டாங்க. அடுத்த ஏரியா பொண்ணுங்ககிட்ட வம்பிழுப்பது தான் டார்கெட். சும்மா வெறுமனே கேலி கிண்டல் அளவுக்கெல்லாம் இருக்காது. கொஞ்சம் கூடுதல் அராஜகத்தோடு கூந்தலை இழுப்பது கையில் வைத்திருப்பதை  பறித்துக்கொண்டு கூச்சலிடுவது மாதிரி. 
கவிதைகள் 
கிறுக்கிய பைண்ட் செய்து வைத்திருந்த என் நோட்டை அப்படிதான் பிடுங்கிக்கொண்டது அந்த வாணரப்படை. போகும் போதும் வரும் போதும் அதிலிருந்து ஒவ்வொன்னாய் படித்துக்காட்டி வெறுப்பேத்தும். பற்றிக்கொண்டு வரும் கோபம் ஆனால் 
வீட்டில் சொல்லவில்லை.தெரிந்தால் அம்மா அந்த பக்கம் ப்ரெண்ட்ஸ பார்க்க  போகவிடாதோன்னு தான்.

நண்பிகள் யாரையாவது சாரதியாக்கி சைக்கிள் உலாப்போகும் எல்லா சனி ஞாயிறுகளிலும் அழகர் பெருமாள் கோவில் தெரு பக்கம் போகாமல் விடுவதில்லை. அச்சமயம் ஐயா அவ்விடம் காட்சி அளித்தால் நின்று ஓரிரு நிமிடங்கள் கதையடிப்பதும் இல்லாமல் போனால் பத்திபத்தியாய் கிறுக்கியதை எல்லாம் காட்டச் சொல்லி பாபு அண்ணாவிடம் தருவதும். அடுத்தவாரம் அப்படிப்
போகும் போது அந்த பத்திக் கிறுக்கல்களுக்கு பதில் முகமாய் மிஞ்சிப்போனால் இரண்டு வரியில் எதாவது துண்டுச் சீட்டு கொடுத்து வைத்திருப்பான்.

" நான் பேப்பர் பேப்பரா எழுதறதுக்கு எல்லாம் நீ வரி வரியா தான் பதில் தருவியா. எழுத என்ன  கஞ்சத்தனம்"

" நான் எங்கேர்ந்து எழுதறது. எழுத்துக்கூட்டிப் படிக்கவே இப்பதான் கத்துக்கிறேன். கையெழுத்த பார்த்த இல்ல சேவல் கிறுக்கின மாதிரி. 
நிஜமாத்தான் 
இந்த ஸ்கூல் இல்ல ஸ்கூலு அங்க மழ வரும்போது ஒதுங்கக் கூட போகமாட்டேன்.. இப்பபாரு எதோ கட்டிட வேலை செஞ்சு காலத்தை ஓட்றேன். நிஜம்மா நம்பும்மா "

" ஆமா உன் சட்டை துணியெல்லாம் மண்ணும் அழுக்கும் ஒட்டியிருக்கிறத பார்தாலே தெரியுதே. போவியா இரு இனி எழுதினா காட்றேனா பார் "

உதார் பேச்செல்லாம் அப்போதைக்கு அப்போ தான். பேச்சுப்போட்டியில் வாங்கின முதல் பரிசு, நக்கீரன் கோபாலிடம் வாங்கிய கோப்பை, அப்பா வாங்கித்தந்த சோனி வாக்மேன் இன்னும் சின்னச்சின்ன விஷயங்களையும் சந்தோசங்களையும் அவனோடு பகிர்ந்துக்கவே மனம் நினைக்கும்.  அவன் தந்திருந்த  ஒவ்வொரு பரிட்சை நேரத்துக்கும் ஒவ்வொரு புது பேணா, என் சோனி வாக்மேனில் பாட்டு கேட்க எனக்கு பிடித்த பாடல்களை எல்லாம் தொகுத்து போட்டுக் கொடுத்த பிறந்தநாள் பரிசு மேலும் இரண்டே வரியென்றாலும் அந்தத் துண்டு சீட்டுகளை.. வாசிக்கிற கதைப்புத்தகங்களுக்கிடையே ஒட்டிவைத்து பத்திரப்படுத்தியிருப்பேன். பெரும்பாலும் ஷிட்னி செஷ்ல்டனில். அதெல்லாம் தான் அம்மா தொடாது.

நான் செய்கிற கிறுக்குத்தனங்களை எல்லாம் அவனும் செய்வான்.எந்த சந்தோசங்களையும் நல்ல செய்தியையும் என்னிடம் பகிர்ந்துகொள்ள. அப்படி எனக்கு காட்டச் சொல்லி பாபு அண்ணாவிடம் கொடுத்துவைத்திருந்த  அவனின் அடுத்த படிநிலை  வேலை மாற்றத்துக்கான கடிதாசியை கண்டுதான் ஐயா படித்த படிப்பு, பார்க்கிற வேலை,  வயது, அப்பா பெயர் முதற்கொண்டு இத்யாதி விவரங்களை தெரிந்து கொண்டது.

அடுத்தவாரத்தின் தீபாவளி நாளில் காலை பதினொரு மணி வாக்கில் பாபு அண்ணா கடைவாசலுக்கு வந்துவிடச்சொல்லி அவன் கொடுத்துவைத்திருந்த துண்டு சீட்டை பாபு அண்ணன் தந்தார்.

அன்றைக்கு விடியலுக்கே எழுந்து எண்ணெய் குளியல் புதுசு இத்யாதிகளை முடித்து விரல் சொடுக்கியபடியே நேரத்தை நெட்டித்தள்ளி அப்பா வெளியே கிளம்ப காத்திருந்து அவசரவசரமாய் செருப்பை மாட்டிக்கொண்டே "அம்மா நான் தீபா வீட்டுக்கு போறேன்னு குரல் கொடுத்தால். டிவி பெட்டியை விட்டு நகர்ந்து வந்து  
" இன்னைக்கு ரோடெல்லாம் கண்ணுமண்ணு தெரியாம பட்டாசு வைப்பாங்க.  வெளியே அனுப்பாதேன்னு உங்க அப்பா சொல்லிட்டுத்தான் போனார்" 
கதவை அடைத்தது என்னை பெத்த ஆத்தா.

சாம தான பேத தண்ட எல்லா முறைகளையும் கடைப்பிடித்து பெரும் குடைச்சல் கொடுத்து அடமாய் அடம்பிடித்து கோவத்தை மூட்டி  வசையெல்லாம் வாங்கி கட்டி- எங்கம்மா என்னைத் திட்டத்தொடங்கினால் காதில் தேன் தமிழ் பாயும். "தாடகையாட்டம் ஆடுபவள்" இப்படி யார் வீட்லயாவது யாராவது திட்டுவாங்களா!! எங்கம்மா திட்டும் இன்னபிற வழக்கமான வசவு வார்த்தைகளோடு அர்சித்து பத்ரகாளி போய்த்தொலையென ஆத்தா   அருள்வாக்கு தந்த அடுத்த நிமிடம் வீட்டிலிருந்து ஜீட். 
ஆனால் ரோட்டில் அந்த வெடிவெடிப்பில்  அதுவும் நடந்தே கடப்பது எரிச்சலாய் இருந்தது.   கூட வர ஒருத்தியும் இல்லையே. சொந்தமாய் சைக்கிள் இல்லாதது ஏக வருத்தம். மகன்கள் அடுத்தடுத்து இறந்தபின் மகள்களையாவது பத்திரமாய் காபாத்து செய்யும் எண்ணத்தில் அப்பா வாங்கித் தரவும் இல்லை ஓட்டக்கற்றுக்கொள்ள அனுமதிக்கவும் இல்லை. தெரியாமல் கள்ளத்தனமா கற்றுக்கொண்டது வேறு விஷயம். என்றாலும் இருந்தாதானே ஓட்ட.. சொன்ன நேரத்துக்கு முக்கால் மணி நேரம் தாமதமாகத் தான் போனது. பய அவனுடைய கூட்டாளிகளோடு சேர்ந்து தெருவே அதிரும்படி சரவெடி வைத்துக்கொண்டிருந்தான். காதுகளைப் பொத்திக்கொண்டு முகத்தை சுழித்தபடி 
தீபாவளியை ஒட்டி சாத்தியிருந்த பாபு அண்ணனின்  கடையில் ஒண்டி நின்ற என்னைப் பார்த்து சிரித்தபடியே வந்தான்.   கையில் அவன் அம்மா செய்த தீபாவளி பலகாரங்களைக் கொடுத்து
" என்னதிது தனியா வந்திருக்கே எங்க உன் ட்ரைவர்ஸ்"
" பண்டிகை நாளில் யார் ஊர்சுற்ற வருவா! ஒருத்தருமில்ல"
"சரி வா பட்டாசு வைக்கலாம்" 
" போடா எனக்கு இதெல்லாம் அலர்ஜி நான் மத்தாப்பு மட்டும் தான் வைப்பேன்" 
"மத்தாப்பா ஹைய்யோ பாப்பா .. பாப்பா விழுந்து விழுந்து சிரிப்பதுபோல் நக்கலடித்தான். பாபு அண்ணா பாப்பாவென என்னை விளிப்பதை பார்த்து அடிக்கடி அதைச் சொல்லி கிண்டலடிக்கும் பயபுள்ள. 
" பாரு அப்புறம் நான் கோவிச்சுட்டு போய்டுவேன்" 
" சரி ஓக்கே  இனி சிரிக்கல சொல்லு தீபாவளி ட்ரஸ் எப்படி இருக்கு"
" உன் ட்ரஸ்ஸுக்கு என்ன! எப்பவுமே சோக்காதானே சொக்கா போடுவே" 
" இப்ப இத பார்த்து சொல்லு என் வண்டி எப்படி இருக்கு. புதுசா வாங்கினதும் உனக்கு காட்டனும்ன்னு தான் வரசொன்னது"

"யேய் சூப்பர் டா கலரும் எனக்கு பிடிச்ச கலர். எங்கே ஸ்டைலா உட்கார்ந்து  ஒரு ரவ்ண்ட் ஓட்டிக்காட்டு பார்த்திட்டு போறேன். நேரமாச்சு அப்பா திரும்ப வர்றதுக்கு வீட்டுக்குபோனும்
இல்லாட்டி நான் காலி"
"அடிப்பாவி  இப்படி ஒரே நிமிஷம் நிக்க தான் வந்தியா! 
சரி வா உட்கார் உன்னை கொண்டுபோய் விட்றேன்"
" ஐய்யே  இதிலெல்லாம் ஏறமாட்டேன் என்னால முடியாது. ஆளவிடு. நான்  நடந்தே போய்ப்பேன்.டாட்டா "
" பாப்பான்னு சொன்னா மட்டும் கோவம் வரும். பைக்கில உட்காரக்கூட பயம். எங்கயும் கொண்டுபோய் தள்ளிட மாட்டேன்.மெதுவா ஓட்றேன்  வந்து உட்கார் பிசாசே" (இது சுடுகாட்டுக்கு பக்கத்தில் குடியிருப்பதால் வைத்த பெயர்).
"ரொம்ப பேசாதே முடியாதுன்னு சொன்னேன்ல்ல போ" 
  "சரிதான் போ எனக்கென்ன வழியில யாராவது பட்டாச கொளுத்தி உன் காதிலயே போடட்டும்"

விடுவிடுவென நடந்து  பாதி தூரத்தைக் கடந்திருக்கும்போது பின்னால் இருந்து இவன் குரல் திரும்பி பார்த்தால் வண்டியோடு போஸ் வேற 
" இப்ப எதுக்கு என் பின்னாடி வந்திட்ருக்க" 
தோளை குலுக்கி கைகளை விரித்து ஸ்டைல் காட்டினான். வண்டியில் தாளமிட்டபடியே
"இந்த பயந்தாகொளி பாப்பா மேல பட்டாச கொளுத்தி போட்டாங்களா இல்லையான்னு பார்க்கவேணாமா அதுக்குதான்."

"போடா உன் மூஞ்சி. பேசறேனா பார்" 
மீண்டும் விடுவிடுவென நடந்தபோதும் வீடிருக்கிற பகுதி வரை பின்னோடு வந்துதான் திரும்பப்போனான்.

பின்னான நாட்கள் நேருக்கு நேராய் பார்ப்பது கிட்டத்தட்ட  இல்லாமல் போனது. வார இறுதிகளிலும் நின்றால்தானே பார்க்க.   பிந்திய மாலையில் மட்டுமே பாபு அண்ணன் கடை பக்கம் போகிறவனை அந்த நேரத்தில் போய் எங்கிருந்து பார்க்க. வாய்பே இல்லாமல் நாட்கள் நகர 
வாய்போடு ஒரு மசங்கல்  மாலையில் வீட்டில் ஓடிக்கொண்டிருந்த டிவி பட்டென சத்தத்தோடு வெடித்து உயிர்விட அம்மா வெலவெலத்துப்போனாள்.   அப்பாவும் மதுரை போயிருந்த சமயமது.
"அச்சச்சசோ .. ம்மா உஷா வீட்டுக்கு பக்கத்தில ஒரு டிவி மெக்கானிக். போய் சொன்னால் உடனே வந்து பார்ப்பான். கூட்டிட்டு வரவா" 
அதிர்ந்து இருந்ததால் மறுப்பே சொல்லாமல் அம்மா தலையாட்டிவைக்க கிளம்பின வேகத்தில்  வெடித்த டிவியும் கூப்பிடப் போன மெக்கானிக்கும் மறந்தேபோனது.
இப்ப போனால் நம்மாளை ஒருதரம் பார்த்துவிடலாமேயென்றுதான்
மூளையில் பல்பெரிந்தது.

அடுத்த பத்தாவது நிமிஷம் மூச்சிறைய பாபு அண்ணா கடைவாசலை சேர்ந்துவிட்டேன். சற்றே தள்ளி முதுகுகாட்டி நின்று அவன் கூட்டாளிகளோடு கதையடித்துக்கொண்டிருந்தான்
கிட்டதட்ட அவன் கூட்டாளிகள் எல்லோருக்கும் என்னை தெரியும். யாரோடும் பேசியதில்லையே ஒழிய எல்லோரும் பரிச்சயம் ஆனவர்களே. நான் வந்திருப்பதை கூட நின்றவர்களில் யாராவது சுட்டியிருக்க வேண்டும். திரும்பி பார்த்து கடையை நோக்கி வந்தான். 
முகத்தில் சிரிப்புமில்லை வழக்கமான கால வாரும் பேச்சுமில்லை.
" இந்த நேரத்தில் யார் கூட வந்தே"
" பார்க்கனும்ன்னு இருந்துச்சு.. தனியா வந்துட்டேன்" 
" அறிவுகெட்டத்தனமா இது மாதிரி வேலையெல்லாம் செஞ்சு வைக்கிறதா இருந்தா இனிமே என்னை பார்க்கவே வராதே.. ஒன்னும் தேவையில்லை"

" நான் ஒன்னும் உன்னை பார்க்க வரல.பாபு அண்ணாவ பார்க்க வந்தேன் ரொம்பதான் அலட்ற"

" சொல்றது எதும் உன் தலையில் ஏறவே ஏறாதா! அங்க காலிப் பசங்க வம்பு செய்றாங்கன்னு சொல்ல தெரியுதில்ல. இருட்ன நேரத்தில இப்படி தனியா வந்தா வழியில எதாவதுன்னா யாருக்கு தெரியும்.  இப்ப நீ வளர்ந்துட்ட அதுக்கு ஏத்தமாதிரி நடத்துக்க."

வளர்ந்துட்டேன்னு சொல்லிக்கிட்டே சின்னபுள்ளையை பார்பது போல் நடத்துவது எரிச்சலாய் இருந்தது. ஆனால் ஒரு இருபத்தி ஏழு வயது இளைஞன் பதினைந்து வயது சிறுமியை எந்தக் கண்களில் பார்ப்பான். கூடவே எதோ ஒரு திணக்கத்தில் வந்துவிட்டபோதும் அந்த ஹவ்ஸிங் போர்ட் வானரப்படையை நினைத்து கொஞ்சம் பீதி எழத்தான் செய்தது. 
அமைதியாய் நிற்பதை பார்த்து அவனும் இறங்கிப் பேசினான்.

" கிளம்பு  உன்னை கொண்டு போய் வீடுவரைக்கும் விட்றேன். நீ தான் பைக்கில் ஏறவும் மூக்கால அழுவியே சரி வா" 
கூடவே நடந்துவந்தான். அந்த நிதான நடையில்  வீடிருக்கும் பகுதியை சேர இருபது நிமிடங்கள் பிடித்தது.
அவனைத் தெரியும் என்றாகி மூன்று வருடங்கள் முடிந்திருந்தபோதும் அதுநாள் வரை பாபு அண்ணா கடை வாசலில் மட்டுமே வைத்து பேசிப் பழகியதெல்லாம் அதுவும் அதிகபட்சம் மூன்று நிமிடங்கள் அளவே. இப்படி இருபது நிமிடங்கள் நீளப் பேசி கூடவே சேர்ந்து நடந்ததெல்லாம் அதுவே முதல் முறை ஏன் அதுதான்கடைசி முறையுமானது.

நேரம் தகையாமல் அதன் பின்னான நாட்களில் பாபு அண்ணன் வழி காகிதத்தில் கண்பார்க்கும் கிறுக்கல்கள் மட்டுமேயென ஆனது.

அச்சமயம் தாத்தாவின் இறப்பிற்கு லீவெடுத்து  கோவை  போனது, திரும்பிவந்ததும் தங்கிப்போன பாடங்கள் பரிட்சை என மார்க்கிற்கு பின்னே ஓடவேண்டியிருந்தமை அப்படி இப்படியென ஒரு பெரும் இடைவெளிக்குப்பிறகு போனபோது

" பாப்பா என்னாச்சு வரவேயில்ல. உங்கள காணாம சிவா இரண்டு மூனு தடவை உங்க வீட்டுப்பக்கம் கூட வந்து பார்த்தாப்டியாம்" என்றபடி நான் போகாத இடைவெளியில் அவன் கிறுக்கியிருந்ததென
கொத்தாக கையில் அள்ளிக்கொடுத்தார் பாபு அண்ணா.

பார்த்ததும் கண்களே தெரித்துவிடும்போல ஆச்சர்யம்
அட அந்த சோம்பேறிக்கு இவ்வளவு எழுதவெல்லாம் வணங்கியிருக்கே!!. ஒவ்வொன்றாகப் பிரித்துப் பார்த்தால் சிரிப்பு  சிரிப்பாய் வந்தது. ஒன்றிரண்டைத் தவிர மீதமெல்லாம் வெற்றுக்காகிதங்கள். காணாமல் தேடவிட்டு கடுப்பேத்தினதுக்கு பல்லுக்கு பல்  பழிப்பு செய்கிறாராம் ஐயா. அத்தோடு கூடவே
கல்யாணத்திற்கு வரப்பாரெனெ மிரட்டலோடு பத்திரிக்கையும் இருந்தது.

கையில் இருப்பது..  முதன்முதலாய் மனதிற்கு மிகப்பிடித்தவனுடைய கல்யாண பத்திரிக்கை என்றபோதும் துளிகூட வருத்தமோ பொறாமையோ அந்நேரத்தில்  எழவேயில்லை
"  பாபு அண்ணா பய மாட்டிக்கிட்டான்ல இனி பாருங்க எங்கிருந்து ஈன்னு இளிக்கிறது. வாயில ஜிப்பு வச்சு தைச்சிடுவாங்கல்ல "
சிரித்தபடியே கிண்டல் மொழியில் வாழ்த்துகளை காகிதத்தில் கொட்டி 
"கல்யாணம் பெரம்பூரில் நடக்குது. அந்தத்தூரம் நான் போனதே இல்ல அதோட அப்பாக்கிட்ட யாரோட கல்யாணம்ன்னு சொல்லி கூட்டிப்போறது. அதனால நான் வரமுடியாதுன்னு சொல்லிடுங்க".

வீடு திரும்பியதும் அவன் தந்து நான் பத்திரப்படுத்தியிருந்த மற்றவைகளோடு பத்திரிக்கையும் ஐக்கியாமானது.

பதினொன்றாம் வகுப்புக்கு வேறு பள்ளி. வழமை போல வேறு வீடு.  இன்னும் தூரமாக பாண்டிச்சேரி கெஸ்ட் ஹவ்ஸ் பின்புறம் வெஸ்ட் கே. கே நகரில் மாறிவிட்டோம்.

மாதங்கள் கடந்து 
முயன்று ஒருதரம் போனபோது 
பாபு அண்ணா வருத்தப்பட்டார்.
" என்ன பாப்பா நாளாச்சுதே வந்து. உங்களுக்கு காட்டச்சொல்லி கொடுத்துவச்சிருந்த கல்யாண ஆல்பம் ரொம்ப நாளா ஏங்கிட்டதான் இருந்துச்சு.  நீங்க வரவே காணோம்ன்னு அப்புறம் தான் வாங்கிட்டு போனாப்ல.முன்னமாதிரி வாரதில்ல. நேரமிருக்கும்போது  எப்பவாச்சும்   வந்தா  நீங்க வந்தீங்களா இல்லையான்னு கேப்பாப்ல என்றபடி ஒற்றை காகிதத்தைக் கொடுத்தார்.

வழக்கமான அதே சேவல்கிறுக்கலில்   
'ஏ லூசு எங்க நீ ' என்றிருந்தது.

கல்யாணத்திற்கு பிறகும் அவன் மாறியிருக்கவில்லை. நான் தான் மாறிட்டேன் போல. என்னதான் உற்ற சினேகிதம் என்றாலும் இப்ப அவன் வேறு யாருடைய சிவாவோ எனும் எண்ணம் இருந்ததாலோ என்னவோ பதிலுக்கு எதும் எழுதத் தோன்றாமல் "வந்தா சொல்லிடுங்க பாபு அண்ணா"
வாய்வார்த்தையாக மட்டும் சொல்லிவிட்டு வந்தபிறகு ஏனோ வேண்டுமென்றே அந்தபக்கம் போகாமலே  இருந்தும் மனது கேட்பதாய் இல்லை. சில பல மாதங்கள் கழித்து ஒருதரம் எட்டிப்பார்த்தபோது பாபு அண்ணன் கடையிருந்த இடத்தில் புதிதான கட்டிடம் உயிர்த்துக்கொண்டிருந்தது. அக்கம்பக்கம்  விசாரித்ததில் "சரியா தெரிலையே காமராசர் சாலையில எங்கியோ மாத்திட்டார்ன்னு சொன்னாங்க" பதிலாகக்கிடைத்தது

மனதிற்கு சங்கடமாய் உறுத்தியது.
இடைப்புற பாபு அண்ணாவை  பார்க்கவந்திடாத...என்னமாதிரி சுயநலமி நான்.

டாட்டாவுக்காக தலை திருப்பிப்பார்க்கும்
எப்போதைக்குமான வழக்கமாய் அந்த முனை திருப்பத்தில் ஒருதரம் திரும்பிபார்த்தபோது வீதியில் ஆள் நடமாட்டமேயிருந்தபோதும் கூட வெறிச்சோடித்தான் தெரிந்தது.

சிவா இல்லை,பாபு அண்ணாவும் இல்லை இனி இந்த இடத்தோடு எந்த பந்தமுமில்லை என்றானபோது
#கொசுவர்த்தி தீர்ந்தது. டாட்

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...