Friday, June 28, 2013

-► அனாமிகாவின் தீவு ◄-



இருட்டுப்  போர்வைக்குள்
எரிதூபத்தின் இளவரசி நான்

உப்புகண்டம் ஆன பின்பும்
உக்ரத்தில் நீந்தும்
மீன்களில் ஒருத்தியாய்

கருக்கட்டலுக்கு நேர்ந்து விட்ட
விந்துக்கள்  வாங்கி

பிறப்போ இறப்போ 
பெயரிலி எம் முதுகுக்குப்  பின்னால்
வழியும் உலகின்
புறம் மறைக்கும் புலம்பி

ஈரம் பொதிய கனவுகள் மென்று
 தூக்கத்தில் உயிர்க்கும் பதுமைகளின்
உறைந்த புன்னகையும் , உதிரமும் வற்றிய
உரநிலம் வாங்கியவனின் கிடப்பில்
பத்தோடு பதினொன்றாம்
தூண்டா மணிவிளக்கு

விழி மின்னும்ஒளியல்
அதரம் சிந்தும் மிளிரல்
அழகுதிர்க்கும்  மேனி இயம்பல்
நுண்ணுனர் அக நெகிழ் தூறல்

நிதானித்து ருசிக்கும்
இரகசிய காதலன்
 கண்ணாடியில்

-►புவனம் 
 
** ஆப்பிரிக்க பெண் வாரிஸ் டேரியின் கதை, அரேபிய பெண் -பிரின்சஸ் சுல்தானாவின் கதைகளை வாசிக்க நேர்ந்ததன் தாக்கம் ..
இந்திய அதிலும் தென்னிந்திய பெண்ணாய் பிறந்தது யப்பா சாமி.. வரம்.
நிமிர்வு கொஞ்சமேயானாலும் முதுகெலும்பு ஜீவி என்ற வகையில் 
 

Wednesday, June 26, 2013

சாரல்

 
 
மகிழ்-ந் -தேன்

நின் மஞ்சரியில் மலர்ந்த காட்டுப் பூக்களுக்கு
கடத்திப் போகும் வாசச் செய்தியில்
முத்தமிட்ட முதல் துளியும்
சந்தமிட்ட கடைசித் துளியுமாய்
நீர் விரவிய தாபம்!
என் யன்னலில் சாரல்...

-புவனம்

Monday, June 24, 2013

-► --- நின்னையே நிழலாய் --- ◄-



 

அவளுக்கு முன்பே அந்த குபெயில் ஒரு ஜோடி அளவிட்ட வரையில் புதுமண தம்பதி போலும்.

பெட்டி படுக்கையை வைத்த மாத்திரத்தில் ஜோடி காணாமல் போய் விட்டது. இன்னும் பத...்து நிமிடத்தில் ரயில் கிளம்ப தயார் நிலை.

அவளுக்கான படுக்கையை மேல்பர்தில் விரித்து வைத்து விட்டு கையோடு கொண்டுவந்த புத்தகத்தில் அமிழந்துவிட நினைத்து, வெண்ணிற விரிப்பை போட்டுகொண்டு இருந்தாள் சுரபி
பயணத்தில் தூக்கம் வராது அவளுக்கு ,முழு இரவும் கொட்ட கொட்ட விழித்து இருப்பது கொஞ்சம் கடுப்படிக்கும்.
கைபேசி சிணுங்கியது, என்னை கொஞ்சம் கவனியேன் என்று.

அவள் தான் கடங்காரி வினோதினி.. மூக்கை சுருக்கி கைபேசி வழியே விநோதினியை கொஞ்சம் முறைத்து பின் தொடர்பை இணைத்து காதுக்கு கொடுத்தாள்.

"கோவிச்சுக்காதே செல்லமே.. அடுத்த முறை உன்னோட கண்டிப்பா வருவேன். இப்போ முடியலை, ப்ளீஸ்..ப்ளீஸ் புரிஞ்சுக்கோ சுரபி மா, என் கண்ணுல்ல " ஏகத்துக்கு கொஞ்சி , திட்டு விழறதுக்கு முந்தி ஊதி அணைத்தாள் வினோ..

" சரி, எப்படியோ பொழச்சுப்போ , இப்போ நான் மட்டும் தனியா போர் அடிக்க பயணப்படுறேன் "

"போர் அடிக்காது.. நான் ஒரு யோசனை சொல்றேன், கண்ணை மூடிகிட்டு உன்னோட கனவு ராஜகுமாரனை நினைச்சுகிட்டு தூங்கு, காலையிலே ஊருக்கு போய்டலாம் எப்படி என் ஐடியா "

"என்னோட ராஜகுமாரனா!! பல்லை உடைப்பேன் என்கிட்ட இப்படி பேசினா "

ஐயோ வேண்டாமடி, பல்லை உடைச்சிடாதே அப்புறம் என் ராஜகுமாரன் என்னை பார்க்கவே மாட்டான் "பொய்யாய் பயந்தாள் வினோ
ச்சு, போனை வை, ட்ரெயின் கிளம்ப போது .அணைத்து, சீட்டில் போட்டு விட்டு மீண்டும் படுக்கை விரிப்பை தொடர தொட்ட போதுதான் கவனித்தாள் .

அவன் அங்கு நின்று கொண்டு இருப்பதை.. சற்றே அதிர்ந்து நின்று விட்டாள் .

அடுத்த பயணி போலும், யாரும் இல்லாத தனிமையில் விநோவிடத்தில் சற்றே சுதி ஏத்தி பேசியதை எல்லாம் கேட்டு இருப்பான் இந்த புதியவன் இல்லை நெடியவன்,
அவளை விட உயரம் அவன் அதற்கேற்ற உடல்வாகு, கொஞ்சம் மாநிறம் என்றாலும் கண், நெத்தி, மூக்கு, வாய் , மீசை எல்லாமே அளவெடுத்த ஆண்மை சொல்லியது. ச்சே என்ன இது ...

மூளை மரத்து ஏதேதோ யோசிக்குது. இவன் எப்படிப்பட்ட மன்மதனாக இருந்தால் எனக்கென்ன.. பார்வையை திருப்பிவிட வேண்டும் .

இப்படி அவள் எண்ணவோட்டம் இருக்கும் போதே அவனும் அதையே சொன்னான்."ஆள் பார்க்க கொஞ்சம் நல்லா இருந்தா போதும் இந்த பெண்கள் எல்லாம் பார்வையில் விழுங்கிவிடுகிறார்கள்..

பார்த்து முடிச்சிட்டா, கொஞ்சம் வழிவிட்டால் என் இருக்கைக்கு போவேன்" சற்றே, புருவத்தை உயர்த்தி, ஏளனம் துலங்க பேசினான் அவன்.

என்ன அநியாயம், இவனை கண்கொட்டாமல் பார்க்க பெண்கள் வரிசை கட்டி நிற்பதாக என்ன ஒரு பீற்றல் . இவனக்கு காட்டாயம் பதில் அடி தரவேண்டும் .. இல்லாவிடின் நான் சுரபி அல்லவே , உள்ளுக்குள்ளே கறுவினாள் அவள்..

"ஹ.. அதிசயத்துத்துக்குமேல் அதிசயமாக கண்ணில் தென்படுவதை நம்பவே முடியவில்லையே !! கண்களை விரித்து ஏகத்துக்கு அதிசயித்தாள் அவள் "
என்ன.. என்பது மாதிரி , புருவத்தை சுருக்கி கண்ணால் இடுக்கி பார்த்தான் அவன்.

காதில் மாட்டியிருந்த தொங்கட்டான்கள் ஆட ஒரு முறை தலையை சிலிர்த்து, பாவனையோடு மொழிந்தால் அவள் " தலையில் கொம்பு முளைத்த எதோ ஒன்று எல்லாம் இந்த குபெயில் கூட பயணிப்பதை நினைத்துக்கூட பார்க்கவில்லை.

ம் இது வரை மனிதர்களுக்கு மட்டும் தான் பேச தெரியும்னு தப்பா நினைத்துவிட்டேன் போல .இவ்வளவு அதிசயமும் நிஜம் தானான்னு உற்று பார்த்தேன். வேறே ஒன்னும் இல்லை.. சொல்லிவிட்டு, வழி விலகி இருக்கையில் அமர்ந்தாள்.

சண்டை கோழி, ச்சே.. சேவல் மாதிரி சிலிர்த்து கொண்டு சண்டைக்கு அவன் வரப்போவதை எதிர் நோக்கியபடி.
அப்படியே, நேர் மாறாக, அவள் சொல்லிமுடித்த சங்கதிக்கும், முக பாவனைக்கும் ..வரிசை பற்கள் பளிச்சிட, கண்ணோரம் துடிக்க நிறுத்தமாட்டாமல் சிரித்தான் அவன்....
மீண்டும் அதிர்ந்தாள் அவள், என்ன இது ! மட்டம் தட்டினால் சிரிக்கிறான். இன்னும் கொஞ்சம் உறைக்கிற மாதிரி வாரவேண்டும் போல உள்ளுக்குளே துடித்தது...தானும் நகைமுகத்தை காண்பித்து.
"ஹய்யோ, ஜந்து சிரிக்கவேறு செய்யுமா! யாரும் சொன்னால் நம்ப கூட மாட்டங்களே
ப்ளீஸ், நான் ஒரு போட்டோ எடுத்து வச்சுக்கட்டுமா ??"
இப்போதும், நகை முகம் மாறவில்லை அவனுக்கு, மாறாக கண்களில் குறும்பு பளிச்சிட்டது... "தாராளமாய்" விளையாட்டாய் எடுத்துக்கொண்டது போல தோளை குலுக்கி,இருக்கையில் ,அமர்ந்தவண்ணம் பார்வையால் அவளையே அளவிடுவது போல தோன்றியது அவளுக்கு.
இது மாதிரி ஆட்கள் கொஞ்சம் ஆபத்தானவர்கள். இவனிடம் பேச்சை வளர்க்ககூடாது என்று முடிவுக்கு வந்தாள், அவள்.

சட்டென எழுந்து தன் படுக்கையில் விழுந்து புத்தகத்தை விரித்தாள். இரயில் கிளம்பியது, புது ஜோடி தனக்கே, தனக்கான உலகத்தில் மூழ்கி இருந்தது.

சுரபி,தன்னை தவிர இன்னும் மூன்று பேர் அங்கே இருப்பதாகவே கணக்கில் கொள்ளாத வண்ணம்,புத்தகத்தோடு ஒன்றி விட்டாள். அது அவள் சுபாவம்.. ஒரு நல்ல புத்தகமும், வினோதினியும் அவளுக்கு ஒன்று.
எப்படியோ, தூங்கியும் இருக்க வேண்டும். முழிப்பு தட்டியபோது நேரம் ஐந்து எனக்காட்டியது. படுத்து இருக்க பிடிக்காமல் எழுந்து கதவை திறந்து வெளியே வந்தாள்.
முகத்தை கழுவி விட்டு, வெளிக்கதவை திறந்து, பிடித்து .. சில்லென்று முகத்தில் உரசிய அதிகாலை காற்றை சுவாசித்து சற்றே மயங்கி நின்றாள்.

மே மாதம் என்பதால் சீக்கிரமே விடியல் எட்டிப்பார்த்தது.
"குட் மார்னிங்".. அவன் தான், அவனுடைய குரல் இயல்பாய் தொனித்தது. பதிலுக்கு அவள் சொல்லவில்லை. கைகளை கட்டி விறைப்பாக வெளியே பார்த்தபடியே நின்றாள்.
அதே மாதிரி கைகளை கட்டி, குறும்பு கண்களால், அளவிட்டபடியே மீண்டும் " குட்மார்னிங் " என்றான் அவன்.
பொறுமையற்று திரும்பி,பாருங்கள் மிஸ்டர் "காலையில் எனக்கு சண்டை போட கொஞ்சமும் மூட் இல்லை" என்றாள் அவள்.

"எனக்கும் அதே தான். இன்னும் கொஞ்ச நேர பயணம், நாம் ஏன் ப்ரெண்ட்ஸ் ஆயிட கூடாது ? "வினவினான் அவன்.
"வேண்டாம்" வெட்டி துண்டித்த மாதிரி பதில் வந்தது அவளிடம் இருந்து
அல்லாமல், விரோதம் பாராட்ட காரணம் ஒன்றும் இருப்பதாக தோன்றவில்லை " என்றான் அவன்.
கூடவே" நான் நரேந்திரன், வீட்டிலும்,நட்பு வட்டத்திலும் நரேன்" என்றான்.

"சுயபுராணத்தை யார் கேட்டது!"அசட்டையாக அவள்
" சுயபுராணமா, பெயரை, சொல்வதா! சரி கேட்க்காமலே அளந்து விட்டேன் போல, இப்போது நான் கேக்கிறேன் உங்களை என்னவென்று அழைப்பார்கள்?? "
காதில் வாங்காமல் எங்கோ பார்த்தபடி நின்ற நிலை மாறவில்லை அவள்

ஒரு நிமிர்வான அவளுடைய பிடிவாதம் அவனுக்கு பிடிக்கவே செய்தது.

அதற்குள் அந்த வழியை கடந்த சீட்டு பரிசோதகர்.. இவர்கள் இருவரையும் பார்த்தவர்,கடமையே கண்ணாக அறிவுரை வழங்கினார்.

" பாருங்கள் சார், இது மாதிரி வெளிக்கதவை திறந்து நின்று காதல் செய்யாதீர்கள், ஒரு நேரம் மாதிரி இருக்காது... மூடி வையுங்கள்.." இருக்கிற வேளையில் இவங்களை எல்லாம் மேய்ப்பது தனி வேலையா போய்டுச்சு" புலம்பியபடி நகர்ந்தார் அவர்.

அவர் தலை மறையும் போதே, நகை துலங்க அவன் சொன்னான். " பாவம், இந்த மனிதருடைய மனைவி " குறும்பில் கண்களும் சிரிக்க, சேர்த்து சொன்னான்.
" வீட்டில் இவ்வளவு தள்ளி நின்று தான் காதல் செய்வார் போல!! "
இதற்க்கு, கோவமாய் முறைத்து பார்க்க வேண்டும் என்று தான் அவள் நினைத்து இருந்தாள்..ஆனால், அவளையும் அறியாமல் கன்னங்களில் ரோஜாக்கள் பூத்துவிட்டன"
போறேன்.. மாதிரி எதோ புலம்பிவிட்டு அங்கே இருந்து நகர்ந்துவிட்டாள்.உண்மையில் இவன் அபத்தானவனே.இன்னும் கொஞ்ச நேரமே, அதுவரை அந்த கண்களையும், சிரிப்பையும் மறந்தும் பார்த்துவிட கூடாது.நான், ஒன்றும் நெகிழி இல்லை.. தனக்கு தானே உருப்போட்டுகொண்டாள்.

ரயில், ஸ்டேஷன் வந்தடைந்தது.. தனது தோள் பையுடனும், இழுவை பெட்டியுடனும் இறங்கி விட்டாள் சுரபி. மருந்துக்குக்கூட அவன் பக்கம் திரும்பினாள் இல்லை.. வேக நடையில், அந்த இடம் விட்டு நகரும் பொருட்டு எட்டுகளை வைத்தாள் தான்.

எனினும், எதோ ஒரு உள்ளுணர்வு முதுகில் துளைப்பது அவன் பார்வையாக இருக்குமோ, பார்ப்பானா? அன்றி தோளை குலுக்கி விட்டு தன் வழியில் போய்விடுவானா? தெரிந்து கொண்டுவிட வேண்டும் போல உந்தி தள்ளியது.

ஒரு முடிவுக்கு வந்தவளாக, நடை தளர்த்தி, திரும்பினாள் அவள், மீண்டும் அதிர்ந்தே விட்டாள் ..
அவள் பின்னோடு .. மிக அருகில் அவன்.

அவள் பார்வையில் அதிர்வை காணவும், கைகளை மேல தூக்கி சொன்னான் அவன்" இது நாள் வரையில், பெண்களின் பின்னோடு அலைகிறவன் இல்லை நான். இப்போ, என்னோட ஒன்னு மிஸ்ஸிங்,ஒரு வேலை உங்க லக்கேஜோடு கலந்து விட்டதோனு ஒரு சந்தேகம் அது தான்."

என் லக்கேஜோடு!!,என்ன மிஸ்ஸிங்?? குழப்பத்தில் அவள்..
நிதானமாக அவன் சொன்னது " என் நிழல், பயணம் வரை என் கூடவே இருந்தது.. இப்போது என்னை விட்டு உங்களோடு போகிறது" இதை சொல்லும் போது அவன் கண்கள் குறும்பில் சிரிக்கவில்லை.கவனத்தோடு ஒரு எதிர்பார்ப்பு மட்டுமே இருந்தது.

ஆயிரம் பேர் நடமாடும் ரயிலடியில், இரண்டு, இரண்டு.. நான்கு கண்களும் தனித்து, ஒரே சங்கதி பேசியது..
 

-► புவனம்
 

Wednesday, June 19, 2013

அத்விகா



உயிர் உலவிப் பதுமைகளைப்
புனைபவன் எவனோ
சற்றே கூடுதல் உரம் ஊற்றி
அத்விகாவென   செய்திட்டான்
அவளை

இதுகாறும் அவள்
தலைக்கு ஏற்றமிட்டதில் கனமில்லை

எனினும்
மேய்ப்பானை விஞ்சி
 தெறித்தோடிய செம்மறியின்
கண்களையொத்த
கடவுளின் நிறத்தில்
ஒழுகியது வெயில்

-புவனம் 

Monday, June 17, 2013

மகிழ் நனைந்து



நகரும் காட்சிகள் முட்டிச் சிரித்தன
பயணச் சீட்டுக்கு வயதெழும்பாத 
சிறுமியின் ஆர்ப்பரித்தலோடு

உச்சமேறித் திரிதலில்
தரைதட்டாத
சிற்றெறும்புக்கு
முளைத்த சிறகின் கண்

மெல்ல இமை தாழ்த்தி
நிலவிடுக்கில்
கடல் விழுங்கும்
சூரியனின்
மயக்கொளி விம்பம்

எரியா நெருப்பின்
புகைச்சரப் பூக்கள்
தீராநதியில்

புவனம் 

தி.ஜானகிராமனின்



சரஸ்வதி பூஜையன்று புத்தகம் படிக்க கூடாது என்பார்கள். ஆனால், அன்று ஒரு நாளுமில்லாத திருநாளாகப் புத்தகத்தின் மேல் வருகிற ஆசை !

கீழே கிடக்கிற - பல்பொடி மடிக்கிற - காகிதத்தையாவது எடுத்துப் படிக்க வேண்டும் என்ற மோகம்!

அப்படி ஒரு மோகம் அல்லவா பிறந்திருக்கிறது இன்று இந்த காவேரிமீது (ஆறு)

தி.ஜானகிராமனின் - அம்மா வந்தாள் நாவலில் இருந்து
மனப்பிசாசு வாசித்தது

Saturday, June 15, 2013

மற்றுமொரு

 

நேற்று உன்னோடான பேச்சுவார்த்தைக்குப் பின்
அரைமயக்கத்தில் இரைந்து கிடந்த
மௌனத்தைக் கூட்டிச் சேமிப்பிலிட்டது
மாயம்

பச்சைப் பதியனிட்டதோ
 பாசியைப் படரச்செய்ததோ

விசைந்து மண்ணூரித்
தடமேறிய நாகத்தின்
புடைத்த படிமமாய்

பிடரியில் குழறிய
வெப்பச் சலனக் கதையின்
மீள்வாசிப்பு ..

தொடரும்

-புவனம்

Friday, June 14, 2013

நானென்பதும்.. எனதென்பதும்




 சிறு வயதில் இருந்து எனக்கு மிகவும் பிடித்த குறள் .. ஒரு சிறந்த தலைவன் இத்தகையவனாய் இருத்தல்

"காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம் "

-காட்சிக்கு எளிமையும், கடுஞ்சொல் கூறாத இனிய பண்பாடும் உடைய அரசைத்தான் உலகம் புகழும். எம் அய்யன் மொழி ஊறிய கூற்று.

மிகையுணர்ச்சிக்கு தாழாதவனும், மென்னகை தவழும் முகத்தில் ஒளித் ததும்பும் கண்கள்,கூர் நுணுக்கம்,மிதம் இதைத் தான் ஒரு ஆணில் பெண் தேடுவது ... இது என் பார்வையில்

நல்ல ஆண் மகனாக, நல்ல கணவனாக இல்லாதவன் கூட கனவுறுதியாய் சிறந்த தந்தையாக விளங்கக்கூடும்..

என் அப்பாவைப்போல -- எல்லா பெண் பிள்ளைகளுக்கும் போலவே எனக்கும்.அப்பா தான் உலகத்தின் சிறந்த ஆண்மகன் என்றே எப்போதும் நினைப்பு .. அப்பாவில் இருந்து தான் பெண் அடுத்த ஆண்களை கூர்கிறாள்.

வீட்டின் மூத்தப் பெண் என்பதாலும் அப்பாவையே அடர்த்தியாக பார்த்து வளர்ந்ததாலும் பெரும்பாலும் அவர் குணத்தையே பிரதிபலிப்பவள் ஆகிப்போனேன்.

அப்பா ஒரு சிறந்த வாசிப்பாளர், சிறந்த மேடைப் பேச்சாளர்..

உயிர்மெய் எழுத்துக்கள் கற்றுத் தெளிந்த வயதில் நேரடியாக வாசிக்க பாடப்புத்தகம் அல்லாமல் கதைப்புத்தகம் தந்தார்..

பாடப்புத்தகம் ஒரு விதமான திணிப்பு .. கதைப்புத்தக வாசிப்பின் ருசியில் மொழியறிவு தானே கைவரப்பெறும் என்றபடி..

விரல் பிடித்து வரிகளில் நகர்த்தி எழுத்தெழுத்தாகக் கூட்டி வாசிக்கச் செய்வார்.. அம்புலிமாமா தான் முதன்முதலாய் வாசிக்க கையில் எடுத்த புத்தகம் .. இன்றளவும் அம்புலிமாமா,சந்தமாமா புத்தகங்கள் மனதில் நிழலாடும்..

பிறகு முழுக்கதையும் அவர் தன் பாணியில், குரலில், ஏற்ற இறக்கத்தோடு வாசித்துக் காட்டும் போது கண்முன்னே கதையின் உருவங்கள் மிதக்கும்..

வேகமாய் அதே சமயம் பொருள் உள்வாங்கி வாசிக்க சிறந்தப் பயிற்சி தந்தவர் அப்பா..

இப்படித்தான் அந்த வயதில் புனைவுக்கதைகளில் மூழ்கி முத்தெடுக்க விழைந்தது.

பட்டிமன்றம்,பேச்சுப்போட்டிகளில் கலந்துக் கொள்ளும் போது கண்ணாடியில் நம் முகத்தை நாமே பார்த்துப் பேச கற்றுக்கொடுத்தவர் அப்பா .. பிறகு மேடை ஏறியதும் எவர் முகமும் கண்ணுக்கு தெரியாது, தயக்கம் இல்லாமல் , வாய் குழறாமல் பேச்சு கைவருமென.

உணவு விஷயமும், நுணுக்கி ருசித்தே என்பது அப்பாவிடம் இருந்து தொற்றிக் கொண்டது.

சம்பிரதாயம் ,பண்டிகைகள் , பூஜை புனஸ்காரம் இதில் எதுவும் அப்பாவுக்கு விருப்பம் இருந்தது இல்லை .. எனவே வளர்ந்தச் சூழலில் எனக்கும் இது எதுவும் தெரிந்து இருக்கவில்லை.. பின்னாளில் தெரிந்துகொள்ள விரும்பவும் இல்லை..

வாழ்கையை எந்த வித திணித்தலும் இல்லாமல் அதன் போக்கில் நீந்த விடுவதே பிடிப்பு.

வீட்டில் சாமியோ பூஜையோ இல்லை என்றாலும் ஒரு கோவில் விடாமல் அழைத்துப் போயிருக்கிறார்.. கோவில் என்றால் பக்தி மார்கத்தையும் தாண்டி ஒரு ஈர்ப்பு இப்போதும்..

எங்கும், எப்போதும் புது புது இடங்களுக்கு பயணிப்பது அவருக்கு பிடித்தம்.அப்பா ஒரு ஊர் சுற்றிப் பறவை.

பள்ளிநாட்களின் விடுமுறையில் விதிவிலக்கில்லாமல் திரிவோம் குடும்பத்தோடு எங்கேனும்..

பௌர்ணமி நடு நிசியில் கடற்கரையில், குளிர் காற்று மோத, மண் குழைத்து கட்டிய குகைக்குள் கற்பனை எஸ்கிமோக்கள் கூட விளையாட எவருக்கும் வாய்க்குமெனில் .. அவர் என் வீட்டில் பிறந்தவரே.

வருடத்தின் எல்லா பௌர்ணமிகளும் கடற்கரையில் தான்..

கோடை இரவில் எந்த ஒரு குல்பி ஐஸ் வண்டியும் எங்கள் வீட்டு வாசலில் வியாபாரத்தை முடிக்காமல் நகர்ந்தது இல்லை.

புவன், கண்ணு என்ற அழைப்பும்.. அன்பின் இசைச்சொறிவும், நெடுந்தூர பயணமும், நகையொலிக்கும் வீடும், கேரளத்து எல்லை வாளையாறு வனப்பகுதியில், மலைமுகட்டின் உச்சியில்,தாமரைக்குள நடையில், கடற்கரையில் அப்பாவோடு பிள்ளைகள் நாங்கள் ஓடிப்பிடித்து விளையாடிய அந்த முன்பாதி நாட்களில் மீண்டும் பயணிக்க முடிந்தால்..

வேர் பெயர்ந்த ரேகைகள்
தூரத்தில் எங்கோ பொன்ஆம்பல் பூக்காட்டில்
உள்ளங்கைக்குள் கரைசலாய் நான்

வேரில் இருந்து விழும் நிழல்..

-புவனம்

Monday, June 10, 2013

வள்ளி மயிலாள்!



போகிறப்போக்கில் எச்சமிட்டுப்
பறந்ததொரு பறவையின்
கீழ் கணக்கில்
துளிர்த்தவள்
அந்திமந்தாரையின் தாய்

இருள் பேழைக்கு
ஒளியேற்றலுகறக் குறிப்பெழுத
நியந்தவனின் கண்த்தடத்தில்
கிளர்ந்தவள் அவள்

தடதடக்கும்
நிமிடங்களை   நெட்டித்தள்ளியபடி
நெடுந்தூரப்  பயணத்துக்கான
பெட்டியடுக்களில்
விட்டுப்போனதன்
அடைப்புக்குறிச் சொல்லாய்
ஆகிப்போனான் அவன்

கிளை தன்
சிறகுகளோடு
தற்கொலைத்ததின்
வீச்சம் ஏகியது
பிரிவு நுகர்க்  காற்று

புவனம் 

Friday, June 7, 2013

மகிழ் துஞ்சிய


வளர்பிறைத்  தேயும்
சித்திரத்தாளின்
வடிவுணர்ப்  புணர்ச்சி
மசியின் கைச்சூடென
மகிழ்சிறந்து
உயிர்நீவிப் படர்ந்த
பெருந்தீ

கழிமுகக் கூடலின்
நீர்பசை குடுவை
தீண்டாதெனினும்
பூங்குழை மிதப்பசைவு

ஒளிமுடங்கியதொரு
யாமத்தின் அடர்வில் 
புதுப்பெயல் துவலையாய்
பச்சை நரம்பூடி
பனி நித்திலப்
பிரியத்தைப்  பருகக்கொடுத்தே
தாகமூட்டும்  காதல்


*கழிமுகம் - ஆறு, கடலோடு கலத்தல்
புதுப்பெயல் - முதல் மழை
துவலை - குளிர்ந்த நீர்

-புவனம்
 

Tuesday, June 4, 2013

நித்திலப் பணிலம்



நெகிழ் விசும்பு ஊடிச்சொரிந்த
பிறை முத்தத்தில்
குழையும் மூங்கில் சுவர்

கதகதப்பு வேண்டி குளிர்மூட்டிச் சூரியனுக்கு
மலர் விடுத் தூது மடலின்
மகரந்த மினுக்கல்

மீட்டெடுத்தலில் சொட்டுச் சொட்டாய்
படர்ந்து தழுவிய வெய்யிலின்
நிழல் விழுந்த மோட்சம்

புலன் விகசிக்கும் தருணம் புரட்டி தோய்தலின்
மந்தகாசம்

உதிர்காலத்து இலைப்பேசி அந்தாதி நோக்கமாய் 
காதல் காசினி !

-- புவனம்  
 

 

Saturday, June 1, 2013

பௌர்ணமியின் நிழல்



நிசப்தத்தின் எதிரொலிப்பை
காப்பிட்டுக்  கட்டி  இருத்திக்கொள்ள  நிழல்
நேர்ந்துவிட்ட நோன்பு
ஓங்காரமாய் ..

வெற்றிடத்தை வெறிக்க
திராணியற்று
இலக்கிலியாய்
எங்கோ திரியும்
கப்பல் பறவை ..

கனமேறிப் போன
சுவாசத்தை
கழற்றக்  கைகூடாது
காற்றின் மிடறில்
கற்பூரம் !!

-புவனா கணேஷன்

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...