Monday, April 29, 2013

வாழ்வுநிலை


உரக்க நிசப்தத்தில் உலகம்
உனக்கானது ஒரு மிடறில் விழுங்கல்

துவராடையில் துருத்தி நிற்கும்
தனைமறந்த தான்

 உதிர் இலை சருகுக்கும்
இடம்பெயர் காற்றுக்குமான
இரகசிய ஒப்பந்தம்

அரும்பு மொட்டாகி
முகை முகிழ்ந்து
மலர் மகிழ்ந்து
அலர் முகிந்து
வீ தொட்டு
செம்மல் இடுங்கால்

ஏகாந்தத்தில் தொலைந்து
இமைபொழுதும் திரும்புதல் வேண்டாத...


 


**பூவின் வாழ்வுநிலையில்
--------------------------------------------
1.வீ -வாடும்நிலை
2.செம்மல் -இறுதிநிலை

மாயவிரல்கள்



வெயில் உதிர் காலம்
வெப்ப வெதுமை நுகத்தடி
மின்விசிறியோடு மட்டுமே
காதல் கொண்டாடும் காற்று

புற வெளியின் தீட்சை பெற திறந்த சாளரம்
காப்பு தாளிட்ட கதவுக்கு அப்பால்
கடந்தே பழகிய படுகளி

நிசியின் நீள் நீட்சியில் வானம் குதிர்த்த
புள்ளிகளையெல்லாம் கோலமிட்டு
இணைக்கவென வளைந்த
மாயவிரல்கள்

முகம் நகுவதும், அகம் மிளிர்வதும்
உணர்வூட்டு செறிவு எழுதியதென் சிந்தையும்
மனமுவந்து எதிர்கொள்ளும் விந்தையும்
யாதும் ஆகியதென் பிரதிபிம்பம் 

Wednesday, April 24, 2013

நீ என்பதன் நீச்சம்



இச்சைக்கு இரைதேடும் ஓநாய்கள்
நாவினை அறுத்துக்கொள்ளட்டும்
குருதி ருசிக்கும்

இனபெருக்க இயந்திரங்கள் என்று தீண்டும்
விரல்களுக்கு விளங்கட்டும்
நககண்ணில் ஊசி துளைத்திடச்செய்யும்
எம் இயக்கு விசை என

வக்கிரங்களுக்கு வர்ணம் பூச
பட்டுப்பூசிகளை களவாடும்
தோல் போர்த்திய நர மாமிச பிண்டங்கள்
மரித்து மண்ணோடு மக்கிடுனும் ஆங்கே
விஷச்செடி முளைவிடாதிருக்கட்டும்

- புவனா கணேஷன்

செவிக்கு இசைவு

இரயில் சிநேகம் : உணர்வுகளின் வெளிபாட்டை அழுத்தமாக திரையில் கொண்டு வருவதற்கு கே.பாலச்சந்தருக்கு நிகர் அவரே தான்.. முதல் முதல் பார்த்த ..இன்றளவும் மனதோடு பதிந்த ஒரு தொடரும் வைரமுத்து வரிகளில் பாடல்களும்
http://www.youtube.com/watch?v=pQke6KMpaKU


சகானா ராகத்தில்.. வீணையோடு மனதும் மீட்ட படும்
http://www.youtube.com/watch?v=-JOM2WweBi8

http://www.youtube.com/watch?v=QWC9ITorMcg

 

வரமே எனில்



பிணியுற்ற பொழுதும் நன்றே
உயிர் துடிப்போசை நுகர..

உவந்து நோக்கலில் அழாகாய்
பனிமூடிய மலைச்சரிவில் தவறவிட்டதொரு குடை

ஒற்றை கோபுர உச்சியில் எவருக்கு என்றில்லாமல் சுடரும் நெய்விளக்கு

சுட்டெரித்தாலும் அஸ்தமன நேரத்தில் அள்ளிபருகவே தாகவிடாய்


 தனித்திருத்தலின் தவ முறிவு வரமே எனில்...

-புவனா கணேஷன்

துபாயில் ஒரு மழை நாள்


சுழற்றி அடிக்கும் மண் புயலின் ..அதி தீவிர வேகத்தை நேற்று மாலையில், நேரில் பார்க்க வாய்த்தது ...

காற்றில் மிதந்து மண் வட்ட வடிவமிட்டு சுழன்றது பார்க்க அழகாய் ..ஒரு கைதேர்ந்த நடன பெண்ணின் அடவுகள் போல்...

எதை கண்டாலும் மொபைலில் படம் பிடிக்க...ும் வழக்கம் இருக்கிற எனக்கு இதை எடுக்க முடியவில்லை ... காட்சி தெளிவாய் விழுந்து ஒத்துழைக்கவில்லை...

முன் இரவு தொடங்கி ..பின் இரவு வரை காற்றின் வேகம் குறையவில்லை,மழை விடாமல் பெய்த்தது (பாலைவனத்தின் மழை - அதிசயமோ அதிசமாய் ) மழை பொழிவில் மண் மயங்கி மௌனித்தது.

காற்றும் மழையுமான கூடல் சங்கமத்தை ரசிக்க நேரம் இருக்கவில்லை.இன்று எங்களுக்கு வாரத்தின் முதல் நாள் தொடக்கம்.

இரண்டு நாள் விடுமுறை கொண்டாடத்தில் திளைத்த பிள்ளைகள் ..விடியா சோம்பலுடன் விடியும் முன் கிளம்பி ஸ்கூல் பஸ் பிடிக்க கிளப்பி தயார் செய்ய வேண்டும் என்பதால்...

இன்றும் ..இன்னமும் வெய்யில் வராத மெகா மேக மூட்டம், மீண்டும் மழையை உதிர்க்கலாம்...



Thursday, April 18, 2013

குருனைக்கட்டி

இது கதையல்ல...சமூகத்தின் அழுக்கு பக்கம், அவலத்தின் முடிச்சு

எல்லா கிராமங்களையும் போல அந்த ஊரும் மெல்ல மெல்ல வளர்ச்சி கண்டது... எப்போதோ, யாராலோ நிறுவப்பட்ட நேரு சிலைக்கு அருகே இரண்டு மணி நேரத்திற்க...ு ஒரு முறை வரும் பேருந்து, இப்போது அரைமணிக்கு ஒன்றானது.. வரும் வரை பயணிகள் காத்திருப்புக்கு சிமெண்ட் நிழற் குடை கட்டப்பட்டது.

கன்னியாஸ்திரிகள்.. சிறிய அளவில் புறநோயாளிகள் சிகிச்சை மையம் மற்றும் பால்வாடி கல்விக்கான குடில் ஒன்றை அருகே அமைத்தார்கள். சின்னதாக ஒரு பொது நூலகமும்.

இப்படியாக அந்த ஊர் எல்லை தொடங்குமிடம் கம்பிரமான அழகு கொண்டு விட்டது .. அங்கே அவள் மட்டும் ஒரு அழுக்கு புள்ளி.

அவள் அந்த ஊரை சேர்ந்தவள் இல்லை .. சில வருடங்களுக்கு முன் எங்கிருந்தோ வந்து சேர்ந்து இருந்தாள்.. யாது ஊர், என்ன பேர் எவருக்கும் தெரியாது, அதை விளக்கி சொல்கிற புத்தி அவளிடம் இல்லை... அழுக்கு மூட்டை என்று பொருள் படும் படி குருனைக்கட்டி என்றே மற்றவர் அவளை அழைக்க தொடங்கினர்.. நாளடைவில் அதுவே அவளது அழியா பெயர் ஆனது.

நிழற் குடை கட்டப்பட்ட நாளில் இருந்து அது தான் அவளது பட்டா போடாத உறைவிடம்,பசிகிறதோ இல்லையோ ஓயாமல் உண்பது மட்டுமே அவளுக்கு தெரிந்த, பிடித்த விஷயம்.. தட்டை ஏந்தி வீடுகள் தோறும் உணவு வேண்டி நிற்பாள்.செவ்வாய் கிழமை சந்தை நாட்களில் கடைகளிலும்.. "இல்லை போ" என்று எவரும் விரட்ட மாட்டார்கள் .. எதை கொடுத்தாலும் வாங்கிகொண்டு சத்தமில்லாமல் போய் விடுவாள்..

புத்தி சுவாதீனம் இருக்கிறதா இல்லையா என இனம் காணமுடியாத படி அவள் நடப்பு இருக்கும்.. சில நேரம் தன் போக்கில் தானே பேசிக்கொண்டு கிடப்பாள்.. வருட கணக்கில் பார்க்கிற அதே முகங்கள் என்பதால் எல்லோரையும் அவளால் இனம் கண்டு கொள்ள முடியும்.

ஆண்கள் என்றால் மச்சான் என்றும் பெண்கள் என்றால் மச்சி என்றும் அழைத்து பேசுவாள்..

மில்லுக்கு, டவுனுக்கு போக பஸ் பிடிக்க எவர் வந்து நின்றாலும் "மச்சான் எங்கே போறே" என்று கேட்டு வைப்பாள்.நாட்டுப்புற மனிதர்கள் சாங்கியம் பார்பார்களே " அய்யே.. நல்ல காரியத்துக்கு போகும் போது இது வேறே இப்படி கேட்டு வைக்குது" நொந்து கொண்டு போவார்கள்.. கேள்வி கேட்பதோடு சரி, பதிலை எதிர்பார்க்க மாட்டாள். வேறு எங்கோ பராக்கு பார்த்தபடி அவர்களை மறந்திடுவாள்.

விதவிதமான நிறங்களில் சேலை, யாரும் கட்டி இருந்தால் உற்று நோக்குவாள். "மச்சி சீலை நல்லா இருக்கு. "

இதில் கொடுமை என்னவென்றால் அவளிடம் பாவம் பார்த்து, நிறைய பெண்கள்.. கட்டி அழுத்து போன சில புடைவைகளை தருவார்கள்..ஆசையாய் வாங்கி கைகளில் வருடி பார்த்து நன்கு மடித்து தன் மூட்டைக்குள் பத்திரபடுத்தி கொள்வாளே அன்றி அழுக்கேறி போய் ஆங்காங்கே கிழிந்து தொங்குகிற மேலாடையை மாற்றியதே இல்லை .. என்றாவது மழை நாளில் நனையாமல் ஒதுங்க வேண்டும் என்ற கூர்மைஇல்லாமல் நின்றாள் என்றால் அது தான் அந்த வருடத்தின் அவளது குளியல்.

முப்பதின் பின்பாதியில் இருந்த அவள் அழுக்கு, வறண்டு, தோல் சுருங்கி கருத்த தேகமும், சிக்கு பிடித்து ஜடா முடியாய் தொங்கும் தலையுமாக பயம் கொள்ளவைக்கும் உருவம் அவளுடையது..

" இங்க பாரு, சாப்பிடலை.. குருனைக்கட்டியிடம் பிடித்து கொடுத்துவிடுவேன்"என்று அம்மா மார்கள்

இவளைக்காட்டி தான் சோரு ஊட்டுவார்கள் பிள்ளைகளுக்கு.

கன்னியாஸ்திரி குடிலுக்கு சாந்தா சிஸ்டர் வந்து சேர்ந்த பிறகு குருனைக்கட்டியின் வாழ்வியல் முறையில் சிறிது மாற்றம் வந்தது..

நிழற்குடையில் பேருந்துக்கு நிற்கும் போது " மச்சி எங்கே போறே" கேட்ட அவளை பார்த்த மாத்திரத்தில் அவருக்குள் ஒரு இளக்கம், தாய்மை உணர்வு .. ஆதரவின்றி கிடக்கும் ஒரு கைபிள்ளையாக தோன்றியது சிஸ்டருக்கு.

யாரும் பக்கத்தில் போகவே அருவெறுப்பு படும்படி இருக்கும் அவள் அருகில் போய் கரங்களில் தொட்டு எழுப்பி நிறுத்தி மருண்ட பார்வை பார்த்த அவளிடம் கேட்டார் சிஸ்டர்.. " என் கூட வர்றியா"

உடனே குழந்தையாய் முகம் குதுகூலம் காட்ட " திங்க கொடுபியா " என்றாள் அவள்.

இரண்டு மூன்று நாட்கள் கூட குடிலில் தங்கி இருக்க முடியவில்லை குருனைக்கட்டிக்கு .. தலை முடி நீக்கப்பட்டு மொட்டைஅடித்தையும், தேய்த்து குளிக்க செய்து வேறு உடை அனுவித்தையும் தனக்கு நடந்த பெரும் கொடுமையாகவே கருதினால் அவள்.

என்னதான் சாப்பிட கிடைத்தாலும் கட்டி போட்டு வைத்தது போல அங்கு பிடிக்காமல், அழுது ஆர்ப்பாட்டம் செய்து தன் அகமான பேருந்து நிற்கும் நிழற்குடைக்கு ஓடிவந்துவிட்டாள். சாந்தா சிஸ்டர் அவளை கட்டுபடுத்த முடியாது என தெரிந்து கொண்டார். தூரத்தில் இருந்து வேண்டியன செய்வோம் என நினைத்தும் கொண்டார்..

அப்போது தான் அது நடந்தது.

நடக்கமுடியாமல் நடந்து தெருவுக்குள் வந்தாள் அவள், கொளுத்துகிற வெயிலில் கண் எரிந்தது.

அதற்குமேல் கடக்க முடியாது என்பது போல தென்பட்ட ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்து, திறந்து கிடந்த வீட்டின் உள்ளே பார்த்து குரல் கொடுத்தாள்.." மச்சி. " ...

இரவு தூங்க போகும் முன் தாழ்ப்பாள் இடுவது தான் ... மற்ற நேரங்களில் அங்கே எல்லா வீட்டின் கதவுகளும் விரியத்தான் திறந்திருக்கும்.. இருந்தும் பட்டென்று ஒருவர் வீட்டிலும் அவள் நுழைய மாட்டாள். திண்ணையோடு சரி.

குரலில் அறிந்து வட்டில் நிறைய உணவை எடுத்து வந்தாள் ராதா. வழக்கத்துக்கு மாறாய் அதை வாங்க மறுத்தாள் குருனைகட்டி " ஐயே எனக்கு இது வேணாம், புட்டு சுட்டுக்கொடு மச்சி".

"இப்போ இது தான் இருக்கு, எடுத்திட்டு போ"

"இல்ல வேணா, எனக்கு புட்டு தான் வேணும்"

அடமாய் அசைய மறுத்து இருந்தாள் அவள். முதலில் சற்று முகம் கடுத்த போதும் என்ன நினைத்தாலோ உள்ளே போய் பத்து நிமிடத்தில் ஆவிபறக்க இட்லிகளை எடுத்து வந்து தந்தாள்..

அந்த நிமிடம் குருனைக்கட்டியின் முகத்தை பார்க்க வேண்டும்.. சொர்கமே கையில் கிடைத்த பூரிப்போடு சேர்த்து பிசைந்து, கைகொள்ளும் மட்டும் அள்ளி வேக வேகமாய் உண்டு முடித்து அவள் நகர்வதையே பார்த்திருந்த ராதாவை பேச்சுக்கு இழுத்தாள் எதிர் வீட்டு மருதாயி

" வேலியிலே போறத இழுத்து விட்டுக்கிற சொல்லிட்டேன்.. இனி உன் வீட்டு திண்ணைக்கு சட்டமாய் குடி வந்துவிடுவாள் பார்த்துக்க"

"பாவமாயிருக்கு க்கா, எதோ உடம்பு முடியலை போல, வயிறு வீங்கி கிடக்கு, நடக்க முடியாம நடந்து போகுது பாரு"

ஆமா.. கணக்கில்லாம தின்னா வீங்காம என்னத்த செய்யும்." - மருதாயி

உடுமலைபேட்டை, பொள்ளாச்சி,திண்டுக்கல்,சேலத்தில் கேம்ப் பணி முடித்து, சமயம் வாய்த்ததில் கண்டு விட்டு போக வந்த சாந்தா சிஸ்டர் இப்போது குருனைக்கட்டி இருப்பதின் நிலையை பார்த்து துணுக்குற்றார்..

உடம்புக்கு எதோ பெரிதாக நோய் கண்டு இருக்க வேண்டும், அழைத்தால் மருத்துவமனை வரை வரமாட்டாள் என்பது தெரியும் என்பதால் அங்கேயே வைத்து பார்க்க முயன்றார்.. ஒரு நீண்ட போராட்டத்துக்கு பிறகு பரிசோதனையின் முடிவில் கிடைத்தது பெரும் அதிர்ச்சியாய் குருனைக்கட்டி கற்பவதி என்பதே..

கடவுளே என சாந்தா சிஸ்டர் மண்டியிட்டு, சரிந்து அப்படியே அதிரிச்சியில் உறைந்து விட்டார்..

"கடவுளே, புத்தி பிசக்கிய இவளுக்கு என்ன மாதிரி சோதனை". அவர் மனம் தங்காமல் அரற்றினார்.

ஊர் முழுக்க காட்டு தீயென பரவியது விஷயம்..

இப்படி இருக்கும் என யாரும் யூகித்து கூட பார்த்திருக்கவில்லை.. எப்படி ஒரு கேவலமானவன், இன்னும் இன்னும் வாய்க்கு வந்ததெல்லாம் சொல்லி அந்த முகம் தெரியாத காமுகனை கரித்து கொட்டி, காரி துப்பினார்கள் எல்லோரும்..

எது எப்படி என்றாலும் பிடித்த பிடியை விடாமல் அங்கிருந்து நகரமாட்டேன் என்று விட்டாள் குருனைக்கட்டி, பின் மாதங்களில் இருக்கிறாள் என்பது தவிர எப்போது பிரசவிப்பாள் என தெரிய முடியாமல் இருந்தது.

நிழற்குடைக்கு எதிரேயே நாயரின் டீ கடை.. சிஸ்டர் அவரிடம் சொல்லி வைத்தார், ஒரு கண் பார்த்து கொள்ளும்படியும், கொஞ்சம் பணமும் தந்தார்.. வேண்டியதை தர சொல்லி.. டீ கடை காரர் அதை வாங்க மறுத்து விட்டார்..

"நானும் பிள்ளை குட்டிகாரன் .. அதுக்கும் சேர்த்து கொடுத்துவிட்டு போறேன்.. பணம் எல்லாம் வேண்டாம்"

முன்னே மாதிரி தெருவில் இறங்கி நடப்பது, சந்தைகடைக்கு போவது, தன் போக்கில் பேசி கொள்வது ஏதும் இல்லாது போனது அவளிடம்.உள்ளே சிமெண்ட் பெஞ்சில் சுருண்டு கிடந்தாள் அல்லது சுவரோடு சாய்ந்த வண்ணம் விட்டத்தை வெறித்தவாறு இருந்தாள்.கால்கள் வீங்கி போய் நடப்பதை சிரமம் ஆக்கியிருந்தது அவளுக்கு..

வயிற்றில் கணம் ஏற ஏற முதுகு எலும்பில் வலி காண்பது, சுமை காலத்தில் இயல்பு எனினும் வயது போன காலத்தில் அவளுக்கு இப்படி நேர்ந்து இருப்பதால் இடுப்பில் எழும்பு விரிந்து கொடுப்பது என்பது சிரமம்..

உள்ளே என்ன வாதையோ, அதை உணர முடியாமல் சில நேரம் வாய்விட்டு தேம்பி அழுது கொண்டு இருப்பதை பார்த்து ஊரார் செய்வதறியாமல் தவித்தனர்..

நேரம் ஒதுக்கி, மகளை பார்த்து கொள்ளும் தாயாக இருந்து அவளது புரியாத வேதனைக்கு மருந்தாக அன்பு கட்டினார் சாந்தா சிஸ்டர்.. அவளுக்கும் மெல்ல மெல்ல சிஸ்டரின் அன்பு முகம் பழகிவிட்டது.. இருந்தும் அவர் கொடுக்கும் மருந்துகளையும், ஊசியையும் வெறுத்து பயந்து அலறினாள்..

நடுநிசியில் நாய்கள் கூடி குறைத்து கொண்டு இருந்த சத்தம் தவிர ஊரே அடங்கி இருந்தது. சிரமத்தோடு புரண்டு கொண்டு இருந்தாள் குருனைக்கட்டி... சின்ன சின்ன சுருக் சுருக் வலி தொடங்கியது... ஏகத்துக்கு பறந்து கடிக்கும் கொசுக்களின் கடி என்பதாக நினைத்து கொண்டு சுத்தி இருக்கும் கொசுக்களை கையில் இருந்த துணியால் விரட்டினாள்.

இப்போது வலியின் அளவில் சற்றே பெருக்கம். ஒரே நேரத்தில் தனக்கு நிறைய ஊசிகள் போட படுவதாக அதை கற்பனை செய்து கொண்டு அலற தொடங்கினாள்.. கால்களை அசைத்து முரண்டு பிடிக்க நினைத்தால் அசைக்கவே முடியாத மரண வேதனையை கால்கள் கண்டன..

பிரசவ காலத்தில் நரம்புகள் இழுத்துக்கொண்டு கால்கள் மரத்து போய் அசைக்க முடியாமல் போவது இயல்பு.. பேதை பெண்மணி அவளுக்கு என்ன புரியும். தன் கால்களை யாரோ கட்டி போட்டுவிட்டதாக நினைத்து புலம்பினாள்.. பயத்தில் கண்கள் பிதுங்கியது. அவளுக்கு தெரிந்த ஒரே உபாயமாய் உண்பது.. பரபரவென மூட்டையை பிரித்து கையில் கிடைத்த ரொட்டி துண்டுகளை எடுத்து வாய் கொள்ளுமட்டும் அடைத்து கொண்டாள்..அதற்குள் இடுப்பில் கடப்பாறையால் ஓங்கி யாரோ அடித்தார்கள்.. நங்கென்று கிளம்பிய வலியோடு.. தொண்டையில் விழுங்க முடியாத ரொட்டி துண்டுகள் அடைத்துகொண்டது... தண்ணீர் பருக வேண்டும் என்ற தவிப்பு..

அவளிடம் நீர் இருக்கவில்லை. விக்கல் எடுக்க தொடங்கியது... இடுப்பில் குறிவைத்து இப்போது பலபேர் அடிக்க தொடங்கிவிட்டார்கள்.. கால்களை வேறு கட்டி வைத்து, அலற முடியாமல் கழுத்தை யாரோ நெரிப்பது போல எல்லாம் அவள் கண்களுக்கு பிரம்மை தோன்றியது..

சாந்தா சிஸ்டர் - அன்பு முகம் தன்னை காக்கும் என அந்த கணத்திலும் தோன்றியது போலும் எப்பாடு பட்டாவது அந்த இடத்தில் இருந்து தப்பிவிட, நடக்கமுடியாத உடம்பை தரையோடு நகர்த்தி, தரங்கி தரங்கி வெளியே வந்தாள்.. வயிற்றில் சுமையோடு, இடுப்பில் வலியோடு, நீருக்கு தவித்து விக்கல் எடுக்கிற நாவுடன் நகர்ந்து கடப்பது முடியாத போதும்.. கைகளில், கால்களில் சிராய்ப்பை, ரத்தம் கசிவதை கூட பொருட்படுத்தாமல் நேரு சிலை வரை வந்து விட்டாள் ஈனசுரத்தில் இப்போது அவள் குரல் ஓலமாய் ஒலித்தது.

பனிக்குடம் உடைந்து இருக்கவேண்டும் அதற்குமேல் நகர முடியாமல் அப்படியே கிடந்து அரற்ற தொடங்கினாள்.. இடுப்புக்கு கிழே வலி இடியாய் இறங்கியது... துடி துடித்து செய்வதறியாமல் கைகளில் மண்ணை அள்ளி முகத்தில் பரபரவென தேய்த்தவாறு கதறினாள்..

சுடலையப்பர் பண்ணைக்கு பால் எடுக்க வந்து கொண்டிருந்த நாயர் அதை பார்த்ததும் சைக்கிளையும் கேனையும் அப்படியே போட்டு விட்டு குடிலை நோக்கி வேகமாய் ஓடினார்...சாந்தா சிஸ்டரும் மற்றவர்களும் வருவதற்குள் பிள்ளையின் தலை வெளியே கண்டு விட்டது.. அதற்குமேல் அங்கே இருந்து மருத்துவமனை தூக்கி செல்வது சிரமம் என புரிந்தது.. உள்ளூரில் பிரசவம் பார்க்கும் மருத்துவச்சியும் வந்து சேர்ந்திருந்தாள்.


அங்கே தெருவிளக்கு இல்லை. கையில் ராந்தல் விளக்கோடு ஊர்மக்களும் கூடிவிட்டு இருந்தனர்.எத்தனை முயன்றும் பிள்ளையை வெளியே எடுப்பது சுலபாய் இல்லை.. புத்தி கலங்கிய பெண்மணி அவளுக்கும். முக்கி முயன்று பிள்ளையை வெளியே தள்ள வேண்டும் என்பது சொன்னாலும் புரியவில்லை.. வலி ஒன்றே பிரதானமாய், துன்புறுத்த.. அலறி துடித்துக்கொண்டு இருந்தாள்.. போராட்டத்தில் மருத்துவச்சிக்கு கூட உடம்பெல்லாம் வேர்த்து, மயக்கமே வந்துவிடும் போல் இருந்தது..

குருனைக்கட்டியின் அளவில்லாத பெருந்தீனியில் பிள்ளை வயிற்றில் அதீத வளர்ச்சி கண்டு எடை கூடிய குழந்தை என்பதாலும், அதிகம் விரிந்து கொடுக்காத அவளது கற்ப வாய் வழி, பிள்ளை வெளியே வருவது சிக்கலாய் இருந்தது.

நாற்பத்தைந்து நிமிடங்கள் அரும்பாடுபட்டு முயன்றதில்.. பெயர் அற்ற தாய்க்கும், முகம் தெரியா தந்தைக்கும் ஜனித்தோம் என்பது தெரியாமல் பிள்ளை வெளியே வந்து விழுந்தது...

அடுத்த நிமிடம் குருனைகட்டியின் உடல் நடுங்க தொடங்கியது..

பிரசவித்து முடித்ததும் பெண்ணின் உடலில் குளிர்நடுக்கம் அதிகமாகவும் , பற்கள் கூட கிடுகிடுவென தந்தியடிப்பதும் நடக்கும் தான் எனினும் அவளுக்கு அதிகபடியாக தூக்கிபோட்டது.மூச்சு காற்றுக்கு சிரமபடுவதாய் நெஞ்சுக்குழி ஏறி இறங்கியது..

அவளது தலைமாட்டில் இருந்து தாங்கி பிடித்திருந்த சிஸ்டரின் முகத்தில்தான் அவள் பார்வை நிலைதிருந்தது.. பிள்ளை வெளியே வந்த வழியில் உதிரபோக்கு கட்டுபடாமல் ஆறாய் ஓடியது.. எதை செய்வது, எப்படி காப்பது என தெரியாமல் சுத்தி இருந்த அத்தனை பேறும் திகைத்து விழித்தார்கள்.

எந்த முதல் உதவிக்கும் கட்டுபடாமல் ஜன்னி கண்ட உடம்பில் வலிப்பு வர தொடங்கியது.. கை கால்கள் வெட்டி வெட்டி வாயில் நுரை தள்ள தொடங்கி இரண்டாவது நிமிடம் அங்கே குருனைகட்டி என்று அழைக்கப்பட்ட நல்ல அத்மாவுடைய வெற்று உடல் மட்டும் தரையில் கிடந்தது.. நிலைகுத்திய பார்வை சிஸ்டரை பார்த்த வண்ணமே..

ஆத்மா சாந்தியடையட்டும் என விரல்களால்.. திறந்திருந்த கண்களை மூடி நெற்றியில் சிலுவை வைத்தார் சிஸ்டர் .துணியால் சுற்றப்பட்ட குழந்தையை கைகளில் அள்ளி அணைத்து கொண்டார் தாய்க்கு தாயானவர். குழந்தையின் வீறிட்ட சத்தம் இருளை கிழித்து கொண்டு கேட்டது ....


-


 புவனா கணேஷன்

Friday, April 5, 2013

:: அவனுக்கும் அவளுக்குமானது ::

 
:: அவனுக்கும் அவளுக்குமானது ::
 
 

மைல் கல் கூடிய இடைவெளி
மிகை நீளல் ஆயினும்
இட வல சாய்வுகளில் இடுங்கிடாத சமன்

இட்டு நிரப்பி அளந்தாலும்
துலாபாரம் துலங்காத உன்மத்த உய்வு
அளவிலி பெருக்கு

தூவான சாரலோடு மிசைந்த குறும்பு கூதல்
மாடத்தில் ஒளிபெருக்கி
சுடர்ந்திடும் தீபத்தோடு கொண்டாடும்
நட்பாடல்

உறைக்காமல் உறைந்து
உயிர்மிசை மேவுதல்

குமிழிகள் உடைந்த பின்
சலனத்தில் அடவுபிடிக்கும்
நீர்நிலை துஞ்சிய மீன்களின்
துள்ளோட்டம்

விரல் வழி ஊடாடி
அகலெழி தேடும் வேட்கை இல்லா
வியங்கோள் விண்மீன்களின் விந்தை சிமிட்டல்களாய்

-புவனா கணேஷன்

 

விதிர்ந்துழந்த

 
 
உள்ளே புதையல்
வெளியே தேவைகள்
இடையே
விசைகள் இறுகி
திறவுகோலுக்கு திமிறி
திறக்க மறுக்கும் தாழ்

ரசவாதம் மக்கிப்போன படிமக்கலம்
பிரதிபலிக்காத பிம்பங்களின் வரைவு

வேரும் மரமும்
ஒத்திசையாத கோணங்களின் செருக்கில்
ஒன்றிலிருந்து ஒன்று பெயர்ந்து விலக
சாய்ந்த கிளைகள்
சருகுகளின் உதிர்வோடு

விளங்கா பொருள் பூண்ட வினாவுக்கும்
விளக்கம் நுகரா விடைக்குமான
குறியெழுத்து

வரவேட்டில் வரிது கிட்டாது பதிவித்த
அனாமத்து கணக்கு அடைப்புக்குறிக்குள்
இடுங்கிப்போன சால்

இடக்கரையில் தாய் குறுக்குக்கோடாய்
வடக்கரையில் தந்தை நெடுங்கோடாய்
இடைவழி நீரில்
நீந்தவும் பழகா
மூழ்கவும் விரும்பா முரண் பயணத்தின்
வினைப்போக்கில்

விதிர்ந்துழந்த பிள்ளைகள் நாங்கள்
தலைக்கை தருதல் வேண்டி

-புவனா கணேஷன்

உடல், மன -அழகு, ஆரோக்கியம்


 
 

1.அதிகாலையில் எழுந்ததும் இரண்டு இலைகள் துளசி, ஒரு பல் பூண்டு, கொஞ்சம் பனங்கற்கண்டு, மூன்று வறண்ட திராட்சை, ஒரு டம்ளர் மிதமான சூட்டில் வெந்நீர் உள்ளுக்கு எடுத்துக்கொள்ளலாம்.

2. கிரீன் டீ .. நான் அருந்தும் விதம்... - இலையை கொதிக்க வைக்கும் போது, பெரிய நெல்லிக்காய் பேஸ்ட் ஒரு ஸ்பூன் கலந்து கொதித்து ஆறியதும் தேன் கலந்து அருந்துவது பொலிவு பிளஸ் நலம்... இதில் வடிகட்டிய சக்கையை முகத்துக்கு ஸ்க்ரப் போட்டுக்கொள்ளலாம் வாரத்தில் இருமுறை.

3.வெயில் காலத்தில் வெந்தய பொடி கொஞ்சம் உள்ளுக்கு எடுத்து வெந்நீர் குடிக்கலாம். கூடவே தலைக்கு வெந்தய பொடி பேக் போட்டு வாரம் ஒரு முறை அலசுவதும் குளிர்ச்சியை கொடுக்கும்.

4.. சீரான மூச்சு பயிற்சி பத்து நிமிடம்

5.கவனத்தை நெற்றி பொட்டில் அல்லது முதுகு தண்டுவடத்தில் நிலைநிறுத்தி 10 நிமிடங்கள் மெடிட்டேசன் செய்வது நலம்.
6.காலாற காற்று வெளியில் 10 நிமிடம் நடந்து விட்டு வருவதும் உசிதம்.

7.அவசியம் அற்ற கண்டதை யோசித்து எந்நேரமும் குழம்பிகொண்டு இருக்காமல் இருத்தல்.

8.மனதிற்கு வருத்தம் தர கூடிய எதுவாக இருந்தாலும் சரி ... ஒரு காகிதத்தில் நிறைக்க எழுதி, ஒரு முறை வாசித்து விட்டு கிழித்து கூடையில் போட்டு, அடுத்த வேலையை பார்க்க போவது ஒரு நல்ல பயிற்சி.

9..கடல் அலைகள் மற்றும் பச்சை தாவரங்களை பார்ப்பது மன அழுத்தம் குறைக்க உதவும்.ஒரு வகையில் கண் வழி யோக பயிற்சி இது.

10.ஒரே மாதிரியான வாழ்க்கை முறையில் இருந்து கொஞ்சம் மாறி வேறு இடத்தில கொஞ்சம் இளைபாறிவிட்டு வருவது நலம்.

-புவனா கணேஷன்

நீ நீயாக




இருட்டுக்கு பழகிய கண்களுக்கு
உன் ஒளிபாய்ந்த உலகத்தின்
உள்நுலைந்ததில் தடுமாற்றம்

சிறகுகள் குறுக்கா தட்டான்கள்
தன்னிலைத்தன்மை

இயல்பில் வழுவியது எல்லாம்
பிறழ்வென இமிழல் ஒன்றுமொழிதல்

தங்கமும் தீக்குளிக்கும்
நகைத்து மின்னும் முன்

கானல் நீரோ காட்சி பிழையோ
ரசனையில் உயிர்த்தது

கருவறையில் சூழ்ந்த கருப்பு
கடவுளை மருட்டியதில்லை

எதுவென்று அழைக்கப்பட்ட போதினும்
நீ நீயாக...


-புவனா கணேஷன்

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...