Thursday, October 24, 2013

கதவுக்கு அப்பால்





மனதின் உள்ளே மூச்சுமுட்டுகிற புழுக்கம் தான் வெளியே பரவியதோ!
 தலையில் தணலைக்  கொட்டியது போல வெந்து வழிந்தது.

"ச்சு, இந்த நேரத்தில் கரண்ட் வேறே, எப்போதான் வருமோ" சுவாசிப்பதே கடினமாய் புழுங்கியது அறை. எல்லா வீடுகளையும் போல ஜன்னல் இருக்கவே செய்தது.. திறந்து வைத்தால் தென்னைமரக் காற்று ஜிவ்வுன்னு வரவே செய்யும் 

"எதிர் வீட்டில் அவன் சிவப்புதோல்ன்னு பார்கிறியோ" பள்ளி இறுதி முடித்த சின்ன பையன் அவன் ..அவனைக்கூட விடாமல் சேர்த்து வைத்து பேசுவதில் அப்படி என்ன பேரின்பமஅசோகனுக்கு.சொல்லில் அறைந்த ஜன்னல் அதன் பிறகு திறப்பதே இல்லை.. இது மட்டும் சொந்த வீடாக இருந்திருந்தால் ஆணி வைத்து அறைந்து ஜன்னலை திறக்க முடியாமல் செய்தாலும் செய்திருப்பான்.


கணவனைப் பற்றியே நினைப்பே கசந்தது... கழண்டு விடுவது போல வலித்த இடுப்பும். " என்ன மாதிரி மனிதன், ஆறு மாத கருவை சுமப்பவள் என்ற அடிப்படை கழிவிரக்கம் கூட இல்லாமல் மிருகத்தனமாய் ... மிருகம் கூட தன் இணையிடம் இப்படி நடக்குமா தெரியாது "

புனிதா கருத்தரித்தது இது மூன்றாவது தடவை.. முதல் இரண்டு தடவைகள் போல் இல்லாமல் ஆறு மாதங்களை கடந்தது பெரிய விஷயம்.

"ஏன் தாயி, இப்படி பலகீனமா இருக்கியே, ஊரிலே இருந்து யார்னா  இட்டாந்து வச்சுக்கலாமில்ல, கண்ணெல்லாம் உள்ள போயி பார்க்கவே பாவமா கிடக்க" .. இரண்டு நிமிஷம் நின்று பேச வாய்க்கும் ஒரே ஜீவன் கீரைக்காரம்மா வாஞ்சையோடு சொல்வது.

மெல்லிதாய் சிரித்து.. இல்ல ஆச்சி, அம்மாவுக்கு முடியாது என்பதோடு பேச்சை நிறுத்திக் கொள்வாள். மனதுக்குள் ஆசையாய் இருக்கும், ஊருக்கு போகணும்  அம்மா கைச் சமையலை, காரச்சட்டினியை சுவைக்கணும், தங்கைகளோடு வாய் ஓயாமல் கதைப் பேசணும் இப்படி எல்லாம், எங்கே கொடுப்பினைவந்திருந்த தந்தை கேட்கவே செய்தார்..

"புள்ளைய கொஞ்ச நாள் கூட்டி போகலாம்ன்னு மாப்ள, மசக்கைக் கழிய கூட்டிட்டு வந்து விடறேன்"

வழக்கம் போல் கண்களை இடுக்கி பதில் சொன்னான் அசோகன் 

"கூட்டிட்டு போகலாம், திருப்பி அனுப்பிற எண்ணம் வேண்டாம்" பதில் பேசாமல் திரும்பி போனார் அப்பா..வேறு என்ன செய்வார்.. காலம் காலமாய் முதுகில் சுமக்கும் கட்டுச்சொல் இருக்கவே இருக்கு, வாழாவெட்டி, அடுத்து  பிறந்த தங்கைகள் வாழ்வு. 

பெருமூச்செறிந்தாள் ..இறுக்கிப் பிடித்த ஆடையை கொஞ்சம் தளர்த்தினாள் எரிச்சல் குறையலாம்.. அசோகன் எந்த நேரம் வந்து நிற்கும் அபாயம் உள்ளது..திடுமென வர நேர்ந்தால் தளர்ந்த ஆடைக்கு ஒரு பாட்டு வாங்க வேண்டி இருக்கும். கைக்கு கிடைக்கும் லஞ்ச பணத்தை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு சுத்துவது இல்லை.. அடிக்கடி வீட்டு பக்கம் வந்து பத்திரப்படுத்திவிட்டு போவான்.

 நிறைய நீர் அடித்து முகத்தை கழுவியதும் வியர்வை கொஞ்சம் மட்டுபட்டதாய் இருந்தது.துடைக்காமல் ஈரத்தோடு இருப்பதும் நன்றாகவேதளர்ந்து தரையில் சுவரோடு சாய்ந்து  கால்களை நீட்டி அமர்ந்தாள்.

 மூடியிருக்கும் கதவைத் தாண்டி சாலையின் வாகன இரைச்சல். இந்த குடியிருப்பில் ஹவுஸ் ஓனர் தவிர குடித்தனக்காரர்கள் மட்டும் எட்டு வீடுகள்.ஒருவரோடு ஒருவர் கலந்து  அத்தனை பேரும் தாயா பிள்ளையா பழகுவார்கள்.ஹவுஸ் ஓனர் வேறு, குடிந்தனக்காரர்கள் வேறு என்பதே இல்லை .. அசோகன் குணமறிந்து அவளிடம் மட்டும் சற்று ஒதுக்கம் கட்டுவார்கள்.. வாசல் தெளிக்க இறங்கினால் ஒருவரோடு ஒருவர் கேலியும் கும்மியுமாய் சிரித்து வம்புகிழுத்து. அவர்களோடு கலவ முடியாவிட்டாலும் காதில் கேட்டு ரசிக்க கிட்டும்..

இவளைக் கண்டால் சிநேகப்புன்னகை உதிர்பதோடு சரி.. அத்தனை பேருக்கும் அத்துப்படி அசோகன் வீட்டில் இருந்து நான்கு மூலையிலும் ஸ்பீக்கர் அதிர அதிர பாட்டு சத்தம் கேட்கிறது எனில்  புனிதாவை அவன் நைய்ய புடைகிறான் என்றே அர்த்தம்.. வலியில் துடித்து அவள் அலறுவது வெளியில் கேட்காமல் இருக்கவே சத்தமாய் ஸ்பீக்கர் அதிர்வது.

காலையில் வீங்கிய முகத்தோடு வாசலில் கோலமிடும் போது பாவமாய் பார்வை பரிமாறல்கள் இருக்கும் .மற்றபடி துணிந்து யாரும் கிட்டே போய் அவனை கேட்பதில்லை .. "உனக்கென்ன என் பொண்டாட்டி மேல் அப்படி ஒரு அக்கறை" கூசாமல் கேட்கக்கூடியவன் தவிர போலீஸ்காரன் என்பதால் அதிகம் பிரச்சனை என்று வைத்து கொள்வதில்லை..

நெருங்கிப் பேசுவது என்றால் ஹௌஸ் ஓனர் அம்மாதான்.. அதுவும் அன்றைக்கு அப்புறம் குறைந்து போனது. " தீ” மிதி பார்க்க கோவிலுக்கு போறோம் எல்லோரும், நீயும் வந்தா நல்லாத்தான் இருக்கும் ம்ம் சரி இந்த சாவிய   அப்பா வந்தா கொடுத்திடு , சுகர் மாத்திரைய நேரத்துக்கு போடச் சொல்லு "  தந்து விட்டு போயிருந்தாள் . குடித்தனக்காரர்கள் அத்தனை பேரும் அவரை அப்பா என்றே அழைப்பது.

சாவி வாங்க அவர் வருவதற்குள் அசோகன் வந்து விட்டு இருந்தான்.. மாட்டியிருந்த சாவியை எடுத்து கொடுத்தவன் அவன் தான் . எதார்த்தமாக கை நீட்டி வாங்கியவரிடம்  " இந்தச் சாவிய என் பொண்டாட்டி கொடுத்திருந்தாலும் இப்படித் தான் கை உரச வாங்கி இருப்பீங்களோ" அதை கேட்டு பெரியவர் அதிர்ந்தே போனார் .சரி போதையில் பேசறான் என்பதாக நகர்ந்து விட்டார்.

சுத்தி இத்தனை பேர் இருந்தும் வாய் வார்த்தைக்கு கூட யாரும் இல்லாமல் போனது..  என்ன கேடுக்கு இந்த வாழ்க்கை ..

அவன் வீடு வரும் போதும் அவள் எப்படி இருந்தாலும் குற்றம் " அடச்சே, வீட்டுக்கு வந்தா உன் எண்ணை வழியிற மூஞ்சியத்தான் பார்க்க வேண்டி இருக்கு. ஏண்டி இப்படி அடிபட்ட பஞ்ச பரதேசி மாதிரி நிக்கிற " என்பான் அதற்கு மாறாக இருந்தாலும் "எவனுக்கு இந்த அலங்காரம்" என்றே விஷம் கக்கும் .. பதிலுக்கு ஒரு வார்த்தை வாயைத் திறந்தால் வீட்டில் ஸ்பீக்கர் அதிரும்.

 இரண்டு வருட தாம்பத்தியத்தில் பல தடவைகள் தற்கொலை எண்ணம் தோன்றி வழக்கம் போல கைவிடுபவள் . "தற்கொலை செய்து கொள்வதற்கு கூட தைரியம் வேணும்.. நம்மைப் போல பிள்ளைப் பூச்சிக்கு  மரணம் கூட கிட்ட வாய்க்காது "..

மின்விசிறி சுழலத் தொடங்கியது. விட்டத்தில் சுழற்சியை வெறித்தபடியே தரையில் சாய்ந்தவள் எப்படியோ தூங்கி போயிருக்கிறாள். தலைக்கு மேல் யார் யாரோ திமுதிமுவென ஓடுவது போல ஒலித்தது.. கூடவே குவியலாய் சத்தம் ." தூக்குங்க, தூக்குங்க.. தண்ணிய கொடுங்க"

திறக்க முடியாமல் கண்களை திறந்து சுழற்றினாள்.. எங்கே என்ன நடக்குது, யாருக்கு என்ன. அவசரமாய் எழுந்து கொள்ள நினைத்த போதும் முடியாமல் அதுவரை வெறுந்தரையில் கிடந்தது கால் மரத்து முரண்டியது

---                                  ---                  ---                      ------

அதற்கு மேல் வண்டியை செலுத்த முடியாதோ என்றிருந்தது.  காலையில் இருந்து உணவெடுக்காத வெறும் வயிறு வேறு சுருட்டி இழுத்தது .விரதம் பழக்கம் தான்.. இன்று ஏனோ உடலை அசத்தியது...அல்லது இந்த பாக்கை இப்போது போட்டு இருக்கக் கூடாதோ? எப்படியோ இந்த பழக்கம் அவனிடம் தொற்றிக்கொண்டு விட்டது


தரிசனம் முடிந்ததும் கோவிலோடு திரும்பி இருக்கலாம்... நண்பனை பார்க்கவென கிளம்பியதே தப்போஓரங்கட்டி மரநிழலில் நிறுத்தினான்.
 நெஞ்சும்தொண்டையும் சேர்ந்து காந்தியது . என்ன மாதிரி உபாதை என
இனம் காண முடியாதபடி என்னவோ செய்தது.
நிற்கும் இடத்தில் இருந்து நேர் எதிரே தெரிந்த கட்டிடத்தில் ஒரு பெரியவர்
தென்பட்டார்.. கண்ணை சுத்தி வெள்ளை நிறத்தில் பூச்சி பறப்பது போன்று ஒரு பிரமை .. தட்டுத் தடுமாறி கேட்டைத் திறந்து பெரியவர் இருக்கும் இடம் வரை வந்து விட்டவனைக் கண்டு கிழவர் திகைத்தே போனார்..

யாரோகண்மண் தெரியாமல் குடித்தவன்உள்ளே வரை வந்து விட்டான் ..

அந்த நேரத்தில் குடியிருப்பில் ஒருவரும் வெளியே தென்படவில்லைஅவர் வீடுமே கூட மூடி இருந்ததுஉள்ளே மருமகள் உறங்குவாளா இருக்கும்..
கைக் கால் விழுந்த பிறகு இவருக்கு இந்த இடமும்சாய்வு நாற்காலியும் தான் சொந்தம்.. வருகிறவனை எதிர்கொள்ள தன் பிரம்பை இடது கையில் எடுத்து
 கெட்டியாக பிடித்தவண்ணம் புருவத்தைச் சுருக்கி கூர்ந்தார்.


வந்தவன்வார்த்தை வராதவனைப் போல சைகையில் தண்ணீர் என்பதைப்
 போல் சைகை காட்டினான்.. அவருக்கு பக்கத்தில் இருந்த குவளையில்
 தண்ணீர் தீர்ந்து விட்டு இருந்தது,, இருந்திருந்தாலுமே கொடுத்திருப்பாரா
 என்பது சந்தேகம்.


அவனை அங்கிருந்து விரட்டி விடக்குறியாய் இருந்தார் கிழவனார்..அவனோ அப்படியே சுருண்டு அமர்ந்தான் . இது ஏதடா வம்புஅவர் பயம் அவருக்குதானே இந்த வீட்டு வாசலுக்கு ஒரு உபரிமருமகள் பூதாங்கி பார்த்தால் சாமியாடிவிடுவாள்.

கையில் இருந்த பிரம்பால் நெம்பி விரட்டினார்.."போப்பா போவேறே
 எங்கவாவதும்கிளம்பு " உடைந்த குரலை எழுப்பி அவரால் இவ்வளவே
மிரட்ட முடிந்தது . கம்பால் நெட்டித் தள்ளியதில் எழுந்து விட்டான் தான்,
நடக்க முடியுமென தோணவில்லைஇரண்டே எட்டு எடுத்து வைத்தவன்
அடுத்த வீட்டு வாசலில் குப்புற விழுந்தான்.

 அவன் விழுந்ததும்,கிழவனார் பெரிதும் பயந்தே போனார்சாய்வு நாற்காலியின் இரும்புப் பிடியில் பிரம்பால் தட்டியப் படியே முடிந்த அளவு சத்தம்
எழுப்பினார் .. மாடியில் புகைத்துக் கொண்டு இருந்த ஹவுஸ் ஓனர் தான்
முதலில் ஓடிவந்தவர்.. அவர் குரலுக்கு மற்றவர்களும்

டேய் மாதவா தண்ணீர் கொண்டு வாபேரனுக்கு குரல் கொடுத்த படியே விழுந்து கிடந்தவனை புரட்டிப் போட்டார்.. அரைமயக்கத்தில் இருந்தவன் தண்ணீர் தொண்டையில் கொஞ்சம் இறங்கியதும் மெல்ல முனகினான்.." நான் தான்
மாதவன்.. சார் மாதவன் நான் " என்பதற்கு மேல் வாய் கோணி இழுத்தது ..

சொல்லுப்பாஎன்னாச்சு.. உன்பேரும் மாதவனா விசாரித்தபடியே நெஞ்சில் முதுகில் தடவி கொடுத்தார் ஹவுஸ் ஓனர்..வினாடிக்குள் என்ன நடக்கிறது என்றே எவரும் யூகிக்கும் முன்  அவன் உடம்பு தூக்கிப் போட்டது .. குருதியோடு சேர்ந்து வாயிலெடுத்தான்.. கண்கள் சொருகி இரண்டு நிமிடத்துக்குள்
அது நடந்தது.

புனிதா கதவை திறந்த போது அவள் கண்டக் காட்சி இதுவே.. மிக மிக அருகில் துடிக்க துடிக்க ஒரு மரணத்தை கண்டதும் அவள் பூஞ்சை மனம்
நிலைகொள்ளாமல் அதிர்ந்தது.. அப்படியே சரிந்து விழுந்தாள்.



அடுத்த இரண்டு மணி நேரத்தில் அந்த இடத்தில் ஒரு திடீர் மரணம் நிகழ்ந்ததன் சுவடே இல்லை. போலீஸ் ஸ்டேஷனுக்குப் பின்னே அமைந்த குடியிருப்புத் தவிர ஹவுஸ் ஓனருக்கு ஸ்டேஷனில் அத...்தனைப் பேரையும் தெரியும் என்பதால் சிக்கல் ஏதுமின்றி இறந்தவனின் அடையாள அட்டையைக் கொண்டு அவன் வீட்டுக்குத் தகவல் சொல்லி எல்லாம் முடிந்தது. அவ்விடம் சுத்தமாக நீரடித்து க் கழுவி விடபட்டிருந்தது.

முன் மாலையில் வீடு திரும்பினான் அசோகன்.. அதீத டிராஃபிக் ரோட்டில் பணி.

நாள் முழுக்க வெயிலில் நின்றதன் களைப்பைத் தவிர சாதாரணமான முகபாவத்துடன் அவன் இருப்பதை வரும்போதே பார்த்து விட்டார் ஹவுஸ் ஓனர் ..

அவன் வீட்டு வாசலில் நடந்த அசம்பாவிதம் முறையாகத் தெரிவித்து விடவேண்டும் என்பது அவர் நினைப்பு.
கைக் கால் முகம் கழுவி வருவதற்குள் உணவைச் சுடவைக்க அடுக்களையில் இருந்தாள் புனிதா.. அப்படி ஒரு உடல் வலி, தலைத் தூக்க முடியாத அளவு கனத்தது. காய்ச்சல் தானோ என்றிருந்தது. அடுக்களைச் சுவரில் சாய்ந்த வண்ணமே நின்றவளுக்கு கணவனிடம் ஹவுஸ் ஓனர் நடந்ததை விவரிப்பது கேட்டது .. திக்கென்றது ..
வந்ததும் ஏன் சொல்லலைன்னு எகிறப்போகிறான்.. நிறைய தண்ணீர் குடித்தப்பின் சற்று நிதானித்து உணவோடு முன்னறைக்கு வந்தவள் கண்டது கையில் சுருட்டிப் பிடித்த பெல்டோடு கண்கள் சிவக்க அவன்..

"என்னடி நாடகம் இதெல்லாம், யாரவன் உன்னைப் பார்க்க வந்தவன்" தலைமுடி கொத்தாகப் பிடிக்கப்பட்டது..
"அய்யோம்மா சத்தியமாய் எனக்கு எதுவும்" முடிக்கு முன் முதல் அறை விழுந்தது.. ருத்ரம் அவன் கண்களில் " இத்தனை வீட்டை விட்டு இங்க வந்தானாம், இவளுக்கு ஒண்ணுமே தெரியாதாம், யாரிடம் கதை? .. இதுதானா நீ பிள்ளைப் பெறப் போகும் சேதி .. வார்த்தைகளின் விஷம் செவிப்புலனை அடைத்தது. பிறகு சௌந்தரராஜன் தன் அழுத்தமான குரலில் அந்த அறையின் நான்கு மூலை ஸ்பீக்கரிலும் பாடினார்.

வெளியே சிலர் கரித்துக் கொட்டினர் .. " பாவி இவனெல்லாம் மனுஷனா, கையில் கெட்ட வியாதி வர. இப்படிப்பட்ட ஆட்களுக்கு எல்லாம் ஒன்னும் நடக்கமாட்டேங்குதே"

கொஞ்ச நேரத்தில் செருப்பை மாட்டிக்கொண்டு அவன் கிளம்பிவிட்டான்.. அடுத்த வினாடி சாத்திக்கொள்ளும் கதவு திறந்தே கிடந்தது. இன்னமும் சத்தமாய் பாடல் நிறுத்தப்படாமலும்.

திறந்திருந்த கதவு வழியே எட்டிப் பார்த்த ஆச்சி அலறினார்..

காலுக்கடியில் குருதிப்பெருக.. உயிர் அறுக்கும் வலியோடு திணறிக்கொண்டு இருந்தாள் புனிதா..





 ** இது புனைவில்லை என்பதால் வேறென்னச் சொல்ல
கண்களில் நேர் குத்துகிற காட்சிக் கோர்வைகளின் நிழற்படம் கதையாகிவிடுகிறது .. ஜென்மத்துக்குக் கல்யாணம்னு ஒண்ணு கூடவே கூடாது, கன்யாஸ்திரியாக போய்விட இருபது வயது வரை தீவிரமாய் நினைக்க வைத்தது புனிதாவினால் ஏற்பட்ட தாக்கம்.
இருபதுக்குப் பின் என்னவென்று கேட்டால் !

காலமும், சூழலும் மாற்றக்கூடும் நமக்கான காட்சிகளை !!!!

--புவனம்
 
 
 


Tuesday, October 22, 2013

நிழல் முகம்



அனேக கண்கள் சிகப்பேறியும்
மதத்தலின்  கண்கள் பசலை பேசியும்
மற்றதன்  கண்களில்
நீலம் பாய்ந்துமாய்
நுறைத்திருந்தது கறுத்த இரவு
பார்வையற்றவளின்
நிரண்டிய கனவில்
தரையிறங்கிய மொத்த
ஆகாயமும்
முத்தத்தின் நீளத்துக்கு
துயிலத் தெரிந்த
நத்தைக்குள் சுருண்டது

வெட்டிவேரின் வாசத்துக்கு
முகஞ்சிடுக்கும்
எருக்கலஞ்செடியையும்
நனைத்தே ஊர்கிற காற்று
மேலும் சற்று சிலுப்பியது

உதிர்மணலடுக்கின் கீழ்
ஊற்றுத்  துளிகளின்
கர்வத்தோடே
கன்னிமை நெகிழ்த்த தந்தது
அவ்விரவு

-புவனம்

Thursday, October 10, 2013

காட்சிக்கு வெளியே



உறக்கமும் விழிப்புமென
களிம்பேறிய பாத்திரங்கள்
அதங்கம்  பூச மறந்த நாடகங்களில்

 தரையிறங்கிய பின்பும்
 மேல்நோக்கும் நோவில்
 பால் வற்றிய வெற்றிடத்தின்
பசித்த படிமம்

கருணைக் கொலைக்கென
பழக்கிய கத்தி
கதவுகளற்ற பிணவறைக்குள்
மழுங்க நேரலாம்

அந்தரங்கங்களை திறவுவதற்க்கான
சாட்சி ஒப்பமாய்
 நிரம்பவே நெளிகிறது
கைக்குள் ரேகைகள்

 கண்துடைப்புக்கேனும்
ஒற்றை விரலை
மிச்சம் வைத்துத் தீர்ந்து போ

-புவனம்

Thursday, October 3, 2013

நான் என்பதிலிருந்த நீ



இரும்புப் பிடியில்
சிக்குண்டு சிணுங்கிய
முற்றத்து ஊஞ்சல்

அணில் கொறித்த பழத்தை
நாவின் நீர் கலவ
பங்குண்டதன் தோட்டம்

நான் ஏற்ற ஏற்ற
நீ ஊதி அணைத்த விளையாட்டில்
முகம் திரிந்த
மாடத்து விளக்கு

கருவேப்பிலை தாளிப்புடன்
காதல் வாசம் பிடித்த
சமையல் மேடை

மழைக்கு பிந்தைய இரவுகளில்
வானம் போர்த்தி துயின்ற
மொட்டை மாடி

இங்கு தான் எங்கோ
முன்னாட்களின்
உயிர் இருத்திப் போகும்
நீ
தூரத்தில் தேய்ந்த புள்ளியாவதை
வெறித்தவண்ணம்
நான்
புலம் திரும்பவியலா
சுட்ட மண்கூடு
 
-புவனம்

Tuesday, October 1, 2013

திரிபின் சிறகுகள்





உருபடாமல் உள்ளே திரண்டதன் கசகு
சுருளத் திரட்டி எதிர் எறிந்த பந்து
எந்நேரமும் திரும்பக் கூடலாம்

எவரும் நடாத முட்புதரில்
கிளைத்திருக்கிறது ...
முரண்டுதலின் காரணி

நேற்றைக்குப் பின்னான இன்றிலும்
திமிர்ந்தலையும் பசி
உண்ணச் சொல்கிறது
ஒரு சொட்டு துரோகத்தை

கனன்றெரியும் தீச்சுடரின்
கண நேரப் புணர்ச்சிக்குப் பின்னான
விட்டில் பூச்சியின் நிறமே
தோய்கிறது வளர்பிறை இரவுகளில்

தனக்கான காட்சிகளில்
நிரம்பிக்கொள்ளும்
வெற்று வெளியின்
உரிந்த தொலியென
தட்டான்களின் படிமலர்ச்சி

நீந்தத் தேவையில்லை இனி ...

 
-புவனம்

Wednesday, September 18, 2013

நிறமற்றதன் அடர்த்தி



என் வட்டங்களைச் சுருட்டி
சதுரச் சுவர்களில் அறைந்தவனவன்
ஆதாமுக்குரிய ஆப்பிளில்
ஒரு துளி விஷமாய் இருந்திருக்கலாம்

உடைத்தெறிந்த நிலாத் துண்டங்களோடு
உப்பு நீரில் மிதக்கத்  தொடங்கியது
எனக்கான நிறம்

கடைசி அலை
கால்களைக் கடத்துவதாய்
கண்களைக் கவ்வும் உறக்கத்தில்
அமிழ்ந்து போகும் முன்
கிளிமீனின் ஒப்பனை நிறத்தில்
ஒளிந்தவளானேன்

சதையறுந்து
செதில்கள் சிதற
தொண்டையில் முள் சிக்கியவனின்
கண்களில் நீந்துகிறது அம்மீன் 

-புவனம்

 

Wednesday, September 11, 2013

அவள் என்பதன் நிச்சலனம்



அறைந்து சாற்றியப்பின்
கதவின் முதுகில்
தழும்பு ஏற
உள்ளொன்று வைத்ததன்
புறம்பேசிகள்

உறவெச்சங்கள் உமிழ்ந்த
புள்ளிகளில்
கோடுகளைக் கீய்ச்சியே
வாசலை நிரப்ப

அவசரகதியில்
அருந்தியதுப்  போக
ஆடைத் தேம்பிய
தேநீரில்
ருசித்தே மிதக்கிறது
சிற்றெறும்பு

செலவில் சேமித்த காசிலும்
விடிவிளக்கு வெளிச்சத்தில்
வந்து போனவனின்
வாசனை

பெயரணிந்த பிம்பங்களை
அவள் சுமப்பாள் என்பதன்
காலக்கோல்
காளான் முளைக்க
உதிர்வதாய்  மேகங்கள்
 
- புவனம் 

உறக்கத்தை தைக்கும் கனவின் கூர்

 
 
நீரில்
நட்டுவைத்த வார்த்தைகள்
ஒவ்வொன்றும் பூப்பெய்த

நீளாத கைக்குள்ளும்
பிணைந்தே கிடக்கும்...
வேர்க்கொடிகளின்
நீட்சியிலோ

உப்புத்தாள் தேய்த்த
சுவரிலிருந்து
உரு உதிர்ந்த
ஓவியப்பெண்ணின்
உயிர் மிஞ்சிய நிறங்களின்
மீட்சியிலோ

தியானித்தலின் அலைவரிசையில்
இடுகுறிப் பெயரணிந்த
சப்தங்கள் ஒடுங்கும்
அத்தருணம்
பசித்த கண்களில்
மகிழ் துளி

வளர்பிறை
வட்டங்கள்
புள்ளிகளாய்
வளைந்து மூடும் முன்


--புவனம்

Tuesday, September 3, 2013

அன்னத்தூவியென


உச்சி முகரும் கூதலின்
காதல் எவ்வி
திருகிய வெண் சங்கு
மேனித் திண்மத்தில்
கையணைப்பு

குவிந்த சிமிழில் நிலம் பார்க்கும்
அந்தியின் விகசிதம்
மெல்லப் பரவியது
ஸ்பரிசத்தில்

மின்மினிகள் ஒளிர்கூட்டும்
தூக்கணாங்குருவிக்  கூட்டின்
இலைநரம்புப் பின்னல்
வயணத்துடன் விரவியது
விரல்கள்

விதும்பும் நரம்புத்  தீண்டலின்
திகைப்பில் மேலும் அதிர்வு
கூடியதொரு
கூடற் பொழுதில்
அலர்ந்து அவிழ்ந்த 
அன்னத்தூவியென 
நிரம்பியது
இசை

-புவனம்
 

Monday, September 2, 2013

காட்சி மாற்றம்



இருளோடு இறுகப் பிணைந்த
கரும்புள்ளிகளைக் குறித்தே
புனைந்ததில்
மேலும் குழையாதிருக்கட்டும்
அரிச்சுவடேறிய
சதுப்பு நிலச்சொற்கள் 

மிகைத்ததன் ஒளி
கண்களில் தூர்ந்ததன்
குறும்பொறையானதும்
அணையாததாகவே காண்கிறது
எவரும்  ஏற்றத்துணியாத
தீபத் திரிமுனைகள்

தீயிற் பாகமாக்குதலில்
பதம் பிசகிய போதும்    
அதனோடு இதுவுமாக
கடந்து போதலின் காட்சி மாற்றம்   

-புவனம் 

Friday, July 12, 2013

ஒளி பிரிகையின் ஒலி

 
மெல்லியல்
நரம்புப் பின்னலில்
குருதியும் சதையுமாய்
இசையூட்டம்

தொடர்பு எல்லைக்கு வெளியேயும்
அலைப்பேசும்
சிகைக்கோதல்
ஞாபகக் கோர்ப்பின்

கடவுச்சொல்லடுக்கில்
காற்றுப்புகாத
கையடக்க
கனவில் மடித்து
காத்திருப்பு

உப்பு நீர் முகந்த மேகங்கள்
நம் பாதையை உரசும் வரை

புழுதி துறந்த 
புதுமணலில்
வானவில்
வனையட்டுமென

ஒளி பிரிகையின் ஒலி

-புவனம்
 

Wednesday, July 10, 2013

இணைமுரண்



இலையுதிர் காலத்து
இணக்கமற்ற விதிர்த்த  மொழியில்
திருப்பப் பாதை எங்கும்
இருள் கவ்விய
வெறுமை சூழ
 
அவளும் தனிமையும்

எவ்விடமோ
இறுக்கிப் பிணைந்த
முரண் முடிச்சுகளின் கயிறு
வேரூடி
துருத்திய உருவோடு
துரத்துவதாய்

கால்கள் பின்னிப் புதைய
அசாதாரண தருணத்தில்
அமிழ்ந்து போனபின்
நினைவு தப்புதலே
விதையென

-புவனம்
 

Sunday, July 7, 2013

ஜோக்வா (விழிப்பு ).. மராத்தி மொழி திரைப்படம்


முன்பு  நம் பகுதியிலும்  வழக்கில்  இருந்த  தேவதாசி முறையே  கிட்டத்தட்ட .. ஆனால் ஆண்களையும் சேலை கட்டி இது மாதிரி இறைவிக்கு அர்ப்பணிப்பு செய்ததாக கேள்விப் பட்ட வரை  இல்லை

கர்நாடகா, ஆந்திர பிரதேசம் மற்றும் மகாராஷ்டிர கிராமப் புறங்களில் அதீத நம்பிக்கையோடு பின்பற்றப்படும்  எல்லம்மா என்ற பெண் தெய்வத்துக்கு நேர்ந்து விடப்படும் பெண்கள்  (ஜோடின்) மற்றும் ஆண்கள்  (ஜோக்தா)   மஞ்சள் தரித்து எல்லம்மாவுக்கு என நேர்ந்து விட்ட ப்பிறகு அந்த ஆணோ, பெண்ணோ  பிச்சை எடுத்து  வாழ்வதை, அவ்வூரில் இருக்கும் ஆண்களுக்கு பொதுச் சொத்தாக மதிக்கப்படுவதை  மிகுந்த வலியோடுக் கூடிய  காட்சிகளில் சொல்லப்பட்ட படமே ஜோக்வா (விழிப்பு ).. மராத்தி மொழி திரைப்படம்

றுக்கிப் பிடித்து அட்டையாய்  உறிஞ்சும் சமூக மூடப் பழக்கமும் அதில் கருகிச் சாம்பலாகும் தனி மனித உணர்வுகளையும் நகரும் காட்சிகளில் நேர்த்தியாகப்  படம் பிடித்துக்  காட்டப்படுகிறது.

சுலி என்ற இளம்பெண் பட்டாம்பூச்சியாய் கிராமத்தில் சுற்றித்  திரிந்து தனக்கு உரிய அழகான எதிர்காலத்தின் கனவில் நனைபவள் .. தலைமுடியில் சற்றே சிக்குப்பிடித்ததே  அறிகுறி என எல்லம்மாவுக்கு நேர்ந்துவிடப்  படுகிறாள் .. மிகுந்த அதிர்ச்சியோடு .. தனக்கு நேர்வதை எதிர்க்கொள்ள முடியாமல் .. சுற்றி இருப்பவர்களை எதிர்க்கவும்  இயலாமல்..

தாயப்பா என்கிற ஆண் மகனுக்கும் இதுவே நேர்கிறது... ஆடைகள் பறிக்கப்பட்டு சேலையில் வலம்வர ச்செய்கிற அவன் சமூகத்தை, வீட்டை, உறவினர்களை ச்  சினத்தோடு  எதிர்க்கிறான் அவன் ..

இவ்விருவருக்கும் இடையே மலரும் காதலும் .. சுற்றிப் பிணைந்த கட்டுடுடைத்து  தங்கள் சுயம் காணும் ஒரு அழகான சித்திரமாகவும்  ஜோக்வா சிறந்த வெளிப்பாடு.

ஆண் என்பதையும் பெண் என்பதையும் கடந்த மனிதப்பிறவிகள் நாம் .. உலகின் நிர்வாணக் கண்களுக்கு ஆடை அணிந்த மனிதன் நீ மட்டுமே என்கிற வசனங்கள் உயிர்ப்பு
தவிர பின்னணி இசையும் .. பாடல்களும் செவிக்கு இசைவு 
மீன்கொத்தியின் அலகில் தொக்கி நின்றப்போதும் தன்னைப்பாதுகாப்பாய் மீன் உணர்ந்தால் அதுவே காதலுற்றத் தருணம்என்பதாக தோன்றியது 
புவனம்

Wednesday, July 3, 2013

அந்நாளில்



கூடுடை சாமரம் தொகைந்து
திரிந்தலைந்த அந்நாளில்
அப்பறவைக்கு

அகத் திறவும் கோள்
பச்சை மருதாணி இட்டதும்
சிவப்பாய் முகிழ்ந்தது

விடியலுக்குப் பின்னும்
நிலவில்
கால் மடக்கி
குளிர்ந்துறங்கும்
கனவுகளுக்கு
தின்னக்கொடுத்தது
தன் சிறகுகளை

கூண்டடைப்பில்
சிரம் முட்டியபோதினும்

-புவனம்

 

Monday, July 1, 2013

எங்கே தொடங்கினாலும்



களிமண் குழைத்திழைத்த
கையளவு உலகம்
மிட்டாய் களிப்பு
மிதக்கும் காதல்
மோகக் குறிப்பெய்தும்
 கூழாங்கல் இணை
 உரசலிசை ஸ்பரிசம்
அடைநிலத்தில் காந்தபுயல்
அதிர்வு இடுங்கால்
மெல்லோசை
அவளெனில்

காலுக்குக்  கீழே
இடறி எக்காளமிடும்
தேய் காலமும்
தவறவிட்ட இரயிலுமாய்

தேவைக்கு மேல் சொல்புகாமல்
தினவுக்கு மிஞ்சி தீண்டல் மிகாமல்
மறுத்தளித்த தேடல் நிமித்தம்
உப்பு மறந்த பண்டத்தோடு
ஊறுகாய் பதத்தில்
தொட்டிடுங்கை
 நிரல் நிறைப்பவன்
அவனெனில்

அங்கே பிரிகிறது பாதை....

-புவனம்

 

Friday, June 28, 2013

-► அனாமிகாவின் தீவு ◄-



இருட்டுப்  போர்வைக்குள்
எரிதூபத்தின் இளவரசி நான்

உப்புகண்டம் ஆன பின்பும்
உக்ரத்தில் நீந்தும்
மீன்களில் ஒருத்தியாய்

கருக்கட்டலுக்கு நேர்ந்து விட்ட
விந்துக்கள்  வாங்கி

பிறப்போ இறப்போ 
பெயரிலி எம் முதுகுக்குப்  பின்னால்
வழியும் உலகின்
புறம் மறைக்கும் புலம்பி

ஈரம் பொதிய கனவுகள் மென்று
 தூக்கத்தில் உயிர்க்கும் பதுமைகளின்
உறைந்த புன்னகையும் , உதிரமும் வற்றிய
உரநிலம் வாங்கியவனின் கிடப்பில்
பத்தோடு பதினொன்றாம்
தூண்டா மணிவிளக்கு

விழி மின்னும்ஒளியல்
அதரம் சிந்தும் மிளிரல்
அழகுதிர்க்கும்  மேனி இயம்பல்
நுண்ணுனர் அக நெகிழ் தூறல்

நிதானித்து ருசிக்கும்
இரகசிய காதலன்
 கண்ணாடியில்

-►புவனம் 
 
** ஆப்பிரிக்க பெண் வாரிஸ் டேரியின் கதை, அரேபிய பெண் -பிரின்சஸ் சுல்தானாவின் கதைகளை வாசிக்க நேர்ந்ததன் தாக்கம் ..
இந்திய அதிலும் தென்னிந்திய பெண்ணாய் பிறந்தது யப்பா சாமி.. வரம்.
நிமிர்வு கொஞ்சமேயானாலும் முதுகெலும்பு ஜீவி என்ற வகையில் 
 

Wednesday, June 26, 2013

சாரல்

 
 
மகிழ்-ந் -தேன்

நின் மஞ்சரியில் மலர்ந்த காட்டுப் பூக்களுக்கு
கடத்திப் போகும் வாசச் செய்தியில்
முத்தமிட்ட முதல் துளியும்
சந்தமிட்ட கடைசித் துளியுமாய்
நீர் விரவிய தாபம்!
என் யன்னலில் சாரல்...

-புவனம்

Monday, June 24, 2013

-► --- நின்னையே நிழலாய் --- ◄-



 

அவளுக்கு முன்பே அந்த குபெயில் ஒரு ஜோடி அளவிட்ட வரையில் புதுமண தம்பதி போலும்.

பெட்டி படுக்கையை வைத்த மாத்திரத்தில் ஜோடி காணாமல் போய் விட்டது. இன்னும் பத...்து நிமிடத்தில் ரயில் கிளம்ப தயார் நிலை.

அவளுக்கான படுக்கையை மேல்பர்தில் விரித்து வைத்து விட்டு கையோடு கொண்டுவந்த புத்தகத்தில் அமிழந்துவிட நினைத்து, வெண்ணிற விரிப்பை போட்டுகொண்டு இருந்தாள் சுரபி
பயணத்தில் தூக்கம் வராது அவளுக்கு ,முழு இரவும் கொட்ட கொட்ட விழித்து இருப்பது கொஞ்சம் கடுப்படிக்கும்.
கைபேசி சிணுங்கியது, என்னை கொஞ்சம் கவனியேன் என்று.

அவள் தான் கடங்காரி வினோதினி.. மூக்கை சுருக்கி கைபேசி வழியே விநோதினியை கொஞ்சம் முறைத்து பின் தொடர்பை இணைத்து காதுக்கு கொடுத்தாள்.

"கோவிச்சுக்காதே செல்லமே.. அடுத்த முறை உன்னோட கண்டிப்பா வருவேன். இப்போ முடியலை, ப்ளீஸ்..ப்ளீஸ் புரிஞ்சுக்கோ சுரபி மா, என் கண்ணுல்ல " ஏகத்துக்கு கொஞ்சி , திட்டு விழறதுக்கு முந்தி ஊதி அணைத்தாள் வினோ..

" சரி, எப்படியோ பொழச்சுப்போ , இப்போ நான் மட்டும் தனியா போர் அடிக்க பயணப்படுறேன் "

"போர் அடிக்காது.. நான் ஒரு யோசனை சொல்றேன், கண்ணை மூடிகிட்டு உன்னோட கனவு ராஜகுமாரனை நினைச்சுகிட்டு தூங்கு, காலையிலே ஊருக்கு போய்டலாம் எப்படி என் ஐடியா "

"என்னோட ராஜகுமாரனா!! பல்லை உடைப்பேன் என்கிட்ட இப்படி பேசினா "

ஐயோ வேண்டாமடி, பல்லை உடைச்சிடாதே அப்புறம் என் ராஜகுமாரன் என்னை பார்க்கவே மாட்டான் "பொய்யாய் பயந்தாள் வினோ
ச்சு, போனை வை, ட்ரெயின் கிளம்ப போது .அணைத்து, சீட்டில் போட்டு விட்டு மீண்டும் படுக்கை விரிப்பை தொடர தொட்ட போதுதான் கவனித்தாள் .

அவன் அங்கு நின்று கொண்டு இருப்பதை.. சற்றே அதிர்ந்து நின்று விட்டாள் .

அடுத்த பயணி போலும், யாரும் இல்லாத தனிமையில் விநோவிடத்தில் சற்றே சுதி ஏத்தி பேசியதை எல்லாம் கேட்டு இருப்பான் இந்த புதியவன் இல்லை நெடியவன்,
அவளை விட உயரம் அவன் அதற்கேற்ற உடல்வாகு, கொஞ்சம் மாநிறம் என்றாலும் கண், நெத்தி, மூக்கு, வாய் , மீசை எல்லாமே அளவெடுத்த ஆண்மை சொல்லியது. ச்சே என்ன இது ...

மூளை மரத்து ஏதேதோ யோசிக்குது. இவன் எப்படிப்பட்ட மன்மதனாக இருந்தால் எனக்கென்ன.. பார்வையை திருப்பிவிட வேண்டும் .

இப்படி அவள் எண்ணவோட்டம் இருக்கும் போதே அவனும் அதையே சொன்னான்."ஆள் பார்க்க கொஞ்சம் நல்லா இருந்தா போதும் இந்த பெண்கள் எல்லாம் பார்வையில் விழுங்கிவிடுகிறார்கள்..

பார்த்து முடிச்சிட்டா, கொஞ்சம் வழிவிட்டால் என் இருக்கைக்கு போவேன்" சற்றே, புருவத்தை உயர்த்தி, ஏளனம் துலங்க பேசினான் அவன்.

என்ன அநியாயம், இவனை கண்கொட்டாமல் பார்க்க பெண்கள் வரிசை கட்டி நிற்பதாக என்ன ஒரு பீற்றல் . இவனக்கு காட்டாயம் பதில் அடி தரவேண்டும் .. இல்லாவிடின் நான் சுரபி அல்லவே , உள்ளுக்குள்ளே கறுவினாள் அவள்..

"ஹ.. அதிசயத்துத்துக்குமேல் அதிசயமாக கண்ணில் தென்படுவதை நம்பவே முடியவில்லையே !! கண்களை விரித்து ஏகத்துக்கு அதிசயித்தாள் அவள் "
என்ன.. என்பது மாதிரி , புருவத்தை சுருக்கி கண்ணால் இடுக்கி பார்த்தான் அவன்.

காதில் மாட்டியிருந்த தொங்கட்டான்கள் ஆட ஒரு முறை தலையை சிலிர்த்து, பாவனையோடு மொழிந்தால் அவள் " தலையில் கொம்பு முளைத்த எதோ ஒன்று எல்லாம் இந்த குபெயில் கூட பயணிப்பதை நினைத்துக்கூட பார்க்கவில்லை.

ம் இது வரை மனிதர்களுக்கு மட்டும் தான் பேச தெரியும்னு தப்பா நினைத்துவிட்டேன் போல .இவ்வளவு அதிசயமும் நிஜம் தானான்னு உற்று பார்த்தேன். வேறே ஒன்னும் இல்லை.. சொல்லிவிட்டு, வழி விலகி இருக்கையில் அமர்ந்தாள்.

சண்டை கோழி, ச்சே.. சேவல் மாதிரி சிலிர்த்து கொண்டு சண்டைக்கு அவன் வரப்போவதை எதிர் நோக்கியபடி.
அப்படியே, நேர் மாறாக, அவள் சொல்லிமுடித்த சங்கதிக்கும், முக பாவனைக்கும் ..வரிசை பற்கள் பளிச்சிட, கண்ணோரம் துடிக்க நிறுத்தமாட்டாமல் சிரித்தான் அவன்....
மீண்டும் அதிர்ந்தாள் அவள், என்ன இது ! மட்டம் தட்டினால் சிரிக்கிறான். இன்னும் கொஞ்சம் உறைக்கிற மாதிரி வாரவேண்டும் போல உள்ளுக்குளே துடித்தது...தானும் நகைமுகத்தை காண்பித்து.
"ஹய்யோ, ஜந்து சிரிக்கவேறு செய்யுமா! யாரும் சொன்னால் நம்ப கூட மாட்டங்களே
ப்ளீஸ், நான் ஒரு போட்டோ எடுத்து வச்சுக்கட்டுமா ??"
இப்போதும், நகை முகம் மாறவில்லை அவனுக்கு, மாறாக கண்களில் குறும்பு பளிச்சிட்டது... "தாராளமாய்" விளையாட்டாய் எடுத்துக்கொண்டது போல தோளை குலுக்கி,இருக்கையில் ,அமர்ந்தவண்ணம் பார்வையால் அவளையே அளவிடுவது போல தோன்றியது அவளுக்கு.
இது மாதிரி ஆட்கள் கொஞ்சம் ஆபத்தானவர்கள். இவனிடம் பேச்சை வளர்க்ககூடாது என்று முடிவுக்கு வந்தாள், அவள்.

சட்டென எழுந்து தன் படுக்கையில் விழுந்து புத்தகத்தை விரித்தாள். இரயில் கிளம்பியது, புது ஜோடி தனக்கே, தனக்கான உலகத்தில் மூழ்கி இருந்தது.

சுரபி,தன்னை தவிர இன்னும் மூன்று பேர் அங்கே இருப்பதாகவே கணக்கில் கொள்ளாத வண்ணம்,புத்தகத்தோடு ஒன்றி விட்டாள். அது அவள் சுபாவம்.. ஒரு நல்ல புத்தகமும், வினோதினியும் அவளுக்கு ஒன்று.
எப்படியோ, தூங்கியும் இருக்க வேண்டும். முழிப்பு தட்டியபோது நேரம் ஐந்து எனக்காட்டியது. படுத்து இருக்க பிடிக்காமல் எழுந்து கதவை திறந்து வெளியே வந்தாள்.
முகத்தை கழுவி விட்டு, வெளிக்கதவை திறந்து, பிடித்து .. சில்லென்று முகத்தில் உரசிய அதிகாலை காற்றை சுவாசித்து சற்றே மயங்கி நின்றாள்.

மே மாதம் என்பதால் சீக்கிரமே விடியல் எட்டிப்பார்த்தது.
"குட் மார்னிங்".. அவன் தான், அவனுடைய குரல் இயல்பாய் தொனித்தது. பதிலுக்கு அவள் சொல்லவில்லை. கைகளை கட்டி விறைப்பாக வெளியே பார்த்தபடியே நின்றாள்.
அதே மாதிரி கைகளை கட்டி, குறும்பு கண்களால், அளவிட்டபடியே மீண்டும் " குட்மார்னிங் " என்றான் அவன்.
பொறுமையற்று திரும்பி,பாருங்கள் மிஸ்டர் "காலையில் எனக்கு சண்டை போட கொஞ்சமும் மூட் இல்லை" என்றாள் அவள்.

"எனக்கும் அதே தான். இன்னும் கொஞ்ச நேர பயணம், நாம் ஏன் ப்ரெண்ட்ஸ் ஆயிட கூடாது ? "வினவினான் அவன்.
"வேண்டாம்" வெட்டி துண்டித்த மாதிரி பதில் வந்தது அவளிடம் இருந்து
அல்லாமல், விரோதம் பாராட்ட காரணம் ஒன்றும் இருப்பதாக தோன்றவில்லை " என்றான் அவன்.
கூடவே" நான் நரேந்திரன், வீட்டிலும்,நட்பு வட்டத்திலும் நரேன்" என்றான்.

"சுயபுராணத்தை யார் கேட்டது!"அசட்டையாக அவள்
" சுயபுராணமா, பெயரை, சொல்வதா! சரி கேட்க்காமலே அளந்து விட்டேன் போல, இப்போது நான் கேக்கிறேன் உங்களை என்னவென்று அழைப்பார்கள்?? "
காதில் வாங்காமல் எங்கோ பார்த்தபடி நின்ற நிலை மாறவில்லை அவள்

ஒரு நிமிர்வான அவளுடைய பிடிவாதம் அவனுக்கு பிடிக்கவே செய்தது.

அதற்குள் அந்த வழியை கடந்த சீட்டு பரிசோதகர்.. இவர்கள் இருவரையும் பார்த்தவர்,கடமையே கண்ணாக அறிவுரை வழங்கினார்.

" பாருங்கள் சார், இது மாதிரி வெளிக்கதவை திறந்து நின்று காதல் செய்யாதீர்கள், ஒரு நேரம் மாதிரி இருக்காது... மூடி வையுங்கள்.." இருக்கிற வேளையில் இவங்களை எல்லாம் மேய்ப்பது தனி வேலையா போய்டுச்சு" புலம்பியபடி நகர்ந்தார் அவர்.

அவர் தலை மறையும் போதே, நகை துலங்க அவன் சொன்னான். " பாவம், இந்த மனிதருடைய மனைவி " குறும்பில் கண்களும் சிரிக்க, சேர்த்து சொன்னான்.
" வீட்டில் இவ்வளவு தள்ளி நின்று தான் காதல் செய்வார் போல!! "
இதற்க்கு, கோவமாய் முறைத்து பார்க்க வேண்டும் என்று தான் அவள் நினைத்து இருந்தாள்..ஆனால், அவளையும் அறியாமல் கன்னங்களில் ரோஜாக்கள் பூத்துவிட்டன"
போறேன்.. மாதிரி எதோ புலம்பிவிட்டு அங்கே இருந்து நகர்ந்துவிட்டாள்.உண்மையில் இவன் அபத்தானவனே.இன்னும் கொஞ்ச நேரமே, அதுவரை அந்த கண்களையும், சிரிப்பையும் மறந்தும் பார்த்துவிட கூடாது.நான், ஒன்றும் நெகிழி இல்லை.. தனக்கு தானே உருப்போட்டுகொண்டாள்.

ரயில், ஸ்டேஷன் வந்தடைந்தது.. தனது தோள் பையுடனும், இழுவை பெட்டியுடனும் இறங்கி விட்டாள் சுரபி. மருந்துக்குக்கூட அவன் பக்கம் திரும்பினாள் இல்லை.. வேக நடையில், அந்த இடம் விட்டு நகரும் பொருட்டு எட்டுகளை வைத்தாள் தான்.

எனினும், எதோ ஒரு உள்ளுணர்வு முதுகில் துளைப்பது அவன் பார்வையாக இருக்குமோ, பார்ப்பானா? அன்றி தோளை குலுக்கி விட்டு தன் வழியில் போய்விடுவானா? தெரிந்து கொண்டுவிட வேண்டும் போல உந்தி தள்ளியது.

ஒரு முடிவுக்கு வந்தவளாக, நடை தளர்த்தி, திரும்பினாள் அவள், மீண்டும் அதிர்ந்தே விட்டாள் ..
அவள் பின்னோடு .. மிக அருகில் அவன்.

அவள் பார்வையில் அதிர்வை காணவும், கைகளை மேல தூக்கி சொன்னான் அவன்" இது நாள் வரையில், பெண்களின் பின்னோடு அலைகிறவன் இல்லை நான். இப்போ, என்னோட ஒன்னு மிஸ்ஸிங்,ஒரு வேலை உங்க லக்கேஜோடு கலந்து விட்டதோனு ஒரு சந்தேகம் அது தான்."

என் லக்கேஜோடு!!,என்ன மிஸ்ஸிங்?? குழப்பத்தில் அவள்..
நிதானமாக அவன் சொன்னது " என் நிழல், பயணம் வரை என் கூடவே இருந்தது.. இப்போது என்னை விட்டு உங்களோடு போகிறது" இதை சொல்லும் போது அவன் கண்கள் குறும்பில் சிரிக்கவில்லை.கவனத்தோடு ஒரு எதிர்பார்ப்பு மட்டுமே இருந்தது.

ஆயிரம் பேர் நடமாடும் ரயிலடியில், இரண்டு, இரண்டு.. நான்கு கண்களும் தனித்து, ஒரே சங்கதி பேசியது..
 

-► புவனம்
 

Wednesday, June 19, 2013

அத்விகா



உயிர் உலவிப் பதுமைகளைப்
புனைபவன் எவனோ
சற்றே கூடுதல் உரம் ஊற்றி
அத்விகாவென   செய்திட்டான்
அவளை

இதுகாறும் அவள்
தலைக்கு ஏற்றமிட்டதில் கனமில்லை

எனினும்
மேய்ப்பானை விஞ்சி
 தெறித்தோடிய செம்மறியின்
கண்களையொத்த
கடவுளின் நிறத்தில்
ஒழுகியது வெயில்

-புவனம் 

Monday, June 17, 2013

மகிழ் நனைந்து



நகரும் காட்சிகள் முட்டிச் சிரித்தன
பயணச் சீட்டுக்கு வயதெழும்பாத 
சிறுமியின் ஆர்ப்பரித்தலோடு

உச்சமேறித் திரிதலில்
தரைதட்டாத
சிற்றெறும்புக்கு
முளைத்த சிறகின் கண்

மெல்ல இமை தாழ்த்தி
நிலவிடுக்கில்
கடல் விழுங்கும்
சூரியனின்
மயக்கொளி விம்பம்

எரியா நெருப்பின்
புகைச்சரப் பூக்கள்
தீராநதியில்

புவனம் 

தி.ஜானகிராமனின்



சரஸ்வதி பூஜையன்று புத்தகம் படிக்க கூடாது என்பார்கள். ஆனால், அன்று ஒரு நாளுமில்லாத திருநாளாகப் புத்தகத்தின் மேல் வருகிற ஆசை !

கீழே கிடக்கிற - பல்பொடி மடிக்கிற - காகிதத்தையாவது எடுத்துப் படிக்க வேண்டும் என்ற மோகம்!

அப்படி ஒரு மோகம் அல்லவா பிறந்திருக்கிறது இன்று இந்த காவேரிமீது (ஆறு)

தி.ஜானகிராமனின் - அம்மா வந்தாள் நாவலில் இருந்து
மனப்பிசாசு வாசித்தது

Saturday, June 15, 2013

மற்றுமொரு

 

நேற்று உன்னோடான பேச்சுவார்த்தைக்குப் பின்
அரைமயக்கத்தில் இரைந்து கிடந்த
மௌனத்தைக் கூட்டிச் சேமிப்பிலிட்டது
மாயம்

பச்சைப் பதியனிட்டதோ
 பாசியைப் படரச்செய்ததோ

விசைந்து மண்ணூரித்
தடமேறிய நாகத்தின்
புடைத்த படிமமாய்

பிடரியில் குழறிய
வெப்பச் சலனக் கதையின்
மீள்வாசிப்பு ..

தொடரும்

-புவனம்

Friday, June 14, 2013

நானென்பதும்.. எனதென்பதும்




 சிறு வயதில் இருந்து எனக்கு மிகவும் பிடித்த குறள் .. ஒரு சிறந்த தலைவன் இத்தகையவனாய் இருத்தல்

"காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம் "

-காட்சிக்கு எளிமையும், கடுஞ்சொல் கூறாத இனிய பண்பாடும் உடைய அரசைத்தான் உலகம் புகழும். எம் அய்யன் மொழி ஊறிய கூற்று.

மிகையுணர்ச்சிக்கு தாழாதவனும், மென்னகை தவழும் முகத்தில் ஒளித் ததும்பும் கண்கள்,கூர் நுணுக்கம்,மிதம் இதைத் தான் ஒரு ஆணில் பெண் தேடுவது ... இது என் பார்வையில்

நல்ல ஆண் மகனாக, நல்ல கணவனாக இல்லாதவன் கூட கனவுறுதியாய் சிறந்த தந்தையாக விளங்கக்கூடும்..

என் அப்பாவைப்போல -- எல்லா பெண் பிள்ளைகளுக்கும் போலவே எனக்கும்.அப்பா தான் உலகத்தின் சிறந்த ஆண்மகன் என்றே எப்போதும் நினைப்பு .. அப்பாவில் இருந்து தான் பெண் அடுத்த ஆண்களை கூர்கிறாள்.

வீட்டின் மூத்தப் பெண் என்பதாலும் அப்பாவையே அடர்த்தியாக பார்த்து வளர்ந்ததாலும் பெரும்பாலும் அவர் குணத்தையே பிரதிபலிப்பவள் ஆகிப்போனேன்.

அப்பா ஒரு சிறந்த வாசிப்பாளர், சிறந்த மேடைப் பேச்சாளர்..

உயிர்மெய் எழுத்துக்கள் கற்றுத் தெளிந்த வயதில் நேரடியாக வாசிக்க பாடப்புத்தகம் அல்லாமல் கதைப்புத்தகம் தந்தார்..

பாடப்புத்தகம் ஒரு விதமான திணிப்பு .. கதைப்புத்தக வாசிப்பின் ருசியில் மொழியறிவு தானே கைவரப்பெறும் என்றபடி..

விரல் பிடித்து வரிகளில் நகர்த்தி எழுத்தெழுத்தாகக் கூட்டி வாசிக்கச் செய்வார்.. அம்புலிமாமா தான் முதன்முதலாய் வாசிக்க கையில் எடுத்த புத்தகம் .. இன்றளவும் அம்புலிமாமா,சந்தமாமா புத்தகங்கள் மனதில் நிழலாடும்..

பிறகு முழுக்கதையும் அவர் தன் பாணியில், குரலில், ஏற்ற இறக்கத்தோடு வாசித்துக் காட்டும் போது கண்முன்னே கதையின் உருவங்கள் மிதக்கும்..

வேகமாய் அதே சமயம் பொருள் உள்வாங்கி வாசிக்க சிறந்தப் பயிற்சி தந்தவர் அப்பா..

இப்படித்தான் அந்த வயதில் புனைவுக்கதைகளில் மூழ்கி முத்தெடுக்க விழைந்தது.

பட்டிமன்றம்,பேச்சுப்போட்டிகளில் கலந்துக் கொள்ளும் போது கண்ணாடியில் நம் முகத்தை நாமே பார்த்துப் பேச கற்றுக்கொடுத்தவர் அப்பா .. பிறகு மேடை ஏறியதும் எவர் முகமும் கண்ணுக்கு தெரியாது, தயக்கம் இல்லாமல் , வாய் குழறாமல் பேச்சு கைவருமென.

உணவு விஷயமும், நுணுக்கி ருசித்தே என்பது அப்பாவிடம் இருந்து தொற்றிக் கொண்டது.

சம்பிரதாயம் ,பண்டிகைகள் , பூஜை புனஸ்காரம் இதில் எதுவும் அப்பாவுக்கு விருப்பம் இருந்தது இல்லை .. எனவே வளர்ந்தச் சூழலில் எனக்கும் இது எதுவும் தெரிந்து இருக்கவில்லை.. பின்னாளில் தெரிந்துகொள்ள விரும்பவும் இல்லை..

வாழ்கையை எந்த வித திணித்தலும் இல்லாமல் அதன் போக்கில் நீந்த விடுவதே பிடிப்பு.

வீட்டில் சாமியோ பூஜையோ இல்லை என்றாலும் ஒரு கோவில் விடாமல் அழைத்துப் போயிருக்கிறார்.. கோவில் என்றால் பக்தி மார்கத்தையும் தாண்டி ஒரு ஈர்ப்பு இப்போதும்..

எங்கும், எப்போதும் புது புது இடங்களுக்கு பயணிப்பது அவருக்கு பிடித்தம்.அப்பா ஒரு ஊர் சுற்றிப் பறவை.

பள்ளிநாட்களின் விடுமுறையில் விதிவிலக்கில்லாமல் திரிவோம் குடும்பத்தோடு எங்கேனும்..

பௌர்ணமி நடு நிசியில் கடற்கரையில், குளிர் காற்று மோத, மண் குழைத்து கட்டிய குகைக்குள் கற்பனை எஸ்கிமோக்கள் கூட விளையாட எவருக்கும் வாய்க்குமெனில் .. அவர் என் வீட்டில் பிறந்தவரே.

வருடத்தின் எல்லா பௌர்ணமிகளும் கடற்கரையில் தான்..

கோடை இரவில் எந்த ஒரு குல்பி ஐஸ் வண்டியும் எங்கள் வீட்டு வாசலில் வியாபாரத்தை முடிக்காமல் நகர்ந்தது இல்லை.

புவன், கண்ணு என்ற அழைப்பும்.. அன்பின் இசைச்சொறிவும், நெடுந்தூர பயணமும், நகையொலிக்கும் வீடும், கேரளத்து எல்லை வாளையாறு வனப்பகுதியில், மலைமுகட்டின் உச்சியில்,தாமரைக்குள நடையில், கடற்கரையில் அப்பாவோடு பிள்ளைகள் நாங்கள் ஓடிப்பிடித்து விளையாடிய அந்த முன்பாதி நாட்களில் மீண்டும் பயணிக்க முடிந்தால்..

வேர் பெயர்ந்த ரேகைகள்
தூரத்தில் எங்கோ பொன்ஆம்பல் பூக்காட்டில்
உள்ளங்கைக்குள் கரைசலாய் நான்

வேரில் இருந்து விழும் நிழல்..

-புவனம்

Monday, June 10, 2013

வள்ளி மயிலாள்!



போகிறப்போக்கில் எச்சமிட்டுப்
பறந்ததொரு பறவையின்
கீழ் கணக்கில்
துளிர்த்தவள்
அந்திமந்தாரையின் தாய்

இருள் பேழைக்கு
ஒளியேற்றலுகறக் குறிப்பெழுத
நியந்தவனின் கண்த்தடத்தில்
கிளர்ந்தவள் அவள்

தடதடக்கும்
நிமிடங்களை   நெட்டித்தள்ளியபடி
நெடுந்தூரப்  பயணத்துக்கான
பெட்டியடுக்களில்
விட்டுப்போனதன்
அடைப்புக்குறிச் சொல்லாய்
ஆகிப்போனான் அவன்

கிளை தன்
சிறகுகளோடு
தற்கொலைத்ததின்
வீச்சம் ஏகியது
பிரிவு நுகர்க்  காற்று

புவனம் 

Friday, June 7, 2013

மகிழ் துஞ்சிய


வளர்பிறைத்  தேயும்
சித்திரத்தாளின்
வடிவுணர்ப்  புணர்ச்சி
மசியின் கைச்சூடென
மகிழ்சிறந்து
உயிர்நீவிப் படர்ந்த
பெருந்தீ

கழிமுகக் கூடலின்
நீர்பசை குடுவை
தீண்டாதெனினும்
பூங்குழை மிதப்பசைவு

ஒளிமுடங்கியதொரு
யாமத்தின் அடர்வில் 
புதுப்பெயல் துவலையாய்
பச்சை நரம்பூடி
பனி நித்திலப்
பிரியத்தைப்  பருகக்கொடுத்தே
தாகமூட்டும்  காதல்


*கழிமுகம் - ஆறு, கடலோடு கலத்தல்
புதுப்பெயல் - முதல் மழை
துவலை - குளிர்ந்த நீர்

-புவனம்
 

Tuesday, June 4, 2013

நித்திலப் பணிலம்



நெகிழ் விசும்பு ஊடிச்சொரிந்த
பிறை முத்தத்தில்
குழையும் மூங்கில் சுவர்

கதகதப்பு வேண்டி குளிர்மூட்டிச் சூரியனுக்கு
மலர் விடுத் தூது மடலின்
மகரந்த மினுக்கல்

மீட்டெடுத்தலில் சொட்டுச் சொட்டாய்
படர்ந்து தழுவிய வெய்யிலின்
நிழல் விழுந்த மோட்சம்

புலன் விகசிக்கும் தருணம் புரட்டி தோய்தலின்
மந்தகாசம்

உதிர்காலத்து இலைப்பேசி அந்தாதி நோக்கமாய் 
காதல் காசினி !

-- புவனம்  
 

 

Saturday, June 1, 2013

பௌர்ணமியின் நிழல்



நிசப்தத்தின் எதிரொலிப்பை
காப்பிட்டுக்  கட்டி  இருத்திக்கொள்ள  நிழல்
நேர்ந்துவிட்ட நோன்பு
ஓங்காரமாய் ..

வெற்றிடத்தை வெறிக்க
திராணியற்று
இலக்கிலியாய்
எங்கோ திரியும்
கப்பல் பறவை ..

கனமேறிப் போன
சுவாசத்தை
கழற்றக்  கைகூடாது
காற்றின் மிடறில்
கற்பூரம் !!

-புவனா கணேஷன்

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...